நான் ஏன் ஸ்தாபிக்கப்பட்ட மார்க்கத்துக்கு விரோதமாயுள்ளேன் Jeffersonville, Indiana, USA 62-1111E 1நன்றி, சகோ. நெவில். நீங்கள் உட்காரலாம். முதலாவதாக, இன்று எனக்கு அதிக வேலையிருந்ததால், வியாதியஸ்தர்களுக்கு ஜெபிப்பதற்ககாக எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு போக முடியாமல் போயிற்று. தனிப்பட்ட வியாதியஸ்தர் சிலரை நான் சந்தித்து அவர்களுக்காக ஜெபம் செய்ய வேண்டுமென்று குறிக்கப்பட்டிருந்தது. அவர்களில் ஒருவர் கனடாவிலிருந்து வந்துள்ளதாக பில்லி கூறினான். இரண்டு, மூன்று தனித்தனி இடங்களிலிருந்து அவர்கள் வந்துள்ளனர். அவர்கள் இங்கு வந்து, ஓட்டல்களிலும் விடுதிகளிலும் தங்குகின்றனர். ஆசியா, ஐரோப்பா மற்றும் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து இங்கு வரும் நபர்களை நான் சந்தித்து அவர்களுக்காக ஜெபிக்கிறேன். நாம் இங்குள்ளபோது, அவர்கள் ஒவ்வொரு நாளும் வந்த வண்ணம் இருக்கின்றனர். தனிப்பட்ட விதத்தில் பேட்டி காண்பதற்காக, அறுநூறுக்கும் அதிகமானவர்கள் பட்டியலில் எழுதப்பட்டு காத்துக் கொண்டிருக்கின்றனர் எனவே அது மிகவம் கடினமாகிவிடுகிறது. அதிகமாக நோய்வாய்பட்டவர்களையும், அவசரமாக ஜெபம் ஏறெடுக்கப்பட வேண்டியிருப்பவர்களையும் நான் உடனடியாக சந்திக்க முயன்று வருகிறேன். 2நான் தர்ம கர்த்தாக்களின் குழுவில் இருப்பதனால், சற்று நேரத்துக்கு முன்பு நாங்கள் கூட வேண்டியதாயிருந்தது, அதில் ஒன்றரை மணி நேரம் செலவாகிவிட்டது. அந்நேரத்தில் ஜெபம் ஏறெடுக்கப்பட குறிக்கப்பட்டவர் சிலர் இருந்தனர். அவர்கள் இப்பொழுது இங்கிருந்தால், அவர்களுக்காக ஜெபிக்க விரும்புகிறேன். ஜெபம் ஏறெடுக்கப்பட குறிக்கப்பட்டிருந்தவர் இப்பொழுது மேடையின் மேல் வருவார்களானால், பியானோ வாசிப்பவர், அது யாராயிருந்தாலும் “மகத்தான மருத்துவர் இப்பொழுது அருகிலுள்ளார், அனுதாபங்கொள்ளும் இயேசு'' என்னும் பாடலுக்கு சுருதி கொடுக்கட்டும். ஜெபிக்கப்பட வேண்டியவர்கள் எத்தனை பேர் என்று எனக்குத் தெரியாது. நீங்கள் தான் அந்த சகோதரர்கள் என்று நினைக்கிறேன். சகோதரரே, என் சரீரத்தில் நான் அதிக வேதனை அனுபவித்திருக்கிறேன். இயேசுவும் தம்முடைய சரீரத்தில் அதிக வேதனை அனுபவித்த காரணத்தால், அவர் ஏற்ற ஒரு மத்தியஸ்தராக இருக்கிறார். வேதனை அனுபவிக்கவே தேவனாகிய அவர் மாமிசமானார். வியாதியின் வேதனையை அவரால் சரீரத்தில் உணர முடிந்தது. அதற்காகவே அவர் தம்மை பலியாக ஒப்புக்கொடுக்க வந்தார். அவர் செய்த பணியை தொடர்ந்து செய்ய அவர் தமது சபைக்குப் பணித்திருக்கிறார். 3மருத்துவ தொழிலுக்கு நான் அதிக மதிப்பு கொடுக்கிறேன். அறுவை சிகிச்சை போன்றவைகளுக்கு, தேவன் அவர்களுக்களித்துள்ள தாலந்தைக் கொண்டு அவர்கள் உடலில் சில காரியங்களைச் செய்து, சொத்தை பல்லைப் பிடுங்கிவிடுகின்றனர். அதை நான் பாராட்டுகிறேன். ஆனால் அவர்களுடைய அறிவிற்கும் எட்டாத சில காரியங்கள் சில நேரங்களில் வந்து விடும்போது, அவர்களுக்கு என்ன செய்வதென்றே புரிவதில்லை. பாருங்கள்? அப்பொழுது மாமிசப் பிரகாரமாக நமக்கு உரிமையுள்ளது போன்று; நமது குடும்ப மருத்துவரிடம் நாம் செல்வதாக வைத்துக் கொள்வோம். அவர் ஒரு கிராம மருத்துவராயிருந்து, இரவில் விளக்கைக் கையில் பிடித்துக் கொண்டு நடந்து வந்து, உங்களுக்கு சிகிச்சை செய்ய முயல்கிறார். அவரால் முடியாவிட்டால், அவரை விட அதிகம் தெரிந்த சிறப்பு மருத்துவரிடம் உங்களை அனுப்புகிறார், அந்த சிறப்பு மருத்துவருக்கும் ஒன்றும் செய்ய முடியாவிட்டால், நமக்கு வேறொருவர் மகத்தான மருத்துவர் உள்ளார் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவர் ஒரு போதும் கைவிடார், இந்த மகத்தான மருத்துவர் கைவிடார். ஏனெனில் அவர் சிருஷ்டிகர். அவர் நமக்கு ஒரு வழியை ஏற்படுத்தியிருக்கிறார். 4எனக்கு சுகமாக்கும் வல்லமை இருக்குமானால், நான் உங்களை சுகப்படுத்துவேன். அப்படி செய்வதில் நான் மகிழ்ச்சி கொள்வேன். ஆனால் என்னிடம் சுகமாக்கும் வல்லமை கிடையாது. வேறெந்த மனிதனுக்கும் சுகமாக்கும் வல்வமை கிடையாது. ஆனால் வியாதியஸ்தர்களுக்காக ஜெபம் செய்யும்படி நாம் கிறிஸ்துவிடமிருந்து கட்டளை பெற்றிருக்கிறோம். ஏனெனில் அவர் ஏற்கனவே சுகமாக்கும் வல்லமையை டெபாசிட்டாக வங்கியில் செலுத்திவிட்டார். பாருங்கள்? எனவே அவர் கையொப்பமிட்டுள்ள காலியான காசோலையை நாம் பூர்த்தி செய்து அதை பெற்றுக் கொள்ள வேண்டும். “நீங்கள் என் நாமத்தினால் பிதாவைக் கேட்டுக் கொள்வது எதுவோ...'' (யோவான். 15:16). அது தான் காலியான காசோலை. ”நீங்கள் என் நாமத்தினால் பிதாவைக் கேட்டுக் கொள்வது எதுவோ, அதை உங்களுக்குத் தந்தருளுவேன்''. என்னே ஒரு வாக்குத்தத்தம்! அவர் ஒரு போதும் தவறமாட்டார். உலகின் பல்வேறு பாகங்களிலுள்ள என் சகோதர சகோதரிகளுக்கு, இயேசுவின் இரத்தத்தினால் எழுதப்பட்ட காசோலையை தேவனுடைய வங்கியில் செலுத்தி, இதை பெற்றுக் கொள்ள நான் உதவி செய்திருக்கிறேன். அது மிகவும் வெற்றிகரமாக அமைந்துவந்துள்ளது. அவர் ஏற்கனவே அதை செலுத்திவிட்டார், அந்த டெபாசிட் தொகை ஏற்கனவே இருப்பதால்; “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார், அவருடைய தழும்புகளால் குணமானோம்'' (ஏசா. 53:5, 1 பேது. 2:24). பாருங்கள், அது ஏற்கனவே முடிந்துவிட்டது. உங்கள் விசுவாசத்திற்காக நாங்கள் இன்றிரவு மகிழ்ச்சியுறுகிறோம். 5சகோதரன் ஒருவர் கனடாவிலிருந்து தொலை தூரம் இங்கு வந்துள்ளதாக பில்லி என்னிடம் கூறினான். அது சரி தானே? நீங்கள் தான் கனடாவிலிருந்து வந்துள்ள சகோதரனா? சகோதரனே, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? இந்தியானாவிலுள்ள கென்டால் வில்லிலிருந்து ஃபோர்ட்வேயினிலிருந்து. ஃபோர்ட் வேயினில் தான் எனக்கு விவாகமானது. எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது. ரெடிகார் கூடாரத்தில் எனக்கு அநேக கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. அது எங்குள்ளது என்று உங்களுக்குத் தெரியுமென்று நினைக்கிறேன். நான் போதக மாணாக்கனாக இருந்த போது, ரெடிகார் கூடாரத்தில் பால் ரேடர் என்பவரின் பாதத்தில் அமர்ந்து கற்றுக் கொண்டது என் நினைவுக்கு வருகிறது. சகோ. பால் பிரபலமானவர். அவ்வாறே சகோ. ரெடிகாரும் கூட. அவர் மிகுந்த விசுவாசமுடையவர். இன்றிரவு அவர்களுடைய ஆத்துமாக்கள் இளைப்பாறிக் கொண்டிருக்கின்றன. அப்பொழுது நான் சிறு பையனாக இருந்தேன். அவர்கள் விட்டுச் சென்றதை இயேசு தமது சபைக்காக விட்டுச் சென்றதை நான் தொடர்ந்து செய்து வருகிறேன். 6நான் பெற்றுள்ள விசுவாசம் அனைத்தையும் கொண்டு உங்களுக்காக நான் ஜெபம் செய்ய வருகிறேன். ஏதோ யதேச்சையாய் நான் வருவதில்லை. நாம் அவ்விதம் இதை அணுகுவதில்லை. இல்லை, அது சரியல்ல. தேவன் அதை வாக்களித்துள்ளார் என்பதை உறுதியாய் அறிந்தவர்களாய், நாம் கேட்டதை பெற்றுக் கொள்வோம் என்னும் விசுவாசத்துடன் நாம் வருகிறோம். தேவன் அதை வாக்களித்துள்ளார் என்னும் உறுதியை நம் இருதயங்களில் கொண்டவர்களாய், சகோதரர்களாகிய நீங்களும் உங்கள் விசுவாசத்தை பலிபீடத்தின் மேல் வைக்க முயன்று, உங்களால் கூடுமான எல்லாவற்றையும், நீங்கள் செய்த பின்பு, நானும் உங்களுடன் சேர்ந்து என்னுடைய விசுவாசத்தை உங்களுடைய விசுவாசத்துடன் பலிபீடத்தின் மேல் வைக்க முயல்கிறேன். பாருங்கள்? வானத்தின் பரப்பில் நமக்கு ஒரு பெரிய பலிபீடம் உண்டு. அந்த பலிபீடத்தின் மேல் நமது பலியாகிய தேவனுடைய குமாரன் கிடத்தப்பட்டிருக்கிறார். பாருங்கள்? அது இரத்தம் தோய்ந்த பலி. அதை கௌரவிக்காமல் தேவனால் இருக்க முடியாது. ஏனெனில் அது அவருடைய வார்த்தை. “இவர் என்னுடைய நேச குமாரன், இவருக்குச் செவி கொடுங்கள்.'' (மத். 17:5). 7நான் நமது மூப்பராகிய சகோ. நெவில்லை முன்னால் வரும்படி கேட்டுக் கொள்ளப் போகிறேன். சபை முழுவதும்... இது உங்கள் சகோதரன் அல்லது உங்கள் கணவர், உங்கள் மகன், உங்கள் தந்தையாயிருந்தால், உங்களுக்கு எத்தகைய அனுதாபம் ஏற்பட்டிருக்கும்? இவர்கள் வேறு யாருக்கோ அப்படிப்பட்டவர்களாயிருக்கின்றனர். நாம் நமக்குள்ள எல்லா உத்தமத்தோடும் இந்த சகோதரர்களுக்காக தேவனை அணுகுவோம். நாம் தலை வணங்குவோம். கிருபையுள்ள பரலோகப் பிதாவே, உமது கிருபை என்னும் பீடத்தின் மூலம் எங்களை உமது சமுகத்திற்கு கொண்டு வருகிறோம். இப்பூமியில் நாங்கள் மரத்தினால் செய்யப்பட்ட ஒரு பீடத்தின் மேல் நின்று கொண்டிருந்த போதிலும், எங்கள் விசுவாசமானது, மேலேயுள்ள எரிந்து கொண்டிருக்கும் பலிபீடத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அங்கே தேவனுக்கு முன்பாக சுகந்த வாசனையாக இயேசு கல்வாரியிலே இரத்தம் தோய்ந்த பலியாக தம்மை ஒப்புக் கொடுத்த அவர் எல்லா வியாதிகளின் மேலும், மரணத்தின் மேலும், பாதாளத்தின் மேலும் ஜெயங்கொண்டு, உயிர்த்தெழுந்து, பரலோகத்திற்கு ஏறி, அவருடைய மகத்துவத்தின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். நாங்களும் எங்கள் விசுவாசத்தின் மூலமாய், தேவனுடைய கிருபையினால் எங்களை அங்கு உயர்த்தி, அந்த பலிபீடத்தை வானத்தையும் பூமியையும் படைத்த அந்த மகத்தான சிருஷ்டிகரை நோக்கி, “கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நாங்கள் அணுகும் போது, எங்களை ஏற்றுக் கொள்ளும், கர்த்தாவே'' என்று வேண்டுகிறோம். 8இங்கு நமது சகோதரர்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் அமெரிக்காவிலுள்ள ஃபோர்ட்வேயினிலிருந்து வந்திருக்கிறார். மற்றவர் அனைவரும் கனடாவிலிருந்து பயணம் செய்து இந்த பக்தியுள்ள நேரத்தில் பங்கு கொள்ள வந்துள்ளனர். ஆண்டவரே, இது மரணத்துக்கும் ஜீவனுக்கும் இடையேயுள்ள ஒன்று. இங்கு இருவர் இன்னும் வாலிப பருவத்தில் உள்ளனர். அவர்கள் உமக்கு செய்ய வேண்டிய சேவை இன்னும் அதிகம் உள்ளது. ஆண்டவரே, இவ்விரு வீரரும் உம்மை விசுவாசிக்கும் கிறிஸ்தவர். சத்துரு அம்பை எய்துள்ளான். அந்த விஷமுள்ள அம்பு அவர்களுடைய சரீரத்தை எங்கோ தாக்கியுள்ளது. இப்பொழுது அவர்கள் தேவனுடைய கிருபை என்னும் மருத்துவ விடுதியில் சுகமடைந்து, மீண்டும் அவர்களுடைய கேடயத்துடன் யுத்த களத்துக்கு புறப்பட்டுச் சென்று போர் புரிய வேண்டுமெனும் எண்ணத்துடன் வந்துள்ளனர். ஆண்டவரே, எங்களுடன் ஜெபம் என்னும் போர் வீரர்களைச் சேர்ந்து கொள்ள அவர்கள் வந்துள்ளனர். நாங்கள் ஒன்று கூடி சத்துருவை சந்திக்கப் புறப்படுகிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, அவர்களைப் போகவிடு. அவர்களைப் போக விடும்படி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கட்டளையிடுகிறோம். அவர்கள் யுத்தத்தில் வீரர்கள், உமது தாசன் என்னும் நிலையில் நான் முன் சென்று, போர்க்களத்திலுள்ள நமது தளபதியாகிய ஆண்டவர், ''வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்'' என்று கூறியுள்ளதையும் (மாற்.16:18), ''விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்'' என்பதையும் (மாற். 16:17) விசுவாசித்து அவர்கள் மேல் கைகளை வைக்கிறேன்.“ இதை நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் செய்கிறேன். இந்த சகோதரனின் சரீரத்தை கட்டிப் போட்டிருக்கும் வியாதியின் வல்லமையே, இயேசுவின் நாமத்தினாலே அவரை விட்டு வெளியே வா, இந்த சகோதரனின் சரீரத்தை கட்டிப் போட்டிருக்கும் வியாதியின் வல்லமையே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவரை விட்டு வெளியே வா. 9சர்வ வல்லமையுள்ள தேவனே, வானத்தையும் பூமியையும் படைத்தவரே, நித்திய ஜீவன் காரணரே, நன்மையான எல்லா ஈவுகளையும் அளிப்பவரே, நாங்கள் ஆசிர்வதித்த இவர்கள் மேல் உமது ஆசிர்வாதத்தை அனுப்பும். ''இந்த மலையைப் பார்த்து, சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும்“ என்று வேதத்தில் எழுதப்பட்டுள்ளது (மாற். 11:23). இவர்களுடைய சரீரத்திலிருந்து வியாதி போய்விட்டது என்று விசுவாசிக்கிறேன். அது அப்படியே ஆகக்கடவது. ஆமென். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீங்கள் விடுதலையானீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீங்கள் விடுதலையானீர்கள் என்று விசுவாசிக்கிறேன். ஆமென். சபையும் அப்படி விசுவாசிக்கிறது அல்லவா? அப்படியானால், அது அப்படியே ஆகக்கடவது. 10இங்கு வேறு யாராகிலும் ஜெபத்திலே நினைவு கூரப்பட விரும்பினால், உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா? சரி, நீங்கள் அங்கு ஒருவர் மேல் ஒருவர் கைகளை வைத்துள்ள இந்நேரத்தில் அவரை நாம் அணுகுவோம் ''விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்'' (மாற், 16:17). மிகவும் பரிசுத்தமுள்ள தேவனே, விசுவாசத்தினால் நாங்கள் இயேசுவைக் காண்கிறோம். அவர் பிரசன்னராகி இங்கு நின்று கொண்டிருக்கிறார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். அவர் தமது வார்த்தையைக் கண்காணிக்கிறவராயிருக்கிறார். அவர், ''இரண்டு அல்லது அதற்கதிகமான பேர் என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்'' என்று வாக்குரைத்துள்ளார். (மத் 18:20) பரலோகப் பிதாவே, இப்பொழுதும் அவர்கள் கரங்களைக் கோர்த்து, ஒருவர் மேல் ஒருவர் கரங்களை வைத்திருக்கும் இவ்வேளையில், ஆண்டவரே, சர்வ வல்லமையுள்ள தேவனின் வல்லமை இந்த ஜனங்களைத் தொடுவதாக. “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும். வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்'' என்பதே நீர் சபைக்கு அளித்த கடைசி கட்டளை (மாற். 16:17,18). நீர் அதை வாக்களித்துள்ளீர், நாங்கள் அதை விசுவாசிக்கிறோம். அது நிறைவேறிவிட்டது. அதற்காக உம்மை நாங்கள் துதிக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தேவனுடைய வல்லமை, இந்த உறுமால்களை வியாதியஸ்தருக்காகவும் தேவையுள்ளோருக்காகவும் அபிஷேகம் செய்வதாக. அவை வெளியே அனுப்பப்பட்டு, வியாதியஸ்தர் மேல் வைக்கப்படும்போது, அவர்கள் சுகம் பெறுவார்களாக. அவர்கள் பரி. பவுலின் சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டு வந்து ஜனங்களின் மேல் போட்ட போது, பொல்லாத ஆவிகள் அவர்களை விட்டுப் புறப்பட்டன, ஜனங்கள் வியாதி நீங்கி சுகம் பெற்றனர் என்று வேதம் கூறுகிறது. (அப். 19:12). பிதாவே, நாங்கள் பரி. பவுல் அல்ல என்பதை அறிவோம். ஆனால் நீர் இன்னும் இயேசுவாயிருக்கிறீர். உமது மகிமைக்கென்று இந்த வேண்டுகோளை அருளுமாறு ஜெபிக்கிறோம். 11ஒலிநாடாக்கள் இயங்குகின்றனவா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. இல்லையென்றால் அதை இப்பொழுதே இயக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். அதற்கான 'சுவிட்ச்' மேலேயுள்ளது, இன்றிரவு உங்களை நான் களைப்புறச் செய்யமாட்டேன் என்று நம்புகிறேன். நான் அரை மணிநேரம் அல்லது முப்பத்தைந்து நிமிடங்கள் முன்னதாகவே தொடங்குகிறேன். இது ஒரு ஞாயிறு பள்ளி பாடம். என் இருதயத்தில் உள்ளதை ஒலி நாடாவில் பதிவு செய்தால் நலமாயிருக்குமென்று நினைக்கிறேன். நாம் ஒரு புது கூடாரத்துக்குள் செல்லவிருக்கிறோம், ஒரு புது கூடாரத்துக்குள், எல்லாமே புதிது. 12நான் சில வேத வாக்கியங்களைப் படிக்க விரும்புகிறேன். என்னோடு கூட நீங்களும் படிக்க விரும்பினால், நான் 1 சாமுவேல் 8ம் அதிகாரம், 4ம் வசனம் தொடங்கி 10ம் வசனம் முடிய படிக்க எண்ணியுள்ளேன். பின்பு, நேரத்தை மிச்சப்படுத்த, 19ம், 20ம் வசனங்கள், வேத வாக்கியங்களும் குறிப்புகளும் எழுதியுள்ள அநேக தாள்களை வைத்திருக்கிறேன். உங்களிடம் பேனாவோ அல்லது பென்சிலோ, காகிதமும் இருந்து, நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால், அப்படியே செய்யலாம். இல்லையென்றால் திரு. மக்கையர் (Mr. Maguire) என்பவரிடம் இது பதிவு செய்யப்பட்ட ஒலி நாடாக்கள் கிடைக்கும். இந்த ஒலிநாடாவை நான் ஊழியக்காரர்களுக்கு பிரதிஷ்டை செய்ய விரும்புகிறேன், என்னைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ள போதகர்களுக்கு, முக்கியமாக ஸ்தாபனங்களிலுள்ள சகோதரருக்கு. அநேகமாக அவர்கள் எல்லோருமே ஸ்தாபனங்களைச் சேர்ந்தவர்களே. 13இன்றிரவுக்கான என் பொருள்: ''நான் ஏன் ஸ்தாபிக்கப் பட்ட மார்க்கத்துக்கு விரோதமாயுள்ளேன்'' என்பதாகும். அதற்குப் பின்னணியாக, இதை உறுதியாக வேதப் பூர்வமாக்க, சில வசனங்களை நான் படிக்கப் போகிறேன். நான் 1சாமுவேல் 8: 4-10, பிறகு 19-20 வசனங்களைப் படிக்க விரும்புகிறேன். நான் கண்ணால் காணும் கூட்டத்தினரே, இந்த வேத வாக்கியங்களை நீங்கள் குறித்துக் கொண்டு, வீட்டிற்கு சென்று இவைகளைக் கவனமாய்ப் படிப்பீர்களென நம்புகிறேன். இந்த ஒலிநாடாவை கேட்கும் சகோதரரே, உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றை இந்த ஒலிநாடாவில் நீங்கள் கேட்க நேர்ந்தால், அதை நிறுத்திவிடாமல், தேவனைத் தேடி, அது வேத பூர்வமானதா என்று அறிந்து கொள்ளும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். இது இந்நேரத்துக்குரிய செய்தியின் நிமித்தம் நம் மேல் விழுந்த கடமையாகும். எல்லா சபைகளிலும் கிறிஸ்தவர்கள் உள்ளனர் என்று நான் நம்புகிறேன். நான் கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக எதையும் பேசவில்லை. நான் இது வரை செய்துள்ள காரியங்களும், கூறினவைகளும், பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலினால் மாத்திரமே செய்யப்பட்டவையாகும். 14இப்பொழுது நாம் 1சாமுவேல் 8ம் அதிகாரம் 4ம் வசனம் தொடங்கி 10ம் வசனம் முடிய வாசிப்போம்: “அப்பொழுது இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் கூட்டங் கூடி, ராமாவிலிருந்து சாமுவேலினிடத்தில் வந்து. இதோ, நீர் முதிர்வயதுள்ளவரானீர்; உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை; ஆகையால் சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்த வேண்டும் என்றார்கள். எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சொன்ன வார்த்தை சாமுவேலுக்குத் தகாததாய்க் காணப்பட்டது. ஆகையால் சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான். அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி: ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள். நான் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப் பண்ணின நாள் முதல் இந்நாள் மட்டும் அவர்கள் என்னைவிட்டு, வேறே தேவர்களைச் சேவித்து வந்த தங்கள் எல்லாச் செய்கைகளின்படியும் செய்தது போல, அவர்கள் உனக்கும் செய்கிறார்கள். இப்போதும் அவர்கள் சொல்லைக் கேள்; ஆனாலும் உன் அபிப்பிராயத்தைக் காட்டும்படி அவர்களை ஆளும் ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் திட சாட்சியாய்த் தெரியப்படுத்து என்றார். அப்பொழுது சாமுவேல், ஒரு ராஜா வேண்டும் என்று தன்னிடத்தில் கேட்ட ஜனங்களுக்குக் கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் சொல்லி'' இப்பொழுது, அதன் முடிவை அறிய 19, 20 வசனங்களைப் பார்ப்போம். “ஜனங்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனதில்லாமல் அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும்.” சகல ஜாதிகளையும் போல நாங்களும் இருப்போம். எங்கள் ராஜா எங்களை நியாயம் விசாரித்து, எங்களுக்கு முன்பாகப் புறப்பட்டு, எங்கள் யுத்தங்களை நடத்த வேண்டும் என்றார்கள்.'' படித்த இந்த வசனங்களுடன் கர்த்தர் தாமே தமது ஆசீர்வாதத்தை கூட்டுவாராக. இது ஞாயிறு பள்ளி வகுப்பு என்னும் நிலையில் நீங்கள் தேவனுடைய வார்த்தையை அதிக கவனமாய் கேட்க வேண்டுமென்று விரும்புகிறேன். 15சில சமயங்களில், சபைகளில் போதிக்கப்பட்டவைகளுக்கு முரணான ஏதாவதொன்றை, அச்சபையைச் சேர்ந்தவர் கேட்க நேர்ந்தால், அது அவர்களை இடறப் பண்ணுகிறது. உதாரணமாக, இங்கு அமர்ந்துள்ள என் நண்பர் ஒருவர் அன்றொரு நாள் என்னிடம், ''சகோ. பிரான்ஹாமே, உங்கள் மீது நான் அதிக நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் நீங்கள் நித்திய நரகம் என்று ஒன்றில்லை எனக் கூறின போது, என் இருக்கையிலிருந்து மயங்கி விழுந்துவிடுவேனோ என்று எனக்குத் தோன்றினது. அந்த மனிதன் நிச்சயமாகத் தவறு செய்துவிட்டார் என்று எண்ணினேன். நீங்கள் சற்று அமைதியாயிருந்துவிட்டு. 'ஒரே வகை நித்திய ஜீவன் மாத்திரமேயுள்ளது. அது தேவனிடத்திலிருந்து வருகிறது' என்று கூறினீர்கள்'' என்றார். 16நித்திய நரகம் என்று ஒன்றுண்டு என்பதற்கு ஆதாரமாக வேத வாக்கியம் எதுவுமில்லை. ஏனெனில் 'நித்தியம்' என்னப்படுவதற்கு தொடக்கமுமில்லை முடிவுமில்லை. ''நரகம் பிசாசுக்காகவும் அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்டது'' என்று வேதம் கூறுகின்றது. (மத். 25:41). எனவே அது நித்தியமானதல்ல. அது இல்லாமலிருந்த ஒரு காலம் இருந்தது. அது மறுபடியும் இல்லாமல் போகும் காலம் ஒன்று வரப் போகின்றது. அநேக காலங்களாக அதிலுள்ளோர் அக்கினியால் வாதிக்கப்படுவர். ஆனால் முடிவில் அது முடிவடையும். ஏனெனில் நரகம் நித்தியமானதல்ல. நித்திய நரகம் என்று ஒன்றிருக்குமானால், அதில் வாழ உங்களுக்கு நித்திய ஜீவன் அவசியமாயிருக்கும். அது நித்திய நரகமாயிருக்குமானால், அது எல்லா காலங்களிலும் இருந்திருக்க வேண்டும், நீங்களும் எல்லா காலங்களிலும் நரகத்தில் இருக்க வேண்டும். பாருங்கள், அப்படிப்பட்ட ஒன்று கிடையாது. எனவே 'நித்தியம்' என்பது தொடக்கமும் முடிவும் இல்லாத ஒன்று. ஒரே வகை நித்திய ஜீவன் மாத்திரமேயுள்ளது. அது தேவனுக்குள் இருக்கிறது. அது 'சோ' (Zoe) என்னும் கிரேக்க சொல்லிலிருந்து எடுக்கப்பட்டது. அதற்கு 'தேவனுடைய சொந்த ஜீவன்' என்று பொருள், நாம் தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறக்கும்போது, 'தேவனுடன் நித்தியமாகிவிடுகின்றோம். ஏனெனில் அப்பொழுது நாம் அவருடைய ஜீவனின் ஒரு பாகத்தைக் கொண்டிருக்கிறோம். அது நம்மை தேவனுடைய குமாரர்களும் குமாரத்திகளுமாக செய்துவிடுகிறது. அப்பொழுது நாம் நித்திய ஜீவனை அடைந்துவிடுகிறோம். நமக்குள்ள அந்த ஜீவனைக் கொண்டு தேவன் கடைசி நாளில் நமது சரீரத்தை எழுப்புவார். நமக்குள் இருக்கும் தேவனுடைய ஆவி நம்மை உயிரோடெழுப்புகிறது. ஏனெனில் கிறிஸ்துவுக்குள் இருந்த கிறிஸ்துவின் ஆவி தான் நமது சரீரங்களை உயிர்ப்பித்து, நம்மை எழுப்பி, அவரோடு கூட மகிமையில் உட்காரும்படி செய்து, அவரோடு கூட ஆளுகை செய்ய வைக்கிறது. 17இப்பொழுது நாம் பொருளுக்கு வருவோம். இத்தனை ஆண்டுகள் நான் கடந்து வந்துள்ளேன். இந்த கூடாரமும் இது வரை நிலைத்து வந்துள்ளது. நான் ஏறக்குறைய முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இந்த ஜெபர்ஸன்வில்லில் டாக்டர் ராய். ஈ. டேவிஸ் என்பவரால் மிஷனரி பாப்டிஸ்டு சபையில் குருவானவராக அபிஷேகம் பண்ணப்பட்டேன். சிறிது காலம், சில மாதங்கள், அந்த ஸ்தாபனத்தில் நான் பணியாற்றினேன். அப்பொழுது சபையில் வேத ஆதாரமற்ற ஒன்று எழும்பினது, அதை என்னால் செய்ய முடியாது என்று அவரிடம் கூறினேன், அவர், “இதை செய்ய வேண்டும், இல்லையேல்'' என்றார். நான் செய்ய முடியாதென்று கூறி வந்துவிட்டேன். ஒன்றை நான் விசுவாசிக்கிறேன், இது தேவனுடைய வார்த்தையென்று. மிகச் சிறந்த போதகரான அவரிடம், ''இதை நீர் தேவனுடைய வார்த்தையில் காண்பிக்க முடியுமா?'' என்று கேட்டேன். அவர், ''அது எங்களுடைய போதகம்'' என்றார். நான், ''தேவனுடைய வார்த்தையில் அதை காண விரும்புகிறேன்'' என்றேன். 18நான் ஒரு ஸ்தாபனத்தை சேர்ந்திராத காரணத்தால் ஸ்தாபனங்களுக்கு விரோதமாயிருக்க நினைக்கவில்லை. இன்று நான் பிரசங்கித்துக் கொண்டிருக்கும் ஸ்தாபனங்களிலுள்ள என் சகோதரர்களுக்கு நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். ஏறக்குறைய எல்லா ஸ்தாபனங்களிலிருந்தும், முக்கியமாக பூரண சுவிசேஷ கூட்டத்தாரிடமிருந்து, நான் அழைப்பை பெற்றுள்ளேன்; மற்ற சபைகளிலிருந்தும் கூட. அவர்களுடைய ஐக்கியத்தில் சேர்ந்து கொள்ளும்படி நான் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறேன். ஆனால் நானோ சுயாதீனமாக இருந்துவிட்டேன். ஏனெனில் எனக்குள்ள வரம் ஒரு கூட்டத்தாருக்கு மாத்திரம் உபயோகமாயிருக்க நான் விரும்பவில்லை. தேவன் எனக்கு அளித்துள்ள அந்த வரம் அதாவது வியாதியஸ்தர்களுக்கு ஜெபித்தல் என்பது, ஒவ்வொரு ஸ்தாபனத்திலுள்ள தேவனுடைய பிள்ளைகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். அவர்கள் இன்னின்ன ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும் காரணத்தால் அவர்களுக்கு ஜெபம் செய்யக் கூடாது என்று அவர் ஒரு போதும் என்னிடம் கூறினதில்லை. கர்த்தர் மனிதருடைய இருதயத்தைப் பார்க்கிறார். 19முதலாவதாக, நான் ஸ்தாபனங்களைச் சேராமல் அவர்களுக்கு விரோதமாயுள்ள காரணம் என்னவெனில், கிறிஸ்தவ ஸ்தாபனங்கள் வேத ஆதாரமற்றவை என்று நான் விசுவாசிக்கிறேன். ஸ்தாபனங்களை ஏற்படுத்திக் கொள்வது வேத ஆதாரமற்றது. ஒழுங்கின்மையானது என்பதை தேவனுடைய கிருபையைக் கொண்டு இன்றிரவு நிரூபிக்க நான் முயல்கிறேன். முதலாவதாக 'மார்க்கம்' (Religion) என்று நாம் அழைக்கிறோமே. அந்த வார்த்தைக்கு, 'போர்வை' (Covering) என்று அர்த்தம், ஏதாவதொன்றை மறைப்பது. ஆதாமுக்கு ஒரு மார்க்கம் இருந்தது. ஆனால் அவன் அதை அத்தி இலைகளினால் அவனுக்கென்று உண்டாக்கிக் கொண்டான். எனவே அது கிரியை செய்யவில்லை. அவன் ஒரு தத்துவத்தை (theory) ஏற்படுத்திக் கொண்டு, தப்பிக்க ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள முனைந்தான். அவன் உண்டாக்கிக் கொண்ட ஒன்றின் மூலம் அவன் இரட்சிப்பை அடைய முயன்றான். ஆனால் தேவனோ, ஆதாம் முதற்கொண்டு இன்று வரை ஏற்படுத்தப்பட்டுள்ள கடைசி ஸ்தாபனம் வரைக்கும் உள்ள அனைத்து ஸ்தாபனங்களையும் நிராகரித்துவிட்டார். அவர் ஒருக்காலும் அதை அங்கீகரிக்கவில்லை. தேவனுடைய கிருபையைக் கொண்டு, அதை இன்று வேதத்திலிருந்து நாம் நிரூபிப்போம். மார்க்கம் என்பது ஒன்றை மறைக்கும் போர்வையே. ஆதாம் தனக்கென்று அத்தி இலைகளினால் ஒரு மறைப்பைக் தானாகவே உண்டாக்கிக் கொண்டான். அவன் தானாகவே ஒன்றை செய்ய வேண்டுமென்று முயன்றான். ஆனால் கர்த்தருக்கோ மரணம், ஒரு பலி அவசியமாயிருந்தது. 20மார்க்கத்துக்கும் இரட்சிப்புக்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு. மார்க்கம் என்பது போர்வை. பாருங்கள்? ஆனால் இரட்சிப்பு என்பது பிறப்பு, தேவனுடைய ஈவு. இரட்சிப்பு என்பது பிறப்பு, தேவனுடைய ஈவு. எந்த ஒரு மனிதனும் அல்லது குழுவும் சுய முயற்சியினால் அதை அடைய முடியாது. அது தேவன் தனிப்பட்ட நபருக்கு அளிக்கும் ஈவாகும். உலகம் உண்டாவதற்கு முன்னமே, நித்திய ஜீவன் என்னும் ஈவை தனிப்பட்ட நபர் ஒவ்வொருவருக்கும் தேவன் நியமித்திருந்ததாக வேதம் கூறுகின்றது. இவ்வுலகிற்கு வரப்போகும் அந்திக்கிறிஸ்து, உலகத் தோற்றத்துக்கு முன்பே ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத அனைவரையும் மோசம் போக்குவான் என்று வேதம் வெளிப்படுத்தின விசேஷத்தில் கூறுகிறது. (வெளி: 13:18). பார்த்தீர்களா? தேவன் தமது முன்னறிவின் மூலம் யார் வருவார்கள் என்றும், யார் வரமாட்டார்கள் என்றும் அறிந்திருந்தார். வரயிப்பவர்களுக்கு வழியை உண்டு பண்ண கிறிஸ்து இறங்கி வந்தார். பாருங்கள், மற்றவர்கள் வரமாட்டார்கள் என்று அறிந்தவராய். 21அவர் தேவனானால், அவர் முடிவற்றவராக (infinite) இருக்க வேண்டும். அவர் சர்வ வல்லமை (omnipotent) பொருந்தியவராக இராமல், முடிவற்றவராக இருக்க முடியாது. அவர் சர்வ வியாபியாக (omnipresent) இராமல், சர்வ வல்லமை பொருந்தியவராக இருக்க முடியாது. அவர் சர்வமும் அறிந்தவராக (omniscient) இராமல், சர்வ வியாபியாக இருக்க முடியாது. பாருங்கள், இவையனைத்தும் அவரைத் தேவனாக்குகிறது. எனவே அவருக்கு ஆதி முதல் அந்தம் வரை எல்லாம் தெரியும். யார் வருவார்கள் என்றும், யார் வர மாட்டார்கள் என்றும் அவர் அறிந்திருந்தார். அநேகர் வருவார்கள் என்று அவர் அறிந்திருந்தார். எனவே வரயிப்பவர்களுக்கு பிராயச் சித்தமாக அவர் இயேசுவை அனுப்பினார். நம்முடைய கிரியைகளுக்கும் அதற்கும் எவ்வித தொடர்புமில்லை. இயேசு, “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்'' (இறந்த காலம்) என்றும், (ஆங்கிலத்தில் 'hath giver: அதாவது 'கொடுத்த யாவும்' என்று இறந்த காலத்தில் எழுதப்பட்டுள்ளது. யோவான் 6: 37 - தமிழாக்கியோன்), ''என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்'' (யோவான் 6: 44) என்றும் கூறினார். பாருங்கள்? இவையனைத்தும் தேவனுடைய சிந்தையில் இருந்தன. 22நீங்கள், “சகோ. பிரான்ஹாமே, நான் வருவேனா?'' என்று கேட்கலாம். எனக்குத் தெரியாது. நான் அப்படித் தான் விசுவாசிக்கிறேன். நாம் அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் நமது இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுகிறோம் (பிலி.2:12). சபையானது கரை திறையற்றதாய் தேவனை சந்திக்க முன் குறிக்கப்பட்டுள்ளது. நாம் அந்த சபையில் இருப்போமானால், அந்த சபையுடன் கூட நாமும் முன் குறிக்கப்பட்டிருப்போம், வார்த்தையை ஆதாரமாகக் கொண்டு உங்களை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால், நாம் எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்பது தெளிவாகும். ஸ்தாபன கிறிஸ்தவ மார்க்கம் அந்த உறுதியை நமக்கு அளிக்கவே முடியாது. சிலர், ''நீங்கள் வந்து, இயேசுவே கிறிஸ்து என்று அறிக்கையிட்டு, எங்கள் சபையில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்'' என்கின்றனர். பிசாசும் அப்படியே செய்கிறான். அவனும் இயேசுவே கிறிஸ்து என்று விசுவாசித்து நடுங்குகிறான். பாருங்கள், அது உண்மை. 23ஸ்தாபனம் இருக்க வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டதாக வேதத்தில் எங்கும் காணப்படவில்லை. வேதத்தில் அதற்கு இடமேயில்லை. ஆதாம் ஒன்றைத் தொடங்கினான். ஆனால் அது தோல்வியடைந்தது. அதன் பின்பு நிம்ரோத் ஒரு ஸ்தாபனத்தை ஏற்படுத்த முயன்றான். நீங்கள் சரித்திரக்காரராயிருந்து, பாபிலோனின் சரித்திரத்தை அறிந்திருந்தால், ஹிஸ்லோப் (Hislop) என்பவர் எழுதிய ''இரு பாபிலோன்கள்'' (The Two Babylons) என்னும் புத்தகத்தைப் படியுங்கள். நீங்கள் அநேக காரியங்களை அறிந்து கொள்வீர்கள். பாவ மனிதனாகிய இந்த நிம்ரோத் பாபிலோனையும் அதைச் சுற்றிலுமிருந்த அநேக இடங்களைக் கைப்பற்றி, அதை ஒரு பெரிய சாம்ராஜ்யமாக்கினான். மற்றவர் அவனுக்குக் கப்பங்கட்டினர். இது கடைசி கால ஸ்தாபன கிறிஸ்தவ மார்க்கத்துக்கு முன்னடையாளமாகத் திகழ்கின்றது. அவன் ஒரு கோபுரத்தைக் கட்டி, மனிதர்களை ஒரு ஸ்தாபனமாக ஒன்று படுத்த முயன்றான். ஆனால் அவன் முயற்சி தோல்வியடைந்தது. அது தோல்வியடைந்துவிட்டது. 24கோரா, நீங்கள் படிக்க விரும்பினால் எண்ணாகமம் 16:1ல், அவன் அதையே செய்ய விரும்பினான். அவன் எல்லா லேவியர்களையும் ஒன்று கூட்டி, பிரபலமானவர்கள், பரிசுத்த மனிதர்கள், பெரிய மனிதர்கள் அனைவரையும் ஒன்று கூட்டி, அவனும் தாத்தானுமாக ஒன்று சேர்ந்து, “தனிப்பட்ட ஒரு மனிதன் எங்கள் மேல் அதிகாரம் வகிப்பது சரியல்ல'' என்றனர். அவர்கள் ஒரு ஸ்தாபனத்தை தொடங்க முயன்று, இந்த ஊழியத்திற்கென்று தேவன் தெரிந்து கொண்ட மோசேக்கும் ஆரோனுக்கும் முன்பாக வந்து, அவர்கள் தங்கள் மேல் மிகுந்த அதிகாரத்தை எடுத்துக் கொள்கின்றனர் என்றும், ''சபையோர் அனைவருமே பரிசுத்தமானவர்கள் என்றும், அவர்களுக்கும் உரிமையுள்ளது என்றும் கூறினர்...” ''அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்'' என்று அவர்கள் கூறுகின்றனர். (ஆங்கிலத்தில் 'Safety' - அதாவது ''பாதுகாப்பு உண்டாகும்'' என்னும் அர்த்தத்தில் எழுதப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்). ஆனால் அது கிறிஸ்தவ மார்க்கத்துக்கு பொருத்தமல்ல. அது யுத்தத்தின் போது மாத்திரமே, கவனியுங்கள், இது அதிக வித்தியாசமுள்ளது. நீங்கள் “யூதாஸ் போய் நான்று கொண்டு செத்தான்'' என்னும் வேத வாக்கியத்தை எடுத்துக் கொண்டு, ”நீயும் போய் அந்தப்படியே செய்'' என்னும் வேத வாக்கியத்துடன் இணைக்கக் கூடாது. வேண்டுமானால் நீங்கள் அப்படி செய்யலாம். ஆனால் அது பொருத்தமாயிராது. 25கர்த்தர் மோசேயைத் தெரிந்து கொண்டார், கர்த்தர் ஆரோனைத் தெரிந்து கொண்டார். அது அக்காலத்து செய்தியாகத் திகழ்ந்தது. மற்ற சாராரின் கருத்து எவ்வளவு நன்றாகத் தென்பட்டாலும், அது தேவனுடைய கருத்துக்கு முரணாயிருந்தது. தேவனுடைய சிந்தையே நமது சிந்தையாக இருக்க நாம் அனுமதிக்க வேண்டும். ''கிறிஸ்துவின் சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது.'' (பிலி. 2:5). இந்த வேதாகமம் கிறிஸ்துவின் சிந்தையை வெளிப்படுத்துவதாய் அமைந்துள்ளது. 'அபோகாலிப்ஸ்' என்று அழைக்கப்படும் வெளிப்படுத்தின விசேஷம் புத்தகம் முழுவதுமே இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்துகின்றது. அவர் எவ்வாறு ஸ்தாபனங்களைக் கடிந்து கொள்கிறார் என்று சற்று கழிந்து பார்க்கலாம். சரி. 26கோரா, தன் செயலில் உத்தமாக இருந்தான் என்று நான் நம்புகிறேன். அவன் தவறு செய்ய வேண்டுமென்று நினைக்கவில்லை. தேவனுடைய கரம் அங்கு அசைவாடிக் கொண்டிருந்ததையும், தேவனுடைய வார்த்தை நிறைவேறுகிறதையும் அவன் காணக் கூடாமல் அறியாமையுள்ளவனாயிருந்தான் என்று நான் நினைக்கிறேன். அதன் காரணமாகவே அவன் தன் சுயபுத்தியைக் கொண்டு யோசிக்கத் தொடங்கினான். இன்று காணப்படும் தொல்லைகளில் தொண்ணூறு சதவிகிதம் அதுவே. தேவன் வகுத்துள்ள திட்டத்தில் நமது சொந்த கருத்துக்களைப் புகுத்த நாம் முயல்கிறோம். நாம் சுயபுத்தியைக் கொண்டு சிந்திக்கவே கூடாது. அவர் நமக்காக சிந்திக்க வேண்டும். நமது சிந்தனையை அவருடைய சித்தத்துக்கு நாம் ஒப்புக் கொடுக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். இப்பொழுது உங்களுக்குப் புரிகிறதா? கோரா, நல்லெண்ணம் கொண்டவனாய் தான், தவறான போதகத்துடன் சென்று, கர்த்தர் தீர்க்கதரிசி, தூதனான மோசேயை மாத்திரம் ஆசிர்வதிக்கவில்லை, சபையோர் அனைவருமே பரிசுத்தர் என்று தன் விவேகம் கொண்டு தன் சகோதரர்களை அறிவுறுத்த முயன்றான். அவன், “சபையோர் அனைவருக்குமே இதை செய்ய உரிமையுண்டு, அதை செய்ய உரிமையுண்டு'' என்று கூறினான். அவர்களிடம் நல்ல மனிதர்கள், லேவியர்கள் இருந்தனர். அவர்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். இன்றைக்கு அப்படிப்பட்டவர்களை நாம் ''போதகர்கள்'' என்று அழைக்கிறோம். லேவியர் தேவாலயத்தில் பணிவிடை செய்தனர். அவ்வாறு பணிவிடை செய்ய மோசே அவர்களிடம் கூறியிருந்தான் அல்லவா? அவன் அவபக்தியாய் அவ்விதம் கூறவில்லை. அவர்கள் தூபகலசங்களை எடுத்துக் கொண்டு, பரிசுத்த அக்கினியை அதில் போட்டு, அதின் மேல் சுகந்தவர்க்கமிட்டு, அவர்கள் பரிசுத்த தூபம் காட்ட வேண்டுமென்று அவர்களிடம் கூறியிருந்தான். அது தேவனுடைய கட்டளையாயிருந்தது. சபையின் ஆதிக்கம் ஒரு மனிதனிடம் இருக்க வேண்டுமென்று தேவன் கட்டளையிட்டிருக்க, இங்கு ஒரு கூட்டம் மனிதர் சபையின் ஆதிக்கத்தைக் கைப்பற்ற வருகின்றனர். 27அவர்கள் அவ்வாறு செய்ய முனைந்த போது, மோசே முகங்குப்புற விழுந்தான். ஏனெனில் சபை ஆதிக்கத்தின் பணியை தேவன் அவனிடம் ஒப்படைத்திருக்கிறார் என்பதை அவன் அறிந்திருந்தான். கர்த்தர், “அவர்கள் ஆசரிப்பு கூடார வாசலுக்கு முன்னால் தூபவர்க்கமிடட்டும்'' என்று கூறினார். அவர்கள் அக்கினி நிறைந்த தூபகலசங்களைப் பிடித்துக் கொண்டு தூபவர்க்கமிட்டு, அது மேலே எழும்பின போது, கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி, ”இவர்களை விட்டுப் பிரிந்து போங்கள்! அவர்களை விட்டு வெளியே வாருங்கள்'' என்றார். பின்பு அவர் அவர்களை, “பாவிகள், அவிசுவாசிகள்'' என்றழைத்தார். பாவம் என்பது தேவனுடைய வார்த்தையின் பேரிலுள்ள அவிசுவாசமே. நீ அவிசுவாசிப்பதனால் திருடுகின்றாய். நீ அவிசுவாசிப்பதனால் பொய் சொல்லுகின்றாய். நீ அவிசுவாசிப்பதனால் விபச்சாரம் செய்கின்றாய். நீ விசுவாசியாயிருந்தால் இத்தகைய செயல்களைப் புரியமாட்டாய். இரண்டு அங்கிகள் மாத்திரமேயுள்ளன, ஒன்று விசுவாசம், மற்றொன்று அவிசுவாசம். இவைகளில் ஒன்று மாத்திரமே உன் மேல் ஆதிக்கம் வகிக்கின்றது. ஆதியிலே தேவன் வார்த்தையாயிருந்தார், அவர் மாமிசமாகி நம்மிடையே வாசம் பண்ணினார். அவர் வார்த்தையாயிருந்தார், வார்த்தையாயிருக்கிறார். தேவன் உனக்குள் வாசம் செய்யும்போது, தேவனுடைய வார்த்தை தான் உனக்குள் வாசம் செய்கிறது. அப்பொழுது அவர் கூறும் ஒவ்வொரு வார்த்தையையும் நீ 'ஆமென்' என்று உச்சரித்து உறுதிப்படுத்துகிறவனாயிருப்பாய். அது தேவன் உனக்குள் வாசம் செய்வதைக் காண்பிக்கிறது. 28நீங்கள் கவனிப்பீர்களானால், பரிசுத்த அக்கினி கொண்ட தூப கலசத்தைக் கையில் பிடித்திருந்த பேதை மனிதராகிய இவர்களை, தேவன் பூமியைப் பிளக்கச் சேய்து விழுங்கிப் போட்டு, மோசேயிடமிருந்து அவர்களைப் பிரித்தார். மோசே தன்னை அவர்களிடமிருந்து பிரித்துக் கொண்டான். மோசே, “அந்த கூட்டத்தாருடன் விளையாடிக் கொண்டிருக்க வேண்டாம். அவர்களை விட்டுப் பிரிந்து போங்கள்'' என்று சபையோரை எச்சரித்தான். உங்களுக்கு வேதம் தெரியும். 16, 17, 18 அதிகாரங்களைப் படியுங்கள் (எண்ணாகமம் - தமிழாக்கியோன்). இந்த பாவிகளிடமிருந்து பிரிந்து வாருங்கள். அவர்கள் அழிவுக்குப் போய்க் கொண்டிருக்கின்றனர், அவர்களின் உடமைகள் அனைத்துமே அழிக்கப்படும்'' ...பூமி பிளந்து. பரிசுத்த அக்கினியைப் பிடித்துக் கொண்டிருந்த இந்த மனிதரை விழங்கிப் பேட்டது. பேதை மனிதர்கள் மனிதனால் வஞ்சிக்கப்படுதல். இன்றைக்கும் அவ்வாறே சம்பவிக்கின்றது. அநேக பேதை மனிதர்கள் பரிசுத்த வேதாகமத்தைக் கையில் பிடித்தவர்களாய், அந்த புத்தகத்திலிருந்து பிரசங்கள் செய்பவர்களாகக் கருதப்பட்டு, பாரம்பரியம் என்னும் கண்ணியில் விழுந்துள்ளனர். இதை கூறும் போது, கடந்த ஞாயிறு வரை மெதோடிஸ்டாக இருந்து வந்துள்ள ஒருவர் முகத் தோற்றத்தில் மாறுதல் ஏற்படுவதைக் கவனிக்கிறேன். சகோதரனே, அதிலிருந்து வெளியே வருதல் என்பது உமக்கு முக்கியம் வாய்ந்த செயல் எனக் கருதுகிறேன். 29இப்பொழுது பாருங்கள், தூபகலசங்களைப் பிடித்துக் கொண்டு, அதிலிருந்த அக்கினி தூபவர்க்கத்தை எரியச் செய்து, அது தேவனுக்கு முன்பாக சுகந்த வாசனையாக எழும்புகிறது. அதை அந்த கரங்கள் பிடித்துக் கொண்டுள்ளன. ஆயினும், அதை கையில் கொண்டவர்களாய் அவர்கள் அழிந்து போயினர். அவர்கள் உத்தமமாக ஒன்றை செய்ய முயன்றனர், ஆனால் அது தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாய் இருந்தது. அவர்கள் ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்க முயன்றனர். அவர்கள், “நீங்கள் மிஞ்சிப் போகிறீர்கள். தேவனுடைய வார்த்தை அனைத்தையும் நீங்கள் பெற்றுள்ளதாகக் கூறுவதற்கு நீங்கள் யார்?'' என்றனர். மோசே அந்த மணி நேரத்து செய்தியாளன் என்பதை அவர்கள் காணத் தவறினர். பாருங்கள், அவன் “கர்த்தர் உரைக்கிறதாவது'' என்பதைக் கொண்டிருந்தான். அவனைப் போல் உலகில் யாருமே இல்லை, அவனிடம் செய்தியிருந்தது. ஜனங்கள் அதைக் காணத் தவறினர். மோசே, ”கர்த்தர் உரைக்கிறதாவது'' என்பதுடன் அப்படியே ஒன்றியிருந்தான், நிச்சயமாக. சரி. 30இன்றைக்கும் நாம் அதையே காண்கிறோம். நல்லவர்கள், பெரியவர்கள், விலையேறப் பெற்றவர் இவர்கள் தேவனுடைய வார்த்தையை தங்கள் கையில் கொண்டவர்களாய், மனிதனால் ஏற்படுத்தப்பட்ட சில பாரம்பரியங்களின் மூலம் அதை பிரசங்கிக்க முயல்கின்றனர். இங்கு சிறிது குறைத்து, அங்கு சிறிது குறைத்து, அதை இப்படி செய்து, “உங்கள் சபை அங்கத்தினத்தை மாற்றிக் கொண்டு, எங்கள் சபையில் சேர்ந்து கொள்ளுங்கள்” என்று கூறி, தேவனுடைய வார்த்தையை கையில் வைத்துக் கொண்டே ஆவிக்குரிய பிரகாரம் மரிக்கின்றனர். பாருங்கள்? அவர்கள் தேவனுடைய செய்தியாளனையோ, அல்லது அந்நாளுக்குரிய செய்தியையோ விசுவாசிக்க முடியவில்லை. மகத்தான தேவன் ஏன் ஒரு கூட்ட ஜனங்களின் மூலம் கிரியை செய்யாமல், ஒரு மனிதனின் மேல் அதை வைக்கிறார் என்று அவர்களுக்குப் புரியவில்லை. இன்று நான் பேசிக் கொண்டிருந்த எத்தனையோ பேர், “சகோ. பிரான்ஹாமே, நாங்கள் என்ன செய்வோம்? நீர் சரியென்று எங்களுக்குத் தெரியும். ஆனால் நாங்கள் என்ன செய்வோம்? எங்கள் ஸ்தாபனம் எங்களை புறம்பாக்கிவிடும். நாங்கள் போவதற்கு வேறு இடமே இருக்காது'' என்றனர். அவர்களுக்காக நான் வருத்தப்படுகிறேன். ஆனால் ஒரு இடம் உண்டு. நீங்கள், ”நாங்கள் பட்டினியினால் சாவோம்'' எனலாம். தாவீது, “நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனால் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை'' என்றான். 31அதே அடிப்படையில் தான் அவர்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். அவர்கள் தங்கள் ஸ்தாபனங்களினாலும், பரிசுத்த ஆசாரியர்களினாலும், பரிசுத்த கட்டிடங்களினாலும், பரிசுத்த சபைகளினாலும், பரிசுத்த ஆலயங்களினாலும் அதிகமாக சுற்றப்பட்டிருந்த காரணத்தால், தேவன் தமது மானிட ஆலயத்தில் வாசம் செய்ததை அவர்கள் காணத் தவறினர். “நீ மனிதனாயிருக்க, உன்னை தேவனாக்கிக் கொள்கிறாய்'' என்றனர். பாருங்கள்? அவர்கள் அதில் அதிகமாக சுற்றப்பட்டிருந்தனர். தாத்தானும் மற்றவர்களும் அது சரி என்று கூறும் அளவிற்கு அவர்கள் அதில் அதிகமாக சுற்றப்பட்டிருந்தனர், ஜனங்களை தேவனுடைய கோபாக்கினையினின்று தப்புவிக்க முடியும் என்று தன்னம்பிக்கை கொள்ளும் அளவிற்கு அவன் அதில் சுற்றப்பட்டிருந்தான். ஆதாமும், அவன் தன் நிர்வாணத்தை மறைத்துக் கொண்டால் தேவனால் அதை காணமுடியாது என்று உறுதியாக நம்பினான். நீங்கள் அதை மறைக்கவே முடியாது. தேவன் தான் அதை மறைக்க வேண்டும். பாருங்கள்? பாருங்கள்? தேவனுடைய திட்டம் தான் அதை மறைக்கிறது. உங்களுடைய திட்டம் அல்ல, அது எப்பொழுதும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. அவர்கள் இயேசுவைத் தமது ஆலயத்தில் காணத் தவறுகின்றனர், மாமிசத்தில் வெளிப்பட்ட தேவனை. வேதாகமத்தின் வார்த்தைகள் பாரம்பரியங்களினால் இன்று மாற்றப்பட்டுள்ளன என்பதைக் காண்பதற்கு எனக்கு வருத்தமாயுள்ளது. உத்தம இருதயமுள்ளவர்கள் தேவனுடைய வார்த்தையைக் கேட்கும் போது, அது உண்மையென்று அறிந்த போதிலும், ஒரு முடிவை எடுக்க அவர்களுக்குத் தைரியமில்லை. ஏனெனில் அவர்களுடைய பாரம்பரியம் வித்தியாசமாகப் போதிக்கின்றது. சகோதரரே, நீங்கள் பாத்திரங்களைக் கழுவி, ஆசாரங்களைக் கைக்கொள்ளுங்கள். நாங்களோவென்றால், நானும் என் வீட்டாருமோவென்றால், வார்த்தையாகிய கிறிஸ்துவையே ஏற்றுக் கொள்வோம். பாருங்கள்? 32யோவான் 3ஐ சிறிது நேரம் பார்ப்போம், நிக்கொதேமு என்பவன் ஒரு போதகனும் சனகரீப் என்று அழைக்கப்பட்ட மகத்தான ஸ்தாபனம் ஒன்றுக்கு அதிகாரியுமாயிருந்தான். அவர்கள் ஒன்று கூடி, அவர்களுடைய பாரம்பரியங்களை அமைத்துக் கொண்டனர். ஒரு கூட்டத்தார் பரிசேயர், மற்றொரு கூட்டத்தார் சதுசேயர். அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். அவர்களிடையே நிறைய வேறுபாடு காணப்பட்டது... நிக்கொதேமு என்னப்பட்ட இம்மனிதன் போதகனும், இம்மகத்தான சனகரீப் சங்கத்துக்கு அதிகாரியுமாயிருந்தான். அவன் வேதத்தை கற்று கொடுப்பதில் வல்லவனாயிருந்தான். அவனுக்கு வேதம் நன்றாகத் தெரியும் என்று நினைத்திருந்தான். அதை அவர்களுடைய பாரம்பரியத்தின் வாயிலாக அவன் அறிந்திருந்தான் ''உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கி வருகிறீர்கள்'' என்று இயேசு கூறவில்லையா? பாருங்கள், அவர்களுடைய பாரம்பரியங்களின் விளைவாக! அது என்ன? தேவனுடைய வார்த்தை என்ன கூறுகிறதோ, அதை அப்படியே விட்டுவிடாமல், தங்கள் சொந்த வியாக்கியானத்தை அதற்களித்தல். அதன் அர்த்தம் அதுவல்ல என்று அவர்கள் கூறுகின்றனர், முதலாம் ஸ்தாபனத்தை நிறுவ ஏவாளிடம் பிசாசு உபயோகித்த அதே சத்தம் தான் இது என்று கவனித்தீர்களா? ''நிச்சயமாக அதன் அர்த்தம் இப்படித்தான் இருக்க வேண்டும். தேவன் அப்படி செய்யமாட்டார் தெரியுமா?'' பாருங்கள் இன்றைக்கும் அதுவேதான். 33இந்த அதிகாரி இயேசுவினிடத்தில் வந்தான் என்று நாம் காண்கிறோம். முதலாவதாக, அவன் நித்திய ஜீவனைத் தேடி வருகிறான், அவன் இரட்சிப்பைத் தேடி வருகிறான். அத்தகைய அந்தஸ்துள்ள ஒரு மனிதன், இஸ்ரவேலில் போதகன் (ஆங்கில வேதத்தில் 'Master' என்று எழுதப்பட்டுள்ளது. அது போதகனைக் காட்டிலும் மேலான பதவி - தமிழாக்கியோன்), பள்ளிக்கு ஒரு நாள் கூட சென்றதாக அத்தாட்சியில்லாத ஒரு மனிதனிடம் வருகிறான். ஒரு வயோதிபன், வயோதிப ஆசாரியன், ஒரு வாலிபனிடம் வருகிறான். அவர்கள் பிரபுக்கள் (aristocrats). பணம் படைத்த அவன், தலை சாய்க்க இடமில்லாத தரித்திரனிடம் வருகிறான். முதலாவதாக, சனகரீப் சங்கத்திலிருந்தவர்கள், நிக்கொதேமு அறிக்கையிட்டபடி, அவர்களுடைய ஸ்தாபனத்திலிருந்த மற்றோர் காணாத ஒன்றை இயேசுவில் கண்டனர். அவரில் ஏதோ ஒன்றுள்ளதாக அவர்கள் கண்டு கொண்டனர். ஏனெனில் நிக்கொதேமு, “ரபீ, நாங்கள் அறிந்திருக்கிறோம்'' என்றான். ”நாங்கள்'' என்னும் பன்மை சொல். ஆம், அவர்கள் அதை பகிரங்கமாக அறிக்கையிடவில்லை. அப்படி செய்திருந்தால், அவர்கள் புறம்பாக்கப்பட்டிருப்பார்கள். பாருங்கள்? ''நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம். ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான். அது எங்களுக்குத் தெரியும்'' என்றான். அவன் (யோவான் 3:2). ஓ, என்னே! ஸ்தாபனம்! 34இயேசு தேவனை வெளிப்படுத்தினார் என்று நாம் காண்கிறோம். “ஒருவனும் தேவன் தன்னுடனே இராவிட்டால் இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான்.'' அந்த மனிதனில் ஏதோ வித்தியாசமான ஒன்று இருந்ததாக அவர்கள் அறிந்திருந்தனர். அந்நாளுக்கு அவர் ஒளியாயிருந்தார். அவர் தேவனுடைய சாட்சியாயிருந்தார். கோராவும் அப்படிப்பட்ட ஒன்றை மோசேயில் கண்டான். மோசேயைப் போல் அக்காலத்தில் யாரும் இருக்கவில்லை. அவன் அந்நாளில் தேவனுடைய வல்லமைக்கு தெய்வீக சாட்சியாகத் திகழ்ந்தான். கோராவும் அவனுடைய கூட்டத்தாரும் அதை மோசேயில் கண்டனர். அது மோசேயாக இருக்க முடியாது என்று அவர்கள் புரிந்து கொண்டனர். மோசே சிவந்த சமுத்திரத்தைப் பிளந்திருக்க முடியாது, மோசே பூமிக்கு வாதைகளை அனுப்பியிருக்க முடியாது. அது மோசேக்குள் இருந்த தேவன். அந்நாளுக்குரிய வெளிச்சமாக தேவன் தம்மை மோசேயின் மூலம் பிரதிநிதித்துவம் செய்தார். அவர்கள் அதைக் காணத் தவறினர். கோரா எப்படிப்பட்டவர்களையும் உள்ளே கொண்டு வந்து ஒரு கூட்டத்தாரை சேர்த்துக் கொள்ள விரும்பினான். 35அதை செய்ய மாத்திரமே ஸ்தாபனம் தகுதி வாய்ந்தது. அவர்கள் உபயோகமற்ற எவரையும் (riff-raff) சேர்த்துக் கொண்டு, அதை கிறிஸ்தவ மார்க்கம் என்றழைக்கின்றனர். ஒரு எகிப்திய பிரபுவைக் குறித்து ஆப்பிரிக்க பழங்குடியினருக்கு எப்படி ஒன்றும் தெரியாதோ, அது போன்று தேவனைக் குறித்தே ஒன்றுமறியாத ஒரு வாலிபனை அவர்கள் வேதப்பள்ளிக்கு அனுப்பி, அவனுக்கு கல்வி புகட்டி, மனோதத்துவம் கற்றுக் கொடுத்து, அவனுக்கு டாக்டர் பட்டம், இன்னும் மற்ற பட்டங்களை அளித்து, இரட்சிக்கப்படாத அவனை, கன்னிப்பிறப்பையும் உயிர்த்தெழுதலையும் மறுதலிக்கும் அவனை, இயேசு எதற்காக மரித்தாரோ அதையெல்லாம் மறுதலிக்கும் அவனை, மாற்கு 16 தேவனுடைய ஆவியால் அருளப்பட்டது என்பதை மறுதலிக்கும் அவனை, “இந்த அடையாளங்கள் விசுவாசிக்கிறவர்களைத் தொடரும்'' என்று இயேசுவே கூறியிருக்க அதை மறுதலிப்பவனை, இன்னும் மற்ற வேத வாக்கியங்களும் தேவனுடைய ஆவியால் அருளப்பட்டவை என்பதை மறுதலிப்பவனை சுவிசேஷத்தை பிரசங்கிக்க அனுப்புகின்றனர். அவர்களுக்கு ஒன்றுமே தெரியாத பாரம்பரியங்களை அங்கீகரித்து, அதை குறித்தே பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் சத்தியம் என்னவென்பதைக் காண்பித்து அதை எடுத்துரைத்தால், அவர்களுடைய ஸ்தாபனத்தினிமித்தம் அதை ஏற்றுக் கொள்ள வெட்கப்படுகின்றனர். 36கோராவும் அதை தான் செய்தான். அவர்கள் தேவனை மோசேயில் கண்டனர். அவன், தேவன் அவன் மூலம் கிரியை செய்யும் தேவனுடைய பிரதிநிதி என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். நிக்கோதேமுவும் தேவனை கிறிஸ்துவில் கண்டான். “ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் இப்படிப்பட்டவைகளை செய்யமாட்டான்''. நிக்கொதேமு ஸ்தாபனத்துக்குள் இருந்து கொண்டு, அதை விட்டு வெளியே வர முயன்று கொண்டிருந்தான். ஆனால், கோராவோ ஸ்தாபனத்தின் வெளியே இருந்து கொண்டு, ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கி அதற்குள் நுழையப் பார்த்தான். அதுதான் இவர்களிருவருக்கும் இடையேயிருந்த வேறுபாடு. நிக்கொதேமு இரட்சிப்பை அடைய முயன்று, ஸ்தாபனத்தை விட்டு வெளியே வரப் பார்த்தான். அவன் வாலிபனாக இருந்த முதற் கொண்டு அதற்குள் இருந்து வந்தான். அவனுக்கு அது வெறுத்துவிட்டது. அவன் இரட்சிப்பைப் பெற விரும்பினான். ஆனால் கோராவோ, தான் எங்கு பெரிய மனிதனாக மதிக்கப்படுவானோ, அத்தகைய ஒரு ஸ்தாபனத்தை தனக்கு உண்டாக்கிக் கொள்ளப் பார்த்தான். 37இன்றைக்கும் ஜனங்கள் அம்முறையைத் தான் கையாளுகின்றனர். அதுவே இன்றைய கிறிஸ்தவ மார்க்கத்திலுள்ள தொல்லையாகும். அநேக போலிகள் அதில் காணப்படுகின்றனர். பெந்தெகொஸ்தே ஜனங்களிடையே இத்தகைய மாமிசப் பிரகாரமான ஒப்பிடுதல் (Carnal Comparison) அதிகம் காணப்படுகின்றது. தேவன் ஒரு மனிதனை எழுப்பி, அவனுக்கு ஏதாவதொன்றை அளிக்க நேர்ந்தால், நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் அந்த நபரை பாவனை செய்ய முயல்கின்றனர். அப்படி செய்வதனால் உங்கள் அணியை (team) நீங்கள் நாசமாக்கிவிடுகிறீர்கள் என்று உணருவதில்லை. நீங்கள் கால்பந்து வினையாடும் போது... பவுல் கூறுவது போல் “கிருபையானது நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக் கடவோம்''. ஒரு மனிதனிடம் பந்து இருக்கும் போது அவனிடமிருந்து அதை பிடுங்கிக் கொள்ள வேண்டாம். அவனைப் பாதுகாக்க முயலுங்கள். அதற்கு பதிலாக, அவன் உங்கள் ஸ்தாபனத்தை சேர்ந்திராத காரணத்தால், அதை அவனிடமிருந்து பறித்துக் கொள்ள விரும்புகிறீர்கள். பழக்கமில்லாத ஒருவன், ஜமக்காளத்தில் பூக்கள் இருந்தாலும் கூட இடறி விழுவான். அவனிடமிருந்து இதை பறிக்க முயல்கிறீர்கள். அது உண்மை. ஆவிக்குரிய விதமாக இதைக் கூறினால் மன்னிக்கவும், நான்... அவன் அப். 2:38 போன்ற ஒரு சிறு காரியத்தில் இடறிப்போய் நிச்சயமாக கீழே விழுகிறான். அவன் மாற்கு 16ல் இடறுகிறான். அப்படியானால் அவன் எப்படி அங்கு அடையப் போகிறான்? பாருங்கள்? கிறிஸ்துவைக் குறித்த மலிவான பாடங்கள். நிசாயா ஆலோசனை சங்கத்தில் விவாதிக்கப்பட்ட அந்த பிரச்சினையைக் குறித்து இத்தனை ஆண்டுகள் கழித்தும் இடறி விழுந்து கொண்டிருக்கின்றனர். 38கோரா ஒரு ஸ்தாபனத்தை ஏற்படுத்தி அதற்குள் நுழையப் பார்த்தான். நிக்கொதேமு ஸ்தாபனத்தில் இருந்து கொண்டு, அதிலிருந்து வெளியே வர முயன்றான். நிக்கொதேமு ஏற்றுக் கொள்ளப்பட்டு வெளியே வந்தான். கோராவோ, ஸ்தாபனம் ஏற்படுத்தி, தான் எடுத்துக் கொண்ட முயற்சியின் விளைவாக அதில் மாண்டு போனான். ஓ, என்னே! நிக்கொதேமு சேர்ந்திருந்த ஸ்தாபனம், கிறிஸ்து தேவனால் அனுப்பப்பட்டவர் என்பதை அறிந்திருந்தது. நிக்கொதேமு யோவான் 3ம் அதிகாரத்தில் அவ்வாறு அறிக்கையிடுகிறான். “ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம். ஏனெனில் ஒருவனும் தேவன் தன்னுடனே இராவிட்டால், இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான்.'' அதே குழு, அவர்களுடைய ஸ்தாபனத்தின் நிமித்தம், அவர் பிசாசுகளைத் துரத்தும் வல்லமையைப் பெற்றிருந்ததால், அவரை 'பெயல்செபூல்' என்றழைத்தது. ''அவனுடைய போதகத்தினால் நம்முடைய ஜனங்களை வஞ்சிக்கிறான்'' என்று அவர்கள் கூறினர். இன்றைக்கும் அப்படியே நடக்கிறது. எதை வஞ்சிக்கிறார்? 39இயேசு, ''என் பிதாவுக்குப் பிரியமானதையே நான் செய்கிறேன். நான் தேவனுடைய வார்த்தைகளை மாத்திரமே கைக் கொள்ளுகிறேன்'' என்றார். ஏனெனில் அவர் வார்த்தையாயிருந்தார். வார்த்தையைத் தவிர வேறொன்றையும் அவரால் கைக்கொள்ள முடியவில்லை. ஆனால் அவர்களுடைய ஸ்தாபனம் கைக்கொண்ட வழிமுறைகளின் விளைவாக அவர்கள் மனிதரை அவர்களுடைய ஸ்தாபனத்தில் கட்டிப் போட்டிருந்தனர். அவர்களுடைய இருதயங்களில் அவர்கள் உண்மையை அறிந்திருந்தனர். ஆனால் அவர்களுடைய ஸ்தாபனமோ அதை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை. பிறகு அதனின்று தப்பித்துக் கொள்ள, ஸ்தாபனத்தை விட்டு ஜனங்கள் சென்று விடுவதைத் தடுக்க (''உலகமே அவனுக்குப் பின்சென்று போயிற்றே'' - யோவான். 12:19), சத்தியத்தை பின்பற்றுவதை தடை செய்ய (“நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்'' - யோவான் 14:6), அவர் ஜனங்களை வஞ்சிக்கிறாரென்று அவர்கள் கூறினர். யோசித்துப் பாருங்கள்! ஒரு மனிதன் தன் இருதயத்தில் அவர் தேவன் என்றும், தேவன் அவருக்குள் இருக்கிறார் என்றும் உணர்த்தப்பட்டு (”ஒருவனும் தேவன் தன்னுடனே இராவிட்டால் இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான்'' - யோவான். 3:2), அதை அறிக்கை செய்து, அதன் பின்பு அந்நிலையிலிருந்து மாறி, அவரை 'பெயல்செபூல்' என்றும் 'ஜனங்களை அவனுடைய போதகத்தினால் வஞ்சிக்கிறவன்' என்றும் கூறினால்! ஓ, என்னே! 40அவர் தீர்க்கதரிசியென்று நிக்கொதேமு அறிந்திருந்தான். அந்த ஸ்தாபனத்தில் அவன் ஒருவன் மாத்திரமே தேவனை போதுமான அளவுக்கு நேசித்து, போதுமான அளவுக்கு அவருக்கு பயந்திருந்து, இவர் தேவனால் அனுப்பப்பட்டு, நிரூபிக்கப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசி என்பதற்கு போதிய தகுதிகளைப் பெற்றிருக்கிறார் என்று பழைய ஏற்பாட்டின் மூலம் அறிந்திருந்தான். அந்த மனிதன் அவரை கனப்படுத்தினான். அவன் இரவில் வந்தாலும் கூட, அவன் அங்கு அடைந்தான். வர மறுக்கும் இன்றைய நமது போதகர்களைக் காட்டிலும் அவன் எவ்வளவோ மேலானவன். அவன் முடிவில் இயேசுவிடம் வந்தான். எனவே இன்னும் வராதிருக்கிற நீ அவன் பேரில் குற்றம் கண்டு பிடிக்க வேண்டாம். அவர் தீர்க்கதரிசியென்பதை நிக்கொதேமு அறிந்திருந்தான். எனவே அவன் தேவனுக்குப் பயந்தான். அந்நாளுக்குரிய ஒளியாகிய அவர், தன்னை விட்டு போய்விட அவன் அனுமதிக்கவில்லை. அவனுடைய ஸ்தாபனம் அது முரணானது என்று எவ்வளவு தான் கூறின போதிலும், தேவன் அவரை உறுதிப்படுத்துவதை அவன் கண்டான். எனவே அவர் தீர்க்கதரிசியென்பதை அவன் விளங்கிக் கொண்டான். அவர் தீர்க்கதரிசியாயிருப்பாரானால், தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசியினிடத்தில் வரவேண்டும். பாருங்கள்? எனவே அவன் இயேசுவினிடம் சென்று, இரட்சிக்கப்பட செய்ய வேண்டுமென்று அறிய முயன்றான். இவர் ஒரு தீர்க்கதரிசி, தேவனுடைய வார்த்தை அவரிடமிருந்தது. எனவே இரட்சிப்பின் வழி அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். 41ஆனால் நிக்கொதேமு கற்க வேண்டியிருந்தது என்னவெனில், இன்றைய ஸ்தாபனங்களிலுள்ள அநேகர் கற்க வேண்டியதே. நிக்கொதேமுக்குத் தெரிய வேண்டியது, இன்றைய ஸ்தாபனங்களிலுள்ள ஜனங்களுக்குத் தெரிய வேண்டியதே. அவர் தீர்க்கதரிசியை விட பெரியவர். ஜீவனுக்குப் போகும் வழி எதுவென்று அவரிடமிருந்து கற்றறிய, நிக்கொதேமு அவரிடம் வந்தான். ஆனால் இயேசுவே ஜீவன். “குமாரனை உடையவன் ஜீவனை உடையவன்.'' (யோவான் 5:12). எனவே ஏதோ ஒன்றைக் கற்றுக்கொள்ள அவன் அங்கு வரக்கூடாது, அந்த நபரை ஏற்றுக் கொள்ளவே அவன் அங்கு வரவேண்டும். இன்றைக்கும் அவ்வாறே உள்ளது. மறுபடியுமாக மூலைக்கல் புறக்கணிக்கப்படுகின்றது. பிரதான மூலைக்கல் எது? அது தான் வார்த்தை - கிறிஸ்து. கிறிஸ்து வார்த்தையாயிருக்கிறார். அவன் ஒன்றை கற்க வேண்டியதாயிருந்தது. “இந்த மனிதன் ஒரு தீர்க்கதரிசி, ஒரு தீர்க்கதரிசி மாத்திரமே'' என்று அவன் நினைத்தான். 42கவனித்தீர்களா?, இயேசு அவனுடைய, கேள்விக்கு பதில் அளிக்கவேயில்லை. அவனுடைய குருட்டுத்தனத்துக்காக அவர் அவனைக் கடிந்து கொண்டார். பாருங்கள்? தீர்க்கதரிசியிலும் பெரியவர், அவர் வார்த்தையாக, வார்த்தையில் பிரகாசிக்கும் ஒளியாக, இருந்தார். அவர் ஒரு கருவியின் மூலம் பிரகாசிக்கும் தேவனாக அமைந்து, அது ஒரு மனிதனுக்குள் இருக்கும் தேவன் என்பதை நிருபித்தார். அவர் வார்த்தையாயிருந்தார்... யோவான் 1ம் அதிகாரம், “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்'' என்றுரைக்கிறது. தேவனுடைய வார்த்தையானது இந்த சிறிய, மெலிந்த மனிதனுடைய உடலின் மூலம் பிரகாசித்து, ஸ்தாபனங்களைக் குருடாக்கினது. ஆனால் அவரோ தனிப்பட்ட நபர்களைப் பெற வந்தார். அவர் தீர்க்கதரிசியிலும் பெரியவர், அவரே வார்த்தை! அவர் ஜீவன்... இனி வரப்போகும் ஏதோ ஒரு ஜீவனைக் குறித்து அவர் போதிக்க வேண்டியதில்லை, அவரே ஜீவனாயிருந்தார். அவரே நித்திய ஜீவன், அவருக்குள் நித்திய ஜீவன் இருந்தது, அவர் மாத்திரமே நித்திய ஜீவனை அளிப்பவர். ”குமாரனை உடையவன் ஜீவனை உடையவன்.'' எனவே அவரைக் குறித்து போதிக்கப்பட்ட வார்த்தையை மாத்திரம் பெற்றிருந்தால் போதாது. அவரையே நீங்கள் பெற்றிருக்க வேண்டும். 43''ஓ, ஜனங்கள் உட்கார்ந்து கொண்டு, வேதாகமத்தையும், எல்லா கிரேக்க சொற்களையும் அவைகளின் விவரத்தையும், நிறுத்தக் குறிகளையும் (punctuations) படித்துள்ளனர்'' என்று நீங்கள் கூறலாம். அப்படி செய்தும், தேவனைக் குறித்து அவர்கள் ஒன்றுமே அறியாதிருக்கக் கூடும். பாருங்கள்? உருவத்தையுடையவன் திட்டத்தையுடையவனா? இல்லை. குமாரனை உடையவன் அந்த நபரை உடையவன். அவன் மாத்திரமே ஜீவனை உடையவன். நிக்கொதேமு, தாம் ஜீவனைக் குறித்து அறிந்திருந்தார் என்று அவனுக்குத் தெரியும், ஆனால் அவரே நித்திய ஜீவன் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. அவன் பேசிக் கொண்டிருந்த அந்த மனிதன், அந்த செய்தியானர், அக்காலத்து ஒளி, உலகத்தின் ஒளி. அவர் அதுவாகத்தான் இருந்தார். “அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது. இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார். அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்று கொள்ளவில்லை.'' ஏன்? ஏன்? ஏனெனில் அவர்கள் பாத்திரங்கள் கழுவுதல் போன்ற பாரம்பரியங்களினால் தங்களை ஸ்தாபித்துக் கொண்டிருந்த காரணத்தால், வார்த்தை மாமிசமானதை அவர்கள் காணத் தவறினர். 44அது மறுபடியும் சம்பவிக்கிறது. சரித்திரம் திரும்ப நிகழ்கின்றது. அது அடிக்கடி நிகழ்வதைப் போல். ஆம், அவருக்கு ஜீவனைக் குறித்து தெரியும் என்று நிக்கொதேமு அறிந்திருந்தான். ஆனால் அவரே ஜீவன் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. இன்றைக்கும் அவ்வாறே உள்ளது. அநேகர் இயேசுவை ஒரு மகத்தான போதகராகக் கருதுகிகின்றனர். அவர் ஒரு தீர்க்கதரிசி என்றும் சொல்லுகின்றனர். ஆனால் அவர் தேவன் என்று நீங்கள் உணர்த்த முற்பட்டால், அது அவர்களுக்கு அதிகமாகிவிடுகிறது. பாருங்கள்? அவர் தேவனாயிருந்தார், அவர் தேவனாயிருப்பார், அவர் எப்பொழுதும் தேவனாயிருக்கிறார். அவ்வளவு தான். அது உண்மை. கவனியுங்கள், நிக்கொதேமு அவரிடம் வந்தபோது அவர், “நிக்கொதேமுவே, உன்னிடம் எனக்கு அதிக மதிப்புண்டு, நீ இஸ்ரவேலில் பெரிய போதகன். உனக்கு என்ன கூற விரும்புகிறேன் தெரியுமா? நீ நித்திய ஜீவனைத் தேடி இங்கு வந்துள்ளாய். 'உன் கல்வியறிவுக்கு நீ மெருகேற்ற வேண்டும்; உன் வார்த்தைகளை நீ சரியாக உச்சரிப்பதில்லை' என்றோ, அல்லது 'நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ள உன் ஸ்தாபனத்தில் இதைக் காட்டிலும் பெரிய பதவியை நீ தேடி அடைய வேண்டும்' என்றோ நான் கூற வரவில்லை''. இன்றைக்கு அநேகர் அதை தான் செய்ய முயல்கின்றனர். பெரிய பதவியைத் தேடுகின்றனர். அவர்கள் போதகரிலிருந்து மாகாணப் போதகராக அல்லது பேராயராக ஆக விரும்புகின்றர். அதற்கும் தேவனுக்கும் எவ்வித தொடர்புமில்லை. 45அப்படிப்பட்டவனை அவர் என்ன செய்தார் என்று கவனியுங்கள். அவன் வாழும் நேரம் என்னவென்று அவன் அறியாமலிருந்ததால், அவர் அவனைக் கடிந்து கொள்கிறார்: ''நீ இஸ்ரவேலிலே போதகனாக இருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா?'' ''ஒருவன் மறுபடியும் பிறக்க வேண்டும்'' என்று அவர் கூறினபோது, அவன், ''வயோதிபனான் நான் என் தாயின் கர்ப்பத்தில் எப்படி இரண்டாந்தரம் பிரவேசிக்கக் கூடும்?'' என்று கேட்டான். அவர், “பெத்தெகொஸ்தே சபையில் நீ ஒரு பேராயராக, ஒரு கார்டினலாக, ஒரு மாகாணப் போதகராக இருந்தும்'' (அல்லது வேறெதாகிலும் ஒரு சபையில்) ஒரு ஸ்தாபனத்தில் பெரிய மனிதனாக இருந்தும், வேதவாக்கியங்கனை அறியாமலிக்கிறாயா?'' என்றார். “ஓ எங்களுக்கு மோசே இருக்கிறான்''. ''நீங்கள் மோசேயை அறிந்தீர்களானால் என்னையும் அறிவீர்கள். ஏனென்றால் அவன் என்னைக் குறித்து பேசியிருக்கிறான்''. பாருங்கள்? ஆனால் அவர்களுடைய பாரம்பரியங்களின்படி அல்ல, அவர்களுடைய ஸ்தாபனத்தை அனுசரித்து அல்ல, அது வித்தியாசமானது. ஆனால் மோசே அவரைக் குறித்து சொல்லியிருக்கிறான். அவரைக் குறித்து மோசே சொல்லியிருந்தும், அவர்கள் அவரை அறியாமலிருந்தனர். ஏன்? அவர்கள் அவ்வளவுக்கு பாரம்பரியங்களினால் கட்டுண்டவர்களாயிருந்த காரணத்தால், அவர்கள் அறியாமலிருந்தனர். 46இந்த செய்தியை படிக்கும் அல்லது ஒலிநாடாவில் கேட்கும் என் சகோதரரே, ஆத்திரப்பட்டு இதை விட வேண்டாம். ஒரு நிமிடம் பொறுங்கள். இதை நேரடியாக நாம் பார்ப்போம். உங்களை நான் நேசிக்கிறேன். நீங்கள் மேய்ப்பர்கள், நான் எல்லாம் அறிந்தவனென்று கூற முற்படவில்லை. அப்படிப்பட்ட அபிப்பிராயத்தை நான் உங்களில் உண்டாக்கினால், நீங்கள் ஒலிநாடாவை நிறுத்திவிட்டு எனக்காக ஜெபியுங்கள். சத்தியத்தை மாத்திரம் கொண்டு வர நான் முயல்கிறேன். அது உங்களை விட்டுக் கடந்து செல்ல அனுமதியாதேயுங்கள். நான் மனிதன் கடைபிடிக்கும் ஒழுங்கை மதிக்கிறேன். ஆனால் நீங்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொள்ளும் போது... பரிசேயரை கவனியுங்கள். அவர்கள் சதுசேயரிடம் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஏனெனில் சதுசேயர்களுக்கு தேவதூதன் அல்லது ஆவியின் மீது அல்லது உயிர்த்தெழுதலின் மீது நம்பிக்கையில்லை. பரிசேயர்களுக்கு இவ்விரண்டின் மேலும் நம்பிக்கையிருந்தது. எனவே இருவரும் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். ஒருத்துவக்காரர் ஒன்றை விசுவாசிக்கின்றனர், திரித்துவக்காரர் வேறொன்றை விசுவாசிக்கின்றனர், மெதோடிஸ்டுகள் வேறொன்றை விசுவாசிக்கின்றனர். பிரஸ்பிடோரியன்கள் வேறொன்றை விசுவாசிக்கின்றனர். இதன் விளைவாக அவர்கள் பாகுபாட்டின் கோடுகளை தங்களுக்கென வரைந்து கொள்கின்றனர். அதனால் என்ன நேர்ந்தது? சகோதரர்களிடையே பிரிவினை. இதைக் குறித்து நாம் சற்று வேதத்தில் பார்த்து, அது என்னவென்றும், தேவன் அதைக் குறித்து என்ன சொல்லுகிறார் என்றும் பார்ப்போம். 47இல்லை, இல்லை, அதை மெருகேற்றும்படி அவர் நிக்கொதேமுவிடம் ஒருக்காலும் கூறவில்லை. உண்மையான ஒன்றை அவன் அறிந்திராத காரணத்தால், அவர் அவனைக் கடிந்து கொண்டார். “நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா? பூமிக்கடுத்த காரியங்களை நீ புரிந்து கொள்ளாமல் போனால்...'' யோசித்துப் பாருங்கள்! ”ஒரு போதகன் (master), ஒரு வைதீக சபையில் மேன்மையான பதவி வகிப்பவன், பேராயர், கார்டினல். அப்படிப்பட்ட நீ நான் கூறும் குழந்தை பிறப்பு போன்ற எளிய உலகப் பிரகாரமான காரியங்களைப் புரிந்து கொள்ளாமல் போனால், பரலோகத்திலிருந்து வரும் ஆவிக்குரிய காரியங்களை நீ எப்படி அறிந்து கொள்வாய்?“. ஆனால் கல்வியறிவு இல்லாத ஒரு வயோதிப செம்படவன், தன் பெயரையும் கூட எழுத அறியாதவன், அதை புரிந்து கொண்டு, எருசலேமிலிருந்த சபைக்கு தலைவனாக நியமிக்கப்பட்டான், பேதுரு. பாருங்கள்? ஓ, ''என் பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்'' பாருங்கள்? அவர்கள் அதை புரிந்து கொள்கின்றனர். அவர்கள் அதை விசுவாசிக்கின்றனர். அவர்கள் அதன்படி நடக்கின்றனர். அவர்களை ஒன்றும் தடை செய்ய முடியாது என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர். 48அந்த பண்ணையாளனைப் போல். ஒரு உதாரணத்தைக் கூற ஹாஸ்யமான ஒன்றை உரைப்பது அவ்வளவு இனிமையானதல்ல. ஒரு நாள் ஒரு பண்ணையாளன் கோழியை அடைகாக்க வைத்தானாம். அதற்கு போதிய முட்டைகள் இல்லாததனால், ஒரு வாத்து முட்டையையும் அதனுடன் சேர்த்துவிட்டான். வாத்து முட்டை பொறித்து, வாத்துக் குஞ்சு வெளியே வந்த போது, கோழிக்குஞ்சுகள் கண்ட அனைத்திலும் அது மிகவும் விகாரமாக காணப்பட்டது. அதற்கு விகாரமான நீண்ட முகம் இருந்தது. அது கோழிக்குஞ்சுகளைப் போல், 'க்ளக், க்ளக்' என்று சத்தமிடுவதற்கு பதிலாக, 'க்வாக், க்வாக்' என்று சத்தமிட்டது, தானியக் களஞ்சிய முற்றத்தில் கோழிக்குஞ்சுகள் தீனி பொறுக்கித் தின்றன. ஆனால் வாத்தின் ஆகாரம் அதுவல்ல. ஒரு நாள் தாய் கோழி தன் குஞ்சுகளை வெட்டுக்கிளிகளைப் பிடித்துத் தின்ன ஏரியின் பக்கம் கூட்டிச் சென்ற போது, காற்று ஏரியிலிருந்து வீசினது. அந்த வாத்துக் குஞ்சு உடனே தண்ணீரின் வாசனையை முகர்ந்தது. அதுவே அதன் இயற்கையான சுபாவம். தாய் கோழி, 'க்ளக், க்ளக், க்ளக்' என்று சத்தமிட்டு வாத்துக் குஞ்சை திரும்ப வரும்படி அழைத்தது. ஆனால் வாத்துக் குஞ்சு 'க்வாக், க்வாக்' என்று சத்தமிட்டு தண்ணீரில் சென்றுவிட்டது. ஏன்? அது தொடக்கத்திலேயே வாத்தாக இருந்தது. தாய் கோழி எவ்வளவுதான் 'க்ளக், க்ளக்' என்று சத்தமிட்ட போதிலும், அது வாத்தாகவே இருந்தது. 49நித்திய ஜீவனுக்கென்று முன் குறிக்கப்பட்ட மனிதனும் அப்படித்தான் இருக்கிறான். அவன் தேவனுடைய வெளிச்சத்தைக் காணும் போது, அவனை 'க்ளக்' என்று சத்தமிட்டு அழைத்து தங்களிடம் மீண்டும் சேர்த்துக் கொள்ள இவ்வுலகில் போதிய ஸ்தாபனங்கள் கிடையவே கிடையாது. ஏன்? அது அவன் சுபாவம். நீண்ட காலம் அவன் அவர்களுடன் ஆகாரம் புசித்திருக்கலாம். அவர்களுடைய குப்பையையும், சமூக கூட்டங்கள், போன்றவைகளையும். ஆனால் வித்தியாசமான ஒன்றை அவன் கண்டு கொள்ளும் ஸ்தானத்தை அடையும் போது, அவன் புரிந்து கொள்கிறான். “என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கின்றன'' என்று இயேசு கூறினார். ''அவைகள் அந்நியனுக்குப் பின் செல்லுவதில்லை'' வினோதமான ஒன்றை அவர்கள் பின்பற்றியிருக்கலாம். ஆனால் அவர்களுடைய இருதயத்தின் ஆழத்தில் ஏதோ ஒன்று வித்தியாசமாக உள்ளது. அவர்கள் சத்தியத்தை ஒரு முறை கேட்கட்டும், அப்பொழுது அவர்களைக் கவனியுங்கள். ''என் பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்.'' 50ஆம், நிக்கொதேமு அறிந்திராத காரணத்தால் அவர் அவனைக் கடிந்து கொண்டார். “நீ இஸ்ரவேலில் போதகனாக இருந்தும், நீ மறுபடியும் பிறக்க வேண்டும் என்பதைக் குறித்து அறியாமலிருக்கிறாயா?'', இயற்கையான மனிதனே, ''நீ மறுபடியும் பிறக்க வேண்டும்'' என்பதை கவனிக்க விரும்புகிறேன். இயற்கை வாழ்க்கையில் நாம் பணி செய்ய வேண்டுமென்றால், நமக்கு இயற்கை பிறப்பு அவசியம் உங்களை அவர்கள் மரத்திலிருந்தோ அல்லது வேறு எந்த முறையிலோ இவ்வுலகிற்கு கொண்டு வர முடியாது. அப்படி கொண்டு வர அவர்கள் முயற்சி செய்தனர், ஆனால் அவர்களால் முடியவில்லை. நீங்கள் பணி எடுப்பதற்கு ஒரு இயற்கை பிறப்பு அவசியம். அப்பொழுது நீங்கள் ஐம்புலன்கனைப் பெறுகிறீர்கள். நடத்தல், பேசுதல், பார்த்தல், ருசி பார்த்தல், உணர்தல், முகர்தல், செவி கேட்குதல் போன்றவை. அப்பொழுது தான் நீங்கள் மானிடப்பிறவிகளாக இருக்கின்றீர்கள். இவையனைத்தும் அந்த இயற்கை பிறப்புடன் தொடர்பு கொண்டுள்ளதால், அவைகளை நீங்கள் பெற்றுக் கொள்கிறீர்கள். 51அத்தகைய பிறப்பில் சில நேரங்களில் நீங்கள் மிகுந்த உலக ஞானம் பெற்று, ஜனாதிபதிகள், கல்வியறிவுள்ள மேதைகள், இயந்திரம் பழுது பார்க்கும் சிறந்த மெக்கானிக்குகள், விஞ்ஞானிகள் போன்றவர்களாகிவிடுகின்றீர்கள். ஆதிமுதற் கொண்டு இத்தகைய ஞானத்தை காயீனின் புத்திரர் மாத்திரமே பெற்றிருந்தனர் என்று உங்களுக்குத் தெரியும். சேத்தின் புத்திரர் அல்ல. அவர்கள் தாழ்மையுள்ளவர்களாயும். ஆடு மேய்ப்பவர்களாயும் இருந்தனர். ஆனால் அவர்கள் தேவ பக்தியுள்ளவர்களாயிருந்தனர். ஆனால் காயீனின் புத்திரரோ நுண்ணறிவு படைத்தவர்களாகவும், விஞ்ஞானிகளாகவும், மருத்துவர்களாகவும் பெரிய மனிதர்களாகவும் விளங்கினர். அது உண்மை. வேதம் அவ்வாறு கூறுகின்றது, போதிக்கின்றது. அவர்கள் மிகவும் பக்தியுள்ளவர்களாயிருந்து, முடிவில் அழிந்து போயினர். நாம் பள்ளிக்குச் செல்வதனால் நுண்ணறிவு படைத்து, ஞானத்தைப் பெற்று, சில நேரங்களில் ஆவியின் நிறைவைப் பெற்ற மனிதரை வெல்லும் அளவுக்கு காரியங்களைச் செய்கிறோம், பேசுகின்றோம். இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் ராஜ்யத்தின் புத்திரரைக் காட்டிலும் அதிக புத்திமான்களாயிருப்பார்கள்'' என்று இயேசு கூறவில்லையா? (லூக்.16:8), நிச்சயமாக ஏனெனில் அவர்களுடைய புத்தி கூர்மையின் காரணமாக அவர்கள் மற்றவர்களை ஞானத்திலும் பேச்சிலும் வென்று, வேதவாக்கியங்கள் சொல்லாத ஒன்றை சொல்லும்படி அவைகளைப் புரட்டுகின்றனர். 52''ஓ, அது அப்படி அர்த்தம் கொண்டதல்ல.“ ஒரு மனிதன் அவ்வாறு கூறுவானானால், அவனை விட்டு விலகுங்கள். தேவன் தமது வார்த்தையை கவனமாய் பாதுகாக்கிறார். வேதம் அவ்வாறு கூறுகின்றது என்று உங்களுக்குத் தெரியும். அது எவ்வாறு இருக்க வேண்டுமோ அவ்வாறே எழுதப்பட்டுள்ளது. பாருங்கள்? அது வஞ்சிப்பதற்கும், ஞானிகளை இடறப் பண்ணுவதற்கும் அம்முறையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. அது மிகவும் எளிமையாக உள்ள காரணத்தால் அவர்கள் இடறுகின்றனர். பாருங்கள்? சரி. அவர்கள் சேகரிக்கும் இந்த ஞானமும் மற்றவைகளும்... அந்த பிறப்பு இந்த உலகில் நிகழும் ஒன்று. அது இவ்வுலகில் நிகழ்கின்றது. அது தேவனுடைய ஆவிக்கு விரோதமாய் உள்ளது. முதலாம் பிறப்பு, இவ்வுலகில் நம்மை பணி செய்பவர்களாக ஆக்குகின்றது. ஏதேன் தோட்டத்தில் நிகழ்ந்த பாவச்செயலின் காரணமாக அது நம்மை மரிக்கும் மானிடராக்குகிறது. அது மனிதன் இவ்வுலகில் ஒரு ஸ்திரீயின் மூலம் தோன்றும்படி செய்துவிட்டது. ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் வாழ்நாள் குறுகினவனாயிருக்கிறான், ஆனால் கிறிஸ்துவினால் பிறக்கிற மனிதனோ நித்தியமானவன். ''ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்'' என்று யோபு கூறினான். (யோபு 14:1). கவனியுங்கள், ஆனால் கிறிஸ்துவினால் பிறக்கிற எவனும் பரலோகத்திலிருந்து பிறக்க வேண்டியவனாயிருக்கிறான். ஆனால் இவ்வுலகில் இயற்கையாக பிறக்கிற மனிதன் ஞானத்தைப் பெற்று, தன் நுண்ணறிவின் மூலம் மற்றவர்களை மேற்கொள்ளுகிறவனாயிருக்கிறான். 53பிசாசு எவ்வளவு நுண்ணறிவு படைத்தவன் என்று பாருங்கள். இவ்வுலகில் தோன்றின ஒவ்வொரு குருவானவரையும் அவன் வஞ்சித்துவிட்டான். அவன் நிச்சயம் அப்படி செய்தான், இப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறான். ஆம், நிச்சயம் செய்தான். அவன் சாமர்த்தியமுள்ளவன். ஆனால் ஒரு நாள் அவனை எதிர்த்து வெல்லக்கூடிய ஒருவரை அவன் சந்தித்தான். அவர் அவனை வென்றார். நாம் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று, அவர் மேல் சார்ந்திருப்பதே. அவர் ஏற்கனவே அவனை வென்றுவிட்டார். பாருங்கள்? பூமியில் தோன்றும் மனிதன் ஞானத்தை சேகரித்து, மனிதன் ஏன் இதை செய்ய வேண்டும், அதை செய்யவேண்டும் என்று நிரூபித்துக் காண்பிக்கிறான். ஆனால் அந்த மாமிச சிந்தை தேவனுக்கு விரோதமான பகையாகவும் முரணாகவும் உள்ளது. அவர்கள் எவ்வளவு சாமர்த்தியமாக வேதத்தைப் புரட்டினாலும், தேவன் ஸ்தாபனம் ஒன்றை வைத்திருந்ததாகவோ, அல்லது ஸ்தாபனம் ஒன்றை ஏற்படுத்தக் கட்டளையிட்டதாகவோ யாராகிலும் எனக்கு வேதத்திலிருந்து காண்பிக்கும்படி விரும்புகிறேன். அதற்கு மாறாக, அவர் அதை வேதத்தில் கண்டித்துள்ளார். அவர்கள் எவ்வளவு சாமர்த்தியமாக இருக்க முயன்ற போதிலும், அது முரணான செயலே! ஞானம் ஒருக்கால் உங்களை விவாதத்தில் வென்று, நீங்கள் அறிவில் மிகச் சிறியவர்கள் என்னும் உணர்ச்சியை உங்களுக்கு அளிக்கக்கூடும். ஆனால் அது வேதவாக்கியங்களுக்கு முரணானதே! 54ஒருவர் என்னிடம், ''சகோ. பிரான்ஹாமே, உங்கள் பேரில் எனக்கு ஒரு குறையுண்டு. நீங்கள் 'இயேசு மாத்திரம்' ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்'' என்றார். நான், “இல்லவே இல்லை. நான் எந்த ஸ்தாபனத்தையும் சேரவில்லை'' என்றேன். ஒரு குறிப்பிட்ட மாகாணத்தின் போதகர் ஒருவர் அன்றொரு நாள், “சகோ. பிரான்ஹாமே, நீங்கள் 'இயேசு மாத்திரம்' ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர் என்று யாரோ ஒருவர் என்னிடம் கூறினார்'' என்றார். நான், “அது தவறான ஒன்று, அது தவறு'' என்றேன். அவர், “அவர்கள் என்னிடம், நீங்கள் தடையற்ற காதலில் (Free Love) நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள் என்றும், மனிதர் தங்கள் மனைவிகளை விட்டு விட்டு...'' என்றார். பாருங்கள், அது பிசாசின் பொய். அது உங்களுக்குத் தெரியும். நான், ''வேதத்துக்கு விரோதமாயுள்ள செயல்களை நான் முற்றிலும் எதிர்ப்பவன். நான் பரிசுத்தத்திலும், சுத்தத்திலும் நம்பிக்கை கொண்டவன். ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் தன் மனைவியுடன் கட்டப்பட்டிருக்கிறான் என்று நம்புபவன் நான்“ என்றேன். முதலில் நீங்கள் ஜெபம் செய்யாமல், உங்கள் மனைவியைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. 55“இயேசு மாத்திரம்'' குழுவினருக்கு விரோதமாக எனக்கு ஒன்றுமில்லை. மற்ற எந்த குழுவினரைப்போல் அவர்களும் நல்லவர்களே. ஆனால் அவர்கள் தவறாக ஞானஸ்நானம் கொடுக்கின்றனர். அவர்கள் மறு ஜென்மத்திற்காக (regeneration) ஞானஸ்நானம் கொடுக்கின்றனர். நாம் பரிசுத்த ஆவியினால் மறு ஜென்மம் அடைகிறோம் என்பதே என் நம்பிக்கை, தண்ணீரினால் அல்ல. நான் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கிறேன் என்பது உண்மை. அதற்கு முரணாக வேத வாக்கியம் எதுவும் கிடையாது. வேதத்தில் யாருமே பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறவில்லை. அம்முறையில் ஒருவராவது ஞானஸ்நானம் பெற்றதாக யாராவது வேதத்திலிருந்து எனக்குக் காண்பிக்க விரும்புகிறேன். அது வேதத்திற்கு விரோதமான செயலாக இருக்குமானால், அப்படிச் செய்வதை விட்டுவிடுங்கள். “அதனால் வித்தியாசம் ஒன்றுமில்லை'' என்று நீங்கள் கூறலாம். ஆனால் பவுலுக்கு அது வித்தியாசத்தை உண்டு பண்ணினது. அவர்கள் மறுபடியும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்று, பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று அவன் கட்டளையிட்டான். வானத்திலிருந்து வருகிற ஒரு தூதன் வேறொரு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக் கடவன் என்று பவுல் கூறினான். பாருங்கள், அது பாரம்பரியம், 56அண்மையில் ஒரு பெரிய மனிதனுடன் நான் பேசிக் கொண்டிருந்தேன். அவர், “சகோ. பிரான்ஹாமே, என்னால் முடியாது. அது (இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானம் - தமிழாக்கியோன்) சரியென்று எனக்குத் தெரியும், ஆனால் நான் என்ன செய்வது?'' என்றார். நான், “அதற்கு கீழ்ப்படியுங்கள்'' என்றேன். அவர், ''ஜனங்களிடையே எனக்கு கௌரவம் உள்ளதே'' என்றார். நான், “எனக்கு தேவனிடம் கௌரவம் வேண்டும். எனவே அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிகிறேன். நீங்கள் இவ்விரண்டில் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் தேவனுக்கு ஊழியஞ் செய்வீர்களா, அல்லது மனிதனுக்கு ஊழியஞ் செய்வீர்களா?'' என்று கேட்டேன். ஆனால் அவர்களுடைய ஸ்தாபனங்கள், இப்படிப்பட்ட பிரகடனங்களை சேர்த்து, அவைகளைப் பின்பற்றுகின்றனர். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் முதன் முதலாக கொடுக்கப்பட்டது ரோமன் கத்தோலிக்க சபையில் தான். அது உண்மை. அது உண்மையல்ல வென்றுயாராகிலும் எனக்குக் காண்பிக்க விரும்புகிறேன். நான் சபை சரித்திரம் படித்திருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். எனவே அது கத்தோலிக்க ஞானஸ்நானம் என்பதை அறியவும். அம்முறையில் ஞானஸ்நானம் பெற்றுள்ள அனைவரும் கத்தோலிக்க ஐக்கியத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்படுகின்றனர். கர்த்தருக்கு சித்தமானால், இன்று இரவு கூட்டம் முடியும் முன்பே, அதை நான் நிரூபிப்பேன். அது உண்மை. அதனால் தான் நீங்கள் வெளியே வரவேண்டும். 'இயேசு மாத்திரம்' ஸ்தாபனத்தில் அருமையானவர் அநேகர் உள்ளனர். அவ்வாறே 'அசெம்பிளிஸ் ஆஃப்காட்' ஸ்தாபனத்திலும் 'சர்ச் ஆஃப் காட்' ஸ்தாபனத்திலும் மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், கத்தோலிக்க ஸ்தாபனங்களிலும் அருமையானவர் அநேகர் உள்ளனர். ஆனால் அவை எதுவுமே உண்மையான சபையல்ல. அவைகளில் உள்ள தனிப்பட்ட நபர் சிலர் உண்மையான சபையைச் சார்ந்தவர்கள். அவர்கள் ஏற்படுத்தியுள்ள ஸ்தாபனங்கள் சபையாகாது. மனிதன் அதை அப்படியாக்க முயல்கிறான். அது தவறு. இன்னும் சிறிது நேரத்தில் இதன் சம்பந்தமான சில வேதவாக்கியங்களை எடுத்துக் கூற விரும்புகிறேன். 57ஆம், இவ்வுலகில் பணி செய்ய, நீங்கள் இயற்கை பிறப்பை பெற்றிருத்தல் அவசியம். நான் முன்பு கூறின விதமாக, அத்தகைய பிறப்பு நம்மை உலகப் பிரகாரமான ஞானிகளாக்குகிறது. பாருங்கள்? நாம் சாமர்த்தியசாலிகளாகவும், நுண்ணறிவு படைத்தவர்களாயும் ஆகின்றோம். நமது புத்திகூர்மை இவைகளை நமக்களிக்கிறது. ஆனால் இந்த பிறப்பு ஆதி முதற்கொண்டே முரணான ஒன்றாக அமைந்துள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது இவ்வுலகத்துக்குரியதாகவும், தேவனுடைய வார்த்தைக்கு முரணாகவும் உள்ளது. அது தேவனுக்கும் அவருடைய திட்டத்துக்கும் மூடத்தனமாகவும், அவருடைய திட்டத்தை அறியாததாகவும் அமைந்துள்ளது. அப்படி இல்லையென்றால், இயேசு அறிந்திருந்ததைக் காட்டிலும் நிக்கொதேமு அதிகம் அறிந்திருப்பான். பாருங்கள்? “இஸ்ரவேலில் போதகனாக இருந்தும்'' பாருங்கள்? உங்கள் ஸ்தாபனங்கள்... நுண்ணறிவு படைத்த மக்கள் ஒன்று கூடி வகுக்கும் திட்டங்கள் எந்நிலையிலுள்ளன என்பதைப் பாருங்கள். 58இதை உங்களிடம் கூற விரும்புகிறேன். ஒவ்வொரு முறையும் தேவன் இவ்வுலகிற்கு வெளிச்சத்தை அனுப்பி, வேதத்தை பிரகாசிக்கச் செய்யும் போது, ஜனங்கள் அதை பின்பற்றுகின்றனர். ஆனால் அந்த மனிதன் மறைந்தவுடன் அவர்கள் ஒரு ஸ்தாபனம் உண்டாக்கிக் கொள்கின்றனர். அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்ட மாத்திரத்தில்; சரித்திரக்காரர் யாராகிலும் (இங்குள்ளவர்களும், இந்த ஒலி நாடாவைக் கேட்டவர்களும்) இதை எனக்கு காண்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். எந்த காலத்திலும், மனிதன் ஒரு ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டபோது, அது அங்கேயே மரித்துவிட்டது. அதன் பின்பு அது எழும்பவேயில்லை. அது தேவனுக்கு முரணாயுள்ளது. அது வேத வாக்கியங்களுக்கு முரணாயுள்ளது. எனவே, தேவன் விரோதமாயுள்ள எதற்கும் நானும் விரோதமாயுள்ளேன். தேவன் எனக்குள் இருப்பாரானால், அவர் எதற்கெல்லாம் விரோதமாயுள்ளாரோ, அவைகளுக்கு நானும் விரோதமாயிருப்பேன். அவருடைய சத்துரு என்னுடைய சத்துரு. அவருடைய சபை என்னுடைய சபை. அவருடைய ஜீவன் என்னுடைய ஜீவன். நான் அவருடைய கிருபையின் மூலம் அவரைப் போல் ஆகவேண்டும் என்பதற்காக அவர் நானாகி தமது ஜீவனைக் கொடுத்தார். பாருங்கள்? நாங்கள் இடம் மாற்றிக் கொண்டோம். நான் அவரைப் போல் தேவனுடைய குமாரனாக ஆக வேண்டும் என்பதற்காக, அவர் என்னைப் போல் பாவியாகி, என்னுடைய ஸ்தானத்தை ஏற்று, எனக்காக மரித்தார். 59உங்கள் ஸ்தாபனங்கள் எங்கு சென்றுவிட்டன என்று உங்களால் இப்பொழுது காணமுடிகிறதா? (நான் இன்னும் தொடங்கவில்லை). அவை உலகப்பிரகாரமான ஞானத்தினால் ஞானமுள்ளவைகளாகி, தேவனுடைய திட்டத்துக்கு மரித்தவைகளாயுள்ளன. இங்கு சற்று நிறுத்திக் கொண்டு, பின் நோக்கிப் பார்ப்போம். ஆதாம் தேவனுடைய திட்டத்துக்கு முரணாயிருந்தான். ஏனெனில் அவன் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமற் போனான். அவன் தனக்கென்று ஒரு மறைப்பை, மார்க்கத்தை உண்டாக்கிக் கொள்ள முயன்றான். அது தோல்வியடைந்தது. அது எக்காலத்தும் தோல்வியடைந்து வந்துள்ளது. மனிதன் செய்ய முயன்றது அனைத்தும் நிம்ரோத் தவறினான், கோரா அழிந்து போனான். அவர்கள் என்ன செய்ய முயன்றனர்? ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொள்ள முயன்றனர். அவர்கள் முடிவில் தங்களை ஸ்தாபித்துக் கொண்ட போது, இயேசு அவர்களை மரித்தவர்களாகக் கண்டார். அவர், “கண்களிலிருந்தும் உங்களால் காணமுடியவில்லை, காதுகளிலிருந்றும் உங்களால் கேட்க முடியவில்லை'' என்றார். பாருங்கள்? ”நீங்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறீர்கள். குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியில் விழுவார்களே'' என்றார். அவர் நிக்கொதேமுவிடம், “நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும், மறுபிறப்பு என்னவென்பதை அறியாமலிருக்கிறாயே. நீ பாரம்பரியங்களை அகற்றிவிட்டு வார்த்தையில் நிலைத்திருந்தால், மனிதனுக்கு மறுபிறப்பை அளிக்க நான் வரப்போகிறேன் என்பதை அறிந்திருப்பாய். என் நாளை நீ அறிந்திருப்பாய். மோசேயை நீ அறிந்திருந்தால், என்னையும் அறிந்திருப்பாய். மோசே என்னைக் குறித்து பேசி, நான் வருவேன் என்று முன்னுரைத்தான். இதோ நான் வந்துவிட்டேன். மோசேயும் தீர்க்கதரிசிகளும், நான் செய்வேன் என்று கூறினவைகளை நான் செய்யாமல் போனால், என்னை விசுவாசிக்க வேண்டாம். நான் தேவனுடைய கிரியைகளைச் செய்யாமலிருந்தால், என்னை விசுவாசியாதேயுங்கள். நான் மனிதனாக உள்ள காரணத்தால் என்னை விசுவாசிக்காமல் போனால், என் கிரியைகளையாவது விசுவாசியுங்கள், ஏனெனில் அவைகள் என்னைக் குறித்து சாட்சி கொடுக்கின்றன'' என்றார். பாருங்கள்? 60ஆனால் அன்று போல் இன்று அவர் உலகில் வந்திருப்பாரானால், அசெம்பிளிஸ் ஆஃப் காட், ஒருத்துவக்காரர் மற்றும் ஒவ்வொருவரும் ஒரு இயேசுவைப் பெற்றிருப்பார்கள். நிச்சயமாக. ஸ்தாபனங்களும் இப்படிப்பட்ட விளையாட்டை விளையாட வேண்டும். இல்லையேல், அவர்கள் ஸ்தாபனமல்ல. சகோதரர்களைப் பிரித்தல். சிறிய டேவிட் என்பவரை, அவர் சிறிய பையனாக இருந்த போதே அறிவேன். அவருக்கு விவாகமாகி குழந்தைகளும் இருக்கின்றனர் என்று நினைக்கிறேன். அவர் சிறுவனாக பிரசங்கம் செய்ததை நினைவு கூருகிறேன். நான் செயின்ட் லூயிக்கு சென்றிருந்தேன். சிறுவர் பிரசங்கிகளைக் குறித்து நான் கேள்விப்பட்டதுண்டு. அவர்கள் எழுந்து நின்று, “இயேசு சிறு குழந்தையாக மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்'' என்று கூறிவிட்டு, ”அம்மா, பிறகு என்ன?'' என்று கேட்பார்கள். ஆனால் இந்த சிறுவன் அப்படியல்ல. அவன் 'கோட்'டை கழற்றி வைத்து விட்டு, வேதத்திலிருந்து ஒரு வசனத்தை எடுத்து, சிறப்பாக பிரசங்கம் செய்வான். ஆனால் அவன் யார்? அவன் 'இயேசு மாத்திரம்' குழுவைச் சேர்ந்தவனாயிருந்தான். அவனுடைய தந்தை திரு. வாக்கர், 'இயேசு மாத்திரம்' குழுவைச் சேர்ந்தவர். அது அசெம்பிளிஸ் ஆஃப் காட்டுக்கு பொறுக்கவில்லை. எனவே அவர்களும் ஒரு சிறிய டேவிட்டை தேர்ந்தெடுத்தனர். மற்ற ஸ்தாபனங்களும் சிறிய டேவிட்டுகளை தேர்ந்தெடுத்தனர். ஒரு நாள் அந்த சிறுவன் பிளாரிடாவில் கூட்டம் நடத்திக் கொண்டிருந்த போது, நான் அவனுக்கு உதவி செய்ய என்னை அழைத்திருந்தான், அப்பொழுது நானும் சகோ. மூரும் செய்தித்தாளைப் படிக்க நேர்ந்த போது, முதலிரண்டு பக்கங்களில் சிறிய டேவிட்களைத் தவிர வேறு செய்தியே காணப்படவில்லை. எல்லா சபைகளும் சிறிய டேவிட்டுகளைக் கொண்டிருந்தன. ஓ, என்னே! தேவனுடைய மூப்பர்களில் சிலர் அந்த சிறுவன் பெற்றிருந்த அந்த வரத்தை அடையாளம் கண்டு கொண்டிருந்தால், அவன் மனித பாரம்பரியங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு, ஆயிரக்கணக்கான ஆத்துமாக்களை தேவனுடைய ராஜ்யத்துக்குள் கொண்டு வந்திருப்பான். அவனுடைய வாழ்க்கையில் தேவன் அவனுக்கு ஒரு வரத்தையளித்து அதை உபயோகித்தார். 61தெய்வீக சுகமளித்தல் முதன் முறையாக நடந்த போது, எல்லோருக்குமே தங்கள் கரங்களில் உணர்ச்சி உண்டானது. எல்லோருமே வியாதிகனை முகர முடிந்தது. ஓ, என்னே! ஏன்? அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. ஏனெனில் அவர்களுடைய ஸ்தாபனங்கள் ஓட்டப்பந்தயத்தில் பின்னால் இருந்தன. பாருங்கள், உங்கள் ஸ்தாபனங்களை நீங்கள் தேவனுடைய திட்டத்திற்கு முந்தி போகும்படி செய்கிறீர்கள். ஆனால் அதே சமயத்தில் தேவன் தமது சபையை காணக் கூடாத சரீரத்தை வழிநடத்திச் செல்கிறார். அதில் நீங்கள் சேருவதில்லை, அதற்குள் நீங்கள் பிறக்கின்றீர்கள். உலக ஞானத்தின்படி ஞானமுள்ளவர்கள், ஆனால் தேவனுடைய திட்டத்தின்படி மரித்தவர்கள். அப்படியானால் எனக்குச் சொல்லுங்கள், எனக்குச் சொல்லுங்கள் தேவனுடைய வார்த்தையின்படியும் வாக்குத்தத்தத்தின்படியும் அவர்கள் தவறென்று நிரூபித்து, அதை எடுத்துரைத்தாலும், அவர்கள் அதை புரிந்து கொள்ளமாட்டார்கள். நான் இப்பொழுதே தேவனுடைய வசனத்தை எடுத்து, ஸ்தாபனங்கள் தவறென்று உங்களுக்குக் காண்பிக்க முடியும். நீங்கள் பெற்றுள்ள ஸ்தாபனப் பிரமானங்கள் தவறென்பதை என்னால் காண்பிக்க முடியும். ஆனால் அவர்களோ, “இப்படித்தான் நாங்கள் விசுவாசிக்க கற்பிக்கப்பட்டிருக்கிறோம்'' என்பார்கள். பாருங்கள், என் கருத்தின்படி அது மாட்டின் தீவனம். ஆம், அது உண்மை. அவர்களால் அதை காணமுடிவதில்லை. ”நீங்கள் என்னிடம் வந்து ஜீவனைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை உங்களால் காண முடியவில்லை'' என்று இயேசு கூறினார். 62நிக்கொதேமு அங்கு நின்று கொண்டிருந்தான். அவன் மிகவும் கௌரவமுள்ளவன், பெரியவன், தன் சபையில் பேராயர். பிரபலமானவன், எல்லோராலும் சிநேகிக்கப்பட்டவன். அவன் இயேசுவினிடத்தில் வந்தபோது, ஜீவனைக் குறித்து ஒன்றுமே அறியாதவனாயிருந்தான். அதற்காக இயேசு அவனைக் கடிந்து கொண்டார். ஆனால் அவரிடம் வர வேண்டுமெனும் போதிய உத்தமம் அவனிடம் இருந்தது. மற்றவர்களோ அவரிடம் வரவேயில்லை. அவர்கள் பிரதான ஆசாரியர்களுடனும் பேராயர் இன்னாருடனும் அங்கேயே நின்றுவிட்டனர். பாருங்கள்?தேவனுடைய வார்த்தையைக் கேட்பதற்கு பதிலாக அவர்கள் முன்னோர்களின் பாரம்பரியங்களை ஏற்றுக் கொண்டு, அவர்களுடன் நின்றுவிட்டனர். 63அவர்களுக்கு நீங்கள் சத்தியத்தை எடுத்துரைத்தாலும், அவர்கள் செவி கொடுக்க மாட்டார்கள். நீங்கள் எவ்வளவு தான்... உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?... உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். இதை அவபக்தியாய் கூறவில்லை. ஒலிநாடாவைக் கேட்டுக் கொண்டிருக்கும் சகோதரரே, இதை நான் அவபக்தியாய் கூறவில்லை. நான் நடந்து கொண்டிருக்கும்போது, மரத்திலுள்ள ஒரு கணு என்னைப் பார்த்து, ''உன்னால் எப்படி இவ்வாறு நடக்க முடிகிறது? எனக்கும் கூட ஜீவன் உண்டு. நான் மரத்தில் இருக்கும் கணு என்று கேட்க முடியும் என்று நினைக்கின்றீர்களா? அதற்கு ஜீவன் உள்ளது என்று அதனால் நிரூபிக்க முடியும். ஆனால் அது வேறு வகையான ஜீவன். அது என்னைப்போல் நடந்து, பார்த்து, ருசி பார்த்து, உணர்ந்து, முகர்ந்து, கேட்டு, என்னிடம் பேசி இதைக் கேட்க விருப்பப்பட்டால், நான் எப்படி பிறந்திருக்கிறேனோ, அதே விதமாக அதுவும் பிறந்திருக்க வேண்டும். ஆமென். வேறெந்த வகையிலும் அது அதை அறிந்து கொள்ள முடியாது. ஆனால் நான் பிறந்த விதமாகவே அதுவும் பிறந்திருந்தால், நான் அறிந்துள்ள காரியங்களை அதுவும் அறிந்திருக்கும். ஆமென். ஓ, என்னே! ஆம் ஐயா. நாம் எப்படி நடந்து பணி செய்கிறோம் என்று ஒரு மரத்தின் கணுவிடம் நீ சொல்ல முடியாது. அதை புரிந்து கொள்ள, நாம் பெற்றுள்ள அதே விதமான ஜீவனை அது பெற்றிருத்தல் அவசியம். ஆவியைப் பொருத்த வரையிலும் அவ்வாறேயுள்ளது. அதே ஆவியை நீங்கள் பெற்றிராவிடில், உங்களால் புரிந்து கொள்ளவே முடியாது. அதை புரிந்து கொள்ள முயற்சி செய்ய அவசியமில்லை. முதலாவது அவரிடம் வாருங்கள். ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காண மாட்டான்'' என்றார். அவர், ''அப்படியானால் அதை புரிந்து கொள்ள மாட்டான்'' என்று அர்த்தம். அதை புரிந்து கொள்ள நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும். 64நீங்கள், ''நான் மறுபடியும் பிறந்திருக்கிறேன்'' எனலாம். ஆனால் நீங்கள் வார்த்தையை மறுதலிக்கின்றீர்களே! அது எப்படி முடியும்? உங்கள் சொந்த ஜீவியமே அதற்கு சாட்சி பகருகின்றது. நீங்கள் சேர்ந்துள்ள அதே குழு, ஒரே வர்க்கத்தை சேர்ந்த பறவைகள். பாருங்கள்? இன்னும் சிறிது நேரத்தில் அதற்கு வரும் வரை காத்திருங்கள். அது ஆவியினால் வருகிறது. ஆவியினால் பிறவாத ஜனங்களுக்கு ஆவிக்குரிய காரியங்களை நீங்கள் எவ்வாறு கூற முடியும்? ஆவிக்குரிய காரியங்களைப் புரிந்து கொள்ள நீங்கள் ஆவியினால் பிறந்திருக்க வேண்டும். “காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது. அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும் இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது'' என்று இயேசு கூறினார். (யோவான் 3:8). ஆவியினால் பிறந்த ஒவ்வொருவனும் அப்படியே இருக்கிறான். அவனால் சுயமாக ஒன்றும் கூற இயலாது. ஆவியினால் பிறந்த எவனும் சுயமாக சிந்திப்பதில்லை. அவனுக்காக தேவன் சிந்திக்க அவன் விட்டுக் கொடுக்கிறான். 65இந்த மேடையில் நான் நின்று கொண்டு, என் சுய சிந்தையை உபயோகித்து, பின்னால் அமர்ந்துள்ள ஒருவரைப் பார்த்து, ''இவர் பெயர் ஜான் டோ. அவர் இன்ன இடத்திலிருந்து வந்துள்ளார். அவர் இன்னதை செய்துள்ளார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஒருத்தியை விவாகம் செய்து, அவள் மூலம் அவருக்கு குழந்தைகள் உள்ளன'' என்று சொல்ல முடியும் என்று நினைக்கிறீர்களா? இவ்வுலகில் நேர்ந்துள்ள இப்பிறப்பில் அப்படிப்பட்ட ஞானம் இருக்கவே முடியாது. அது அதைக் காட்டிலும் மேலானது. அது பரத்திலிருந்து வர வேண்டும், நீங்கள் பரத்திலிருந்து வரும் ஆவியினால் பிறக்கும்போது, அவருக்குள் இருந்த ஜீவன் உங்களுக்குள் வந்து விடுகிறது. ''நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்''. (யோவான் 14:12). 66உங்கள் பிறப்பு மாற வேண்டியதாயுள்ளது. நீங்கள் வஞ்சிக்கப்பட்டீர்கள். ஒருக்கால் நீங்கள் அந்நிய பாஷை பேசியிருக்கலாம், மேலும் கீழும் குதித்திருக்கலாம். கூச்சலிட்டிருக்கலாம், இதை, அதை, மற்றதை செய்திருக்கலாம். உங்கள் ஸ்தாபனத்தில் நீங்கள் உத்தமமான அங்கத்தினராயிருக்கலாம். நிக்கொதேமுவும் அப்படித்தான் இருந்தான். ஆனால் மறுபிறப்பு அவனுக்கு அவசியமாயிருந்தது. நீங்கள் வார்த்தையை மறுதலித்து, அதை எங்கோ பொருத்தப் பார்த்து, ஏதாவதொன்றைச் செய்து அதை சிதறடிக்கப் பார்க்கிறீர்கள். ''விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்'' என்று இயேசு கூறினார். அவர் எப்பொழுது அதை சபைகளிலிருந்து எடுத்துப் போட்டார் என்பதை வேதத்திலிருந்து எனக்கு காண்பியுங்கள் பார்க்கலாம். அவர், ''அது ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் தான்'' என்று கூறியுள்ள வேத வாக்கியத்தை எனக்குக் காண்பியுங்கள். அவர், “உலகமெங்கும், சர்வ சிருஷ்டிக்கும்'' என்று கூறியுள்ளார். 67ஆம், அவர் வாழ்ந்த வாழ்க்கை வாழ்வதற்கு, அவர் பெற்றிருந்த அதே விதமான ஜீவனை நீங்களும் பெற்றிருக்க வேண்டும். அவருடைய ஜீவனை நீங்கள் பெறும்போது. அவருடைய வார்த்தையை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். 'அவர்' தனிப்பட்ட பிரதிப் பெயர் (personal pronoun) - சிந்தையல்ல, கற்பனையல்ல, உணர்ச்சியல்ல. ''பரிசுத்த ஆவியாகிய அவர் வரும்போது, நான் சொன்ன காரியங்களை எடுத்துரைத்து, அவைகளை உங்களுக்கு வெளிப்படுத்தி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.'' அது தான் 'மறுபிறப்பு'. அது வார்த்தை என்பதற்கு அதுவே ரூபகாரம். ஒரு மனிதன், தான் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளதாகக் கூறிக் கொண்டு, அதே சமயத்தில் தேவனுடைய வார்த்தையை மறுதலித்து வேறொரு இடத்தில் அதை பொருத்துவானானால், பரிசுத்த ஆவி எவ்வாறு தம் சொந்த வார்த்தையை மறுதலிக்க முடியும்? வார்த்தையில் நிலைத்துள்ள ஒரு ஸ்தாபனத்தையாகிலும் எனக்குக் காண்பியுங்கள் பார்க்கலாம். பார்த்தீர்களா? சரி. 68ஒரு வியாபாரி... நமது சபை எவ்வளவு மோசமான நிலையையடைந்துள்ளது என்பதைக் காணலாம். மிகவும் முன்னேற்றமடைந்த வியாபாரத்தையுடைய ஒரு வர்த்தகன் உதவி பெற பிணங்களிடம் சென்று, ''எனக்காக வேலை செய்'' என்று கேட்பான் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அதனால் அவனுக்கு எந்த பயனும் இருக்காது. அதன் காரணமாகவே ஸ்தாபனம் மீண்டும் உயிரோடு எழும்புவதில்லை. பாருங்கள்? நிம்ரோத், கோரா இவர்களைப் போன்று மரித்துப்போன ஒரு கூட்டம் அவிசுவாசிகள் காலங்கள்தோறும் ஒன்று கூடுகின்றனர். அதனால் என்ன பயன்? அவர்களை தேவன் ஒரு போதும் உபயோகித்ததில்லை. அவர் ஒருக்காலும் எந்த ஸ்தாபனத்தையும் உபயோகித்ததில்லை. அவரால் அப்படி செய்ய முடியாது. ஏனெனில் அது தேவனுடைய சித்தத்திற்கு அப்பாற்பட்டதாக உள்ளது. அது அதை கடந்து சென்றுவிட்டது. அதை எட்டிப் பிடிக்க முடியாது. அதை தேடிக் கண்டு பிடிக்கவும் முடியாது. 69திமிர்வாதத்தினால் கை, கால் விழுந்து போன ஒருவனிடம், ஓட்டப் பந்தயத்தில் பங்கு பெற நீ கூறமுடியுமா? எல்லாவற்றையும் அவன் தள்ளிவிட்டு, பொறுமையோடு ஓட அவனிடம் எப்படி கூறமுடியும்? அவனால் கை, கால் ஒன்றையும் அசைக்க முடியாமலிருக்கும் நிலையில் நீ அவ்வாறு கூறமுடியுமா? அவனை முதலில் அந்த வியாதியிலிருந்து நீ சுகப்படுத்தின பின்பு அவனால் ஓட முடியும். ஸ்தாபனத்துக்கு அது தான் அவசியமாயுள்ளது. தெய்வீக சுகமளித்தல். ஓ, என்னே! நான் குற்றம் கண்டு பிடிப்பதாக கருதப்படவில்லை என்று நினைக்கிறேன். பாருங்கள், நான் குற்றம் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் ஆணியை சரியாக அடிக்காவிட்டால், அது எளிதில் பெயர்ந்து வந்துவிடும். பாருங்கள்? அதனால் தான் பரிசுத்த ஆவியானவர் ஒரு ஸ்தாபனத்தை உபயோகிக்க முடியவில்லை. 70கவனியுங்கள், லூத்தர் பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தாரென நான் நம்புகிறேன். முற்றிலுமாக. ஒருக்கால் இன்று அது அளிக்கப்பட்ட அளவுக்கு இல்லாமல் இருந்திருக்கலாம். ஏனெனில் அந்த அளவுக்கு அது அப்பொழுது அளிக்கப்படவில்லை. இந்த கூடாரத்தைச் சேர்ந்தவர்களே, இது கரும்பலகையில் வரையப்பட்டு, அதை ஏற்கனவே நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் லூத்தர் தேவனிடம் விசுவாசம் கொண்டிருந்தார். “விசுவாகிக்கிறவன் எவனோ, அவன் நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிறான்'' என்னைப் போன்று இத்தகைய நம்பிக்கை கொண்டுள்ளவர் வேறு யாருமில்லையென இன்று காலை வரை எண்ணியிருந்தேன். இன்று காலை நான் சார்லஸ் ஃபுல்லர் பிரசங்கிப்பதைக் கேட்டேன். அவரும் கூட மறுபிறப்பு என்பது பரிசுத்த ஆவியின் அபிஷேகம் அல்லவென்று கருதுகின்றார். மறுபிறப்பு என்பது மறுபடியும் பிறத்தலைக் குறிக்கின்றது. ஆனால் பரிசுத்த ஆவி என்பது அபிஷேகம். பாருங்கள்? சரி. 71இந்த மனிதன் சுறுசுறுப்பாக பணி எடுக்க, மறுபடியும் பிறக்க வேண்டுமென்று நாம் பார்க்கிறோம், சரி, மாமிசத்தில் நீங்கள் பிறக்கும் போது, உலகத்துக்கேற்ற ஞானத்தைப் பெறுகின்றீர்கள். இவ்வுலகத்திற்கேற்ற மாமிசப் பிரகாரமான ஆசிரியருக்கு அது கீழ்ப்படிகின்றது. உண்மை. அதனால் தான் மறுபிறப்பைப் பெற்றிராத மனிதரிடம் நீங்கள் எவ்வளவாக தேவனுடைய வார்த்தையை எடுத்துக் கூறினாலும், அவர்கள் ஜீவனுள்ள வார்த்தைக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக தங்கள் பேராயருக்கும், தங்கள் போதகருக்கும், தங்கள் ஸ்தாபனத்துக்கும் கீழ்ப்படிகின்றனர். ஏன்? அவர்களுக்கு அதைத்தவிர வேறொன்றும் தெரியாது. உங்களுக்குத் தெரியுமா, ஒரு நாள் நான் போதகராகிவிடலாம். நிக்கொதேமுவும் கூட ஒரு போதகனாக (Master) இருந்தான். அவன் வகித்தது போதகரைக் காட்டிலும் உயர்ந்த ஒரு பதவி. அவன் இஸ்ரவேலில் 'மாஸ்டர்' ஆக இருந்தான். பாருங்கள்? அவன் ஒரு பெரிய மனிதன். அவன் அந்த குழுவை சார்ந்திருந்து, தேவனைக் குறித்து ஒன்றுமே அறியாதவனாயிருந்தான். அவன் அறிந்திருந்ததெல்லாம் சிறிது சரித்திரமே. 72தேவன் இன்றும் மாறாதவராக இல்லையென்றால், சரித்திரப் பிரகாரமான தேவனால் என்ன பயன்? மோசேயின் தேவன் இன்றும் மாறாதவராக இல்லையென்றால், அவரால் என்ன பயன்? சிலுவையில் ஒரு மனிதனை இரட்சிக்கக் கூடிய தேவன், இன்றும் அதே நிபந்தனையின் பேரில் இரட்சிக்க முடியாமற் போனால், அப்படிப்பட்ட தேவனால் நமக்கு என்ன பயன்? நான் அடிக்கடி கூறுவதுபோல், '' உங்கள் குயில் பறவைக்கு நல்ல தீனியையும், விட்டமின் சத்துக்களையும் அளித்து, அது வலுவான செட்டைகளையும் சிறகுகளையும் பெறும்படி செய்து, அதை கூட்டில் அடைத்து வைப்பீர்களானால் என்ன பயன்?'' எனக்கு புரியவேயில்லை. ஒருவனுக்கு வல்லமையுள்ள தேவனைக் குறித்தும் அவரைக் குறித்த மற்ற காரியங்களையும் எடுத்துரைத்துவிட்டு, அப்படிப்பட்டவைகளை விசுவாசிக்கவும் கூடச் செய்யாத ஒரு ஸ்தாபனத்தில் அவனை வைத்திருத்தல். பாருங்கள்? எல்லாமே போய்விடும். அதன் காரணமாகத்தான் அது தோல்வியடைகின்றது. அவன் மரித்தவனாயிருக்கிறான். ஸ்தாபனத்தை உங்களால் உபயோகிக்க முடியாது. தேவன் அதை ஒரு போதும் உபயோகித்ததில்லை. சற்று யோசித்துப் பாருங்கள். பரிசுத்த ஆவி எந்த ஒரு காலத்திலும் ஒரு ஸ்தாபனத்தை உபயோகித்ததில்லை. அப்படி உபயோகித்ததாக வேதத்திலோ சரித்திரத்திலோ சான்று எதுவுமில்லை. இந்த செய்தியை ஒலி நாடாவில் கேட்பவர், அல்லது இங்குள்ளவர் எவராகிலும், பரிசுத்த ஆவி ஒரு ஸ்தாபனத்தை தெரிந்து கொண்டு இவ்வுலகில் அசைவை உண்டு பண்ணினார் என்று என்னிடம் கூற முடியுமானால், அது எந்த சரித்திர புத்தகத்தில் காணப்படுகின்றது என்பதை எனக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். அது வேத புத்தகத்தில் இல்லை என்று உங்களுக்குத் தெரியும். எனவே, அது எந்த சரித்திரத்தில் காணப்படுகின்றது என்று நீங்கள் காண்பிக்க விரும்புற ஒருக்காலும் உபயோகித்ததில்லை. அவர் எப்பொழுதுமே தனிப்பட்ட நபர் ஒருவரை மாத்திரமே உபயோகிக்கிறார். 73சரி, ஆவியினால் பிறத்தல். மாமிசத்தில் பிறந்து, உலகப் பிரகாரமான ஞானத்தைப் பெறும்போது, மாமிசப் பிரகாரமான ஆசானுக்கு அது கீழ்ப்படிகிறது. ஆவியினால் நாம் பிறக்கும் போது, பரிசுத்த ஆவியின் மூலம் வேதாகமத்திலுள்ள போதகங்களை நாம் விசுவாசித்து, அதற்குக் கீழ்ப்படிகிறோம். ஆவியினால் பிறந்த ஒரு மனிதன், எந்த பாரம்பரியம் எதைக் கூறின போதிலும், தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவான். அது உண்மை. நீங்கள் மறுபடியும் பிறந்திருக்கிறீர்கள். அதனால் தான் நீங்கள் காண்கிறீர்கள். ஒரு ஸ்தாபனத்தை சேர்ந்து கொண்டு, உங்கள் நம்பிக்கை அனைத்தையும் அதில் வைப்பதென்பது... ஸ்தாபனத்திலுள்ள ஜனங்கள் மறுபடியும் பிறக்கவில்லையென்று நான் கூற வரவில்லை. கர்த்தருக்கு சித்தமானால், இன்னும் சில நிமிடங்களில் அதற்கு வருவேன். உண்மையாக அவர்கள் மறுபடியும் பிறந்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் தனிப்பட்ட நபர்கள். ஸ்தாபனம் மறுபடியும் பிறப்பதில்லை. அதிலுள்ள தனிப்பட்ட நபர்கள் மறுபடியும் பிறக்கின்றனர். ஆனால் ஸ்தாபனமோ தேவனிடமிருந்து அவர்களைப் பிரித்துவிடுகின்றது. அதைத்தான் அது செய்கிறது, பிரித்துவிடுகின்றது. சரி. ஸ்தாபனம் எப்பொழுதும் மாம்சத்துக்குரியவைகளைப் போதிக்கின்றது. அது எப்பொழுதுமே தேவனுடைய சித்தத்துக்கு முரண்பாடாயுள்ளது. 74''மறுபடியும் பிறத்தல்'' என்றால் “பரத்திலிருந்து பிறத்தல்'' என்று அர்த்தம். ”மறுபடியும்'' என்பது “பரத்திலிருந்து'' என்று அர்த்தங் கொள்ளும். அது உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். ”மறுபடியும் பிறத்தல்'' என்றால் ''பரத்திலிருந்து பிறத்தல்'' என்று அர்த்தம். நீங்கள் வேண்டுமானால் அகராதியை (lexicon) படித்து அறிந்து கொள்ளலாம். பாருங்கள், அது ''பரத்திலிருந்து வரும் பிறப்பு'' என்று அர்த்தங் கொள்ளும். நீங்கள் இங்கே பிறந்திருக்கிறீர்கள். மறுபடியும் பிறக்க வேண்டுமென்றால், நீங்கள் அங்கே மேலேயிருந்து பிறக்க வேண்டும். அந்த ராஜ்யம் இந்த ராஜ்யத்தைக் காட்டிலும் அதிக உயரமுள்ளதாகவும், மிகப் பெரியதாகவும் அமைந்து, இந்த ராஜ்யம் அந்த ராஜ்யத்திற்கு மூடத்தனமாகவும், அது இதற்கு மூடத்தனமாகவும் காணப்படுகின்றது. 75நான் அடிக்கடி கூறியிருக்கிறேன். சில மாதங்களுக்கு முன்பு நானும் என் மனைவியும் பலசரக்கு (groceries) வாங்க கடைக்கு சென்றிருந்தோம். ஒரு ஸ்திரீ பாவாடை அணிந்துள்ளதை நாங்கள் கண்டோம். நீண்ட நாட்களுக்குப் பின் நாங்கள் கண்ட விசித்திர காட்சி அது. இன்று காலை, இதை அவபக்தியாய் கூறவில்லை. பிரபலமான ஸ்தாபனங்கள் ஒன்றின் ஒலிப்பரப்பை நான் கேட்டேன். ஒரு சபையைப் பிரதிஷ்டை செய்ய நான் என் மகளுடன் போய்க் கொண்டிருந்த போது வானொலியில் இதைக் கேட்டோம். அவர்கள் ஒரு பாட்டைப் பாடினர். அவர்கள் ஏதோ விதமாக ஏதோ ஒன்றைக் குறித்து பாடினர். அது ஆங்கிலக் கர்நாடகப் பாடல் (Classical Singing). அது எப்படி எனக்குக் காணப்பட்டதென்றால், ஸ்திரீகள் சாரீரத்தை உயர்த்தி அவர்கள் முகங்கள் நீல நிறமாகும் வரை மூச்சு பிடித்து. அது பாடுதல் என்று எண்ணுகின்றனர். அது கீச்சிடுதல் (Squeaking). இருதயத்திலிருந்து பாடும் பழைய பெந்தெகொஸ்தே பாடல்கள் எனக்கு அதிக பிரியம். நீங்கள் ராகத்தை கரி வாளியில் கொண்டு செல்ல முடியாது. ஆயினும் நீங்கள் கர்த்தருக்கு ஆனந்த சத்தமிட்டு பாடிகின்றீர்கள். அது ஆவிக்குரியது என்று எண்ணுகின்றேன். அது எனக்குப் பிரியம். ஆனால் முகம் நீலமாகும் வரைக்கும் மூச்சை பிடித்து வைத்து, பின்பு சாரீரத்தை தாழ்த்தி, பின்பு உயர்த்தினால் நீங்கள் என்ன பாடுகிறீர்கள் என்று உங்களுக்கே தெரியாது. அப்படியிருக்க, மற்றவர்கள் அது என்னவென்று அறிந்து கொள்வார்களென்று நீங்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்? இயேசு, “நாங்கள் அறிந்திருக்கிறதை பேசுகிறோம்'' என்றார். அது உண்மை. நாம் என்ன செய்ய வேண்டுமென்றால், நம்முடைய இருதயத்தில் நாம் அறிந்திருப்பதையே, நாம் உணர்வதையே, நாம் பாட வேண்டும். 76அவர்கள் பாடி முடித்தவுடன், இசை பயின்று கொண்டிருக்கும் என் மகள், “அது உண்மையாகவே சிறந்தது (Classic)'' என்றாள். நான், “சரி, அந்த பாடல் குழுவில் பாடின சுமார் ஐம்பது பேர்களில், எத்தனை பேர் தங்கள் சுவாசத்தில் சிகரெட் மணத்தைக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறாய்? நேற்று இரவு சனி இரவானதால், அவர்களில் எத்தனை பேர் சமூக மது அருந்தியிருப்பார்கள் என்று நினைக்கிறாய்? அதிலிருந்த எத்தனை பெண்கள் கூந்தலைக் கத்தரித்துக் கொண்டிருப்பார்கள்? எத்தனை பேர் வர்ணம் பூசிக் கொண்டிருப்பார்கள்? சில நாட்களுக்கு முன்பு ஒரு சபை போதகர், 'தேவன் வர்ணத்தைக் கண்டு பிடித்தபோது, அழகில் சிறந்த உலகத்தைப் படைத்தார்' என்று கூறினாரே என்றேன். வேதத்தில் ஒரே ஒரு பெண் முகத்தில் வர்ணம் தீட்டியிருந்தாள். தேவன் அவளை நாய்களுக்கு இரையாக்கினார். சபையைக் குறித்தும் அஞ்ஞானிகளைக் குறித்தும் அறிந்திருப்பவர் எவரும், வர்ணம் தீட்டுவது அஞ்ஞானிகளின் பழக்க வழக்கம் என்று அறிவர். அது எப்பொதுழுமே அவ்வாறு இருந்து வந்துள்ளது. இருப்பினும் ஸ்திரீகள் அவ்வாறு செய்து வருகின்றனர். மனிதர்கள் புகை பிடித்து, மது அருந்தி, இவ்விதம் சென்று கொண்டு, அதே சமயத்தில் இப்படிப்பட்ட இனிமையான குரல்களில் பாடுகின்றனர். அதற்கு இன்னும் சில நிமிடங்களில் வருவோம். சரி, ஸ்தாபன கருத்தைக் கொண்டிருந்தால், நியாயத்தீர்ப்பின் போது ஏமாற்றம் உண்டாகும் என்பதே என் கருத்து. 77ஆவியினால் பிறப்பது என்பது, விசுவாசித்து ஆவியில் நடந்து கொண்டு, இயேசுவே கிறிஸ்து என்றும், இது அவருடைய வார்த்தை என்றும், அதனுடன் எந்த வார்த்தைகளையும் கூட்டவோ எடுத்துப் போடவோ முடியாதென்றும், அப்படி செய்வதனால் ஜீவ புஸ்தகத்திலிருந்து உங்கள் பெயர்கள் எடுத்து போடப்படும் என்பதை புரிந்து கொண்டு, உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பதாகும். அது மிகவும் திட்டவட்டமானது. உங்கள் பாரம்பரியத்தின் மூலம் நீங்கள் ஒன்றை அதனுடன் கூட்டவோ, அல்லது எடுத்துப் போடவோ செய்தால், “ஜீவ புஸ்தகத்திலிருந்து உங்கள் பெயர் அழிக்கப்படும்'' என்று இயேசுவே கூறியுள்ளார். வேதத்தில் ஸ்தாபனம் எங்குள்ளது என்று கண்டு பிடியுங்கள். அப்பொழுது நீங்கள் ஸ்தாபனத்திலிருந்து ஓடிவிடுவீர்கள். சரி, மாமிசம் என்னவாயிருப்பினும், ஸ்தாபனப்போதகம் வேதத்திற்கு முரணாயுள்ளது. ஆம், மறுபடியும் பிறத்தல் என்பது பரத்திலிருந்து வரும் புதுப்பிறப்பாகும, பரத்திலிருந்து பிறத்தல். அப்பொழுது நாம் பரத்திலிருந்து வரும் காரியங்களினால் சுறுசுறுப்படைகிறோம். ஓ, என்னே! ஏனெனில் அவரே தம்முடைய வார்த்தையினால், அவருடைய திராட்சை கொடியாகிய உங்கள் மூலம் கிரியை செய்கிறவராயிருக்கிறார், திராட்சை செடியிலிருந்து கொடிக்கு. 78அதன் காரணமாகத்தான் இயேசு, ''என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை'' என்றார். (யோவான் 10:37). ஓ, நிச்சயமாக! “பரலோகத்திலிருந்து இறங்கினவரேயன்றி பரலோகத்துக்கேறினவர் ஒருவருமில்லை'' என்று அவர் நிக்கொதேமுவுக்கு அறிவுறுத்துவதை கவனியுங்கள்... அவர் மனிதனாயிருந்தால் தேவனாயிருக்க முடியாது என்று அவர்கள் எண்ணியிருந்தனர் என்று உங்களுக்குத் தெரியும். அப்பொழுது அவர், ”பரலோகத்திலிருந்து இறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல், பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவருமில்லை'' என்றார். அவர்களால் அதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மனுஷ குமாரனாகிய அவர் பரலோகத்திலிருந்து இறங்கி, அவரே பரலோகத்தில் இருக்கிறார் என்றால், அந்த வீட்டில் நின்று கொண்டு நிக்கொதேமுடன் பேசிக் கொண்டிருப்பவர், எப்படி அப்பொழுது பரலோகத்தில் இருக்க முடியும் என்று அவர்கள் குழப்பமுற்றனர். அது தேவன் என்பதை அவன் உடனே கண்டு கொண்டிருக்க வேண்டும். அவர் எங்கும் பிரசன்னர், எல்லாவிடங்களிலும், பாருங்கள்? அவனோ தன் பாரம்பரியங்களின் காரணமாக அதை அறிந்திருக்கவில்லை. அவன் ஆவிக்குரிய சிந்தையை பெற்றிருக்கவில்லை. மாம்சப் பிரகாரமான சிந்தையில் அவன் அதை கிரகித்துக் கொள்ள முடியவில்லை. அவர், ''மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள்?'' என்று கேட்டார். அவர்கள், ''சிலர் உம்மை தாவீதின் குமாரன் என்கிறார்கள்'', என்றனர். அவர், ''பின்னை ஏன் தாவீது, “உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும் வரைக்கும் நீர் என் வலது பாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொன்னான்?'' என்று கேட்டார். அவர் எப்படி தாவீதின் வேரும் சந்ததியுமாக இருக்க முடியும்? அவர் தாவீதுக்கு முன்பே இருந்தார். அவர் தாவீதாயிருந்தார், அவர் தாவீதுக்கு பின்பும் இருந்தார். பாருங்கள்? அவர் தாவீதின் வேரும் சந்ததியுமானவர்'' என்று வேதம் கூறுகின்றது. தாவீதின் வேரும் சந்ததியுமாகிய இரண்டும். அப்படியானால் அவர் எப்படி அவனுடைய குமாரனாக இருக்க முடியும்? அவன் எப்படி அவருடைய தகப்பனாக இருக்க முடியும்? ”அன்று முதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்வி கேட்கத் துணியவில்லை'' என்று வேதம் கூறுகின்றது. அது மிகவும் நல்லதும் கூட என்று நினைக்கிறேன். ஆம், ஐயா. சரி. 79பரத்திலிருந்து மறுபடியும் பிறத்தல். அப்படி பிறக்கும் போது நாம் பரலோக காரியங்களில் சுறுசுறுப்பாகிவிடுகிறோம். ஏனெனில் அவருடைய ஜீவன் நமக்குள் இருக்கிறது; அது வார்த்தையை உறுதிப்படுத்தும் வார்த்தையாக அமைந்துவிடுகிறது. உங்களுக்குள் இருக்கும் ஆவி, உங்களுக்குள் வார்த்தை மாமிசமாகுதல். ஆவி வார்த்தையை பாதுகாத்து, வார்த்தையை உறுதிபடுத்துவதில் சிரத்தை கொண்டுள்ளது. ஆவி எந்த ஸ்தாபனத்திலும் சுறுசுறுப்பாக இருப்பதில்லை. ஸ்தாபனம் ஏற்படுத்த அதற்கு அக்கறை இல்லை. ஏனெனில் ஆவி ஸ்தாபனத்திற்கு விரோதமாய் உள்ளது. ஸ்தாபனங்கள் உலகத்தின் சிந்தையைப் பெற்று, உலகப்பிரகாரமான காரியங்களை எதிர்நோக்குகின்றன. அவர்கள் பிரம்மாண்டமான ஆலயங்களைக் கட்டுகின்றனர், அவர்கள் மெருகேற்றின காரியங்களைப் பெற்றுள்ளனர், மெருகேற்றப்பட்ட ஸ்தாபனங்கள், மெருகேற்றப்பட்ட போதகர்கள் போன்றவைகளை பட்டினத்திலேயே தலைசிறந்த வகுப்பினர் அதில் உள்ளனர். ஆனால் ஆவியோ உத்தமமான இருதயங்களைக் கண்டுபிடிக்க முயன்று, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் உண்மையென வெளிப்படுத்தி நிரூபிக்க வேண்டுமென்று கவலையாயுள்ளது. ஸ்தாபனங்கள் தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக ஸ்தாபனப் பிரமாணங்களை ஏற்றுக் கொண்டிருக்கும் போது, பரிசுத்த ஆவி அவைகளில் எவ்வாறு கிரியை செய்யமுடியும்? முடியவே முடியாது. எனவே பாருங்கள், அது மரித்துவிட்டது. தேவன் அத்தகைய இடங்களுக்குச் சென்று, தமக்காகப் பணி செய்ய மனிதக் குழுவைக் கண்டு பிடிப்பதில்லை. ஏனெனில் அவர்கள் ஏற்கனவே மரித்துவிட்டனர். அவர்கள் வார்த்தையில் அவிசுவாசிகள். இல்லையென்றால் அவர்கள் அங்கு இருக்கவே மாட்டார்கள். பாருங்கள்? நாம் பரத்திலிருந்து வரும் காரியங்களில் சுறுசுறுப்பாக இருக்கிறோம். ஆவி வார்த்தையை கவனித்துக் கொள்கிறது. அது உண்மை. ஏனெனில் ஆவி வார்த்தைக்கு ஜீவனையளிக்கிறது. பாருங்கள்? “எழுத்து சொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது.'' 80இன்று நான் வந்து கொண்டிருக்கும் போது, காட்டிலுள்ள பெரிய அழகான மரங்களையும், பெரிய குன்றுகளையும், அவைகளில் பழுப்பு, மஞ்சள், எப்பொழுதும் பசுமை நிறம் கொண்ட பூக்கள் ஆங்காங்கே வளர்வதையும் கவனித்துக் கொண்டே வந்தேன். நான், ''அது என்ன தெரியுமா? நாம் மரித்துவிட்டோம். எனவே தேவன் தமது பூச்செண்டை குன்றுகளில் வைத்துவிட்டார். அவை சவ அடக்கத்திற்கான பூக்கள். ஜீவன் மண்ணுக்குத் திரும்பிவிட்டது. தேவன் தமது விதைகள் அனைத்தையும் அங்கு விதைத்து, இப்பொழுது தான் தமது பூச்செண்டு அங்கு வளரும்படி செய்துள்ளார். அசைவ அடக்கத்திற்கான பூக்களாதலால், அவர் பூமியை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் சூரியன் மறுபடியும் எழும் போது, ''வித்துக்கள் மறுபடியும் உயிர் பெறும்'' என்று நினைத்தேன். ஆமென். சரி. வார்த்தையை உறுதிப்படுத்துவதில் ஆவி அக்கறை கொண்டுள்ளது. நீங்கள் வார்த்தைக்குப் பதிலாக பாரம்பரியத்தை ஏற்றுக் கொள்வீர்களானால்... நீங்கள், “சகோ. பிரான்ஹாமே, இவையனைத்தையும் நாங்கள் விசுவாசிக்கிறோம், ஆனால் இதை மாத்திரம் நாங்கள் விசுவாசிப்பதில்லை'' என்று கூறலாம். அப்படியானால் அந்த இடத்திலேயே நீங்கள் நின்றுவிடுகின்றீர்கள். 81ஒரு இராணுவ குருவானவர் ஒரு சமயம் இதை என்னிடம் கூறினார். ஒரு இராணுவத் தலைவன், அவர் 'மேஜர்' என்று நினைக்கிறேன், அவரிடம், ''குருவானவரே, அங்கு செல்லுங்கள். ஒரு 'கேப்டன்' மரித்துக் கொண்டிருக்கிறார். அவரை மெஷின் துப்பாக்கியால் சுட்டுவிட்டார்கள்'' என்றார். அவர் அங்கு சென்றபோது, அந்த கேப்டன் உயிருடன் போராடிக் கொண்டிருந்தார். அவர்கள் அவரை செஞ்சிலுவை கூடாரத்துக்குள் இழுத்துப் போட்டிருந்தனர். அவர், 'கேப்டன்' என்றழைத்தார். அவர் உடம்பிலிருந்து இரத்தம் களகளவென்று கொப்பளித்து வந்து கொண்டிருந்தது. அவர் குருவானவரை நோக்கி, “என்ன, ஐயா? நீர் தான் குருவானவரா?'' என்று கேட்டார், குருவானவரும், ''ஆம் கேப்டன், நீர் மரித்துக் கொண்டிருக்கிறீர்'' என்றார். அவர், “எனக்குத் தெரியும்'' என்று பதிலளித்தார். குருவானவர், “நீர் கிறிஸ்தவரா?'' என்று கேட்க, அவர், ''நான் முன்பு கிறிஸ்தவனாக இருந்தேன்'' என்றார். குருவானவர் , “கேப்டன், அவரை எங்கு விட்டீர்கள்? அங்கேயே அவரைக் கண்டுபிடிப்பீர்கள்'' என்றார். கேப்டன், ''எனக்கு ஞாபகமில்லை'' என்றார். குருவானவர், ''நீர் உடனே ஞாபகப்படுத்திக் கொள்வது நல்லது. ஏனெனில் நீர் போராடிக் கொண்டிருப்பதைக் காணும் போது, இன்னும் சில நிமிடங்கள் கூட உயிர் வாழமாட்டீர்'' என்றார். அவருடைய வாய் திறந்து, வாயின் வழியாகவும், காதுகளின் வழியாகவும் இரத்தம் களகளவென்று வந்து கொண்டிருந்தது. மெஷீன் துப்பாக்கியின் தோட்டாக்கள் அவருக்குள் பாய்ந்திருந்தன. அவர், ''நீர் துரிதமாக ஞாபகப்படுத்திக் கொள்ளும். ஏனெனில் உம் சுவாசக் குழாய்கள் நிறைந்து வருகின்றன'' என்றார். கேப்டனும் தன் எண்ணங்களை அலைபாயவிட்டு, உயிருடன் போராடுபவராய் அங்கு கிடந்தார். அவருடைய முகத்தில் புன்முறுவல் தோன்றினது. அவர், ''எனக்கு ஞாபகம் வந்துவிட்டது'' என்றார், குருவானவர், “அவரை எங்கு விட்டீர்கள்? அங்கிருந்து தொடங்குங்கள்'' என்றார். அவர், “நான் படுத்துக் கொண்டு நித்திரை செய்வேன்'' என்றார். அங்கு தான் அவர் அவரை விட்டார். அங்கு தான் அவர் அவரைக் கண்டுபிடித்தார். உங்கள் ஸ்தாபனம் தேவனுடைய வார்த்தைக்கு விரோதமான ஒன்றை போதிக்கும் போது, அங்கேயே அவரை நீங்கள் விட்டுவிடுகின்றீர்கள். மீண்டும் அந்த இடத்திற்கு வாருங்கள். ஏனெனில் அவர், சுறுசுறுப்பாக அவருடைய வார்த்தையை உறுதிப்படுத்தி, அதை உண்மையுள்ளதாகச் செய்து கொண்டிருக்கிறார். இயேசு அப்படித்தான் இருந்தார். அவர் எப்பொழுதும் பிதாவின் சித்தத்தை செய்கிறவராக இருந்தார். பாருங்கள்? சரி. 82எனவே பாருங்கள், நிக்கொதேமு சார்ந்திருந்த ஸ்தாபனத்தின் கருத்துக்கள் தேவனுடைய பார்வையில் ஒன்றுமற்றதாக இருந்தன. அவன் ஸ்தாபனத்தில் எவ்வளவு பெரியவனாக இருந்த போதிலும், அவன் இஸ்ரவேலில் போதகனாக இருந்த போதிலும், அவனுடைய அறிவும் புரிந்து கொள்ளுதலும் தேவனுக்கு ஒன்றுமற்றதாய் இருந்தது. (சகோ. பிரான்ஹாம் விரல்களைச் சொடுக்குகிறார் - ஆசி). அவன் கிறிஸ்துவின் முன்னால் நின்றபோது, அவனுக்குக் கடிந்து கொள்ளுதல் மாத்திரமே கிடைத்தது. ஜனங்கள் அனைவரும், “நிக்கொதேமுவாகிய பரிசுத்த பிதாவே, பரிசுத்த பிதாவாகிய நிக்கொதேமுவே, உம்மைப் பணிகிறோம், ஐயா,'' என்று கூறுவதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. ஆனால் அவன் தேவனுக்கு முன்னால், இயேசுவுக்கு முன்னால், நின்றபோதோ, அவனுடைய அறியாமையின் நிமித்தம் அவர் அவனைக் கடிந்து கொண்டார். அது எதைக் காட்டுகிறது என்று பார்த்தீர்களா? அதையெல்லாம் மறந்துவிடுங்கள். வாருங்கள், நாம் தேவனிடத்தில் செல்வோம். அது உண்மை. சரி. கோராவின் மகத்தான கருத்துக்கள், அல்லது ஆதாமின் கருத்துக்கள் ஒன்றுமற்றதாயிருந்தன. அவர்கள் ஒவ்வொருவரும் தேவனால் உறுதிப்படுத்தப்பட்ட செய்தியை மறுதலித்தனர். இப்பொழுது கூர்ந்து கவனிப்போம். இன்னும் சில நிமிடங்களில், தொல்லைகளுக்கு ஆளான சிலரை நாம் காணப் போகிறோம். நிக்கொதேமு, கோரா, நிம்ரோத் இன்னும் மற்றவர் தொல்லைகளுக்கு ஆளான காரணம் என்னவெனில், அவரவர் காலங்களில் உறுதிபடுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையுடன் தோன்றிய தேவனுடைய செய்தியாளனை அவர்கள் அடையாளம் கண்டு கொள்ளாததே. அது எல்லோருக்கும் தெரியும். அதைக் குறித்து நாம் அதிக நேரம் பேசலாம். ஒரு காரியம் நிகழும் என்று தேவன் முன்னுரைத்திருக்கும் போது, மனிதன் ஸ்தாபனங்களை ஏற்படுத்தி அதில் மனிதரை நுழைத்துவிடுகிறான். அந்த யூதர்கள் மேசியா ஒருவர் வர வேண்டுமென்று விசுவாசித்திருந்தனர். ஓ, என்னே, நிச்சயமாக! ஆனால் இயேசு, அவர் வந்த விதமாக வந்த போது, அவர்கள், “அது அவராயிருக்க முடியாது'' என்றனர். அவர்கள் வார்த்தையைப் புரிந்து கொள்ளத் தவறினர். இயேசு வார்த்தைக்கு முரணான விதத்தில் வரவில்லை. (அப்படியா அவர் வந்தார்?) ஆனால் ஸ்தாபனம் வார்த்தைக்கு அளித்த வியாக்கியானத்திற்கு முரணாக அவர் தோன்றினார். மோசேயும் வார்த்தைக்கு முரணான விதத்தில் வரவில்லை வார்த்தை கூறியிருந்த அதே விதத்தில் அவன் தோன்றினான். ஆனால் கோராவோ அதைக் காணத் தவறினான். ஒவ்வொரு காலத்திலும் அவ்வாறே நிகழ்ந்து வந்துள்ளது. 83இப்பொழுது கவனியுங்கள். இந்நாளுக்குரிய இந்த செய்தியும், “எங்களிடம் சத்தியம் உள்ளது, எங்களுக்கு இது உள்ளது. அது உள்ளது'' என்று கூறும் ஒன்றல்ல; அது அவருடைய வார்த்தையில் முன்னுரைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த வார்த்தை கொண்டு வரப்பட்ட பின்பு, அது வார்த்தையால் சரிவர உறுதிப்படுத்தப்பட வேண்டும். இயேசு தேவனால் வார்த்தையின் மூலம் சரிவர உறுதிபடுத்தப்பட்டார். அவர், “நீங்கள் மோசேயை அறிந்தீர்களானால், என் நாளையும் அறிந்திருப்பீர்கள்'' என்றார். தீர்க்கதரிசிகள் அவரைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்திருந்தனர். அவர் யாரென்று தீர்க்கதரிசிகள் அனைவரும் முன்னுரைத்திருந்தனர். இருப்பினும், அது அவர்களைக் குருடாக்கிற்று. அவர்களால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. பாருங்கள்? ஆனால் இயேசுவோ... இதை ஒலிநாடாவுக்காக கூற விரும்புகிறேன், உங்களுக்காகவும் கூட. பாருங்கள், இந்நாளுக்குரிய செய்தியுடன் தோன்றும் செய்தியாளன். 84நீங்கள் ஏழாம் நாள் ஆசரிப்போரிடம் செல்வீர்களானால், “நாங்கள் செய்தியைப் பெற்றுள்ளோம். ஓய்வு நாளை ஆசரியுங்கள்'' என்பார்கள். அதை வேதத்திலிருந்து எனக்குக் காண்பியுங்கள் பார்க்கலாம். குமாரி எட்டி பேக்கர் (Miss. Eddie Baker) அதை பெற்றுள்ளதாகக் கூறினார்கள். அதை எனக்குக் காண்பியுங்கள். பாருங்கள்? மெதோடிஸ்டுகள் அதைப் பெற்றுள்ளதாகக் கூறுகின்றனர். அதை எனக்குக் காண்பியுங்கள். பாப்டிஸ்டுகள் அதைப் பெற்றுள்ளதாகக் கூறுகின்றனர். அதை எனக்குக் காண்பியுங்கள். அதை பெற்றுள்ள எந்த ஸ்தாபனத்தையாவது எனக்குக் காண்பியுங்கள் பார்க்கலாம். ஸ்தாபனங்கள் ஒவ்வொன்றும் தேவனுடைய சித்தத்துக்கு அப்பாற்பட்டது என்பதை உங்களுக்கு நான் நிரூபிக்க முற்படுகிறேன். அவை ஒவ்வொன்றும் முரணாக அமைந்திருந்து, தேவனுடைய வார்த்தைக்குப் பதிவாக மனிதருடைய பாரம்பரியங்களைப் போதிக்கின்றன. வேதத்தில் எழுதப்பட்ட விதமாகவே காரியங்களை ஏற்றுக் கொள்ளும் ஸ்தாபனம் ஒன்றையும் கூட நான் அறியமாட்டேன். அது உண்மை. யாராகிலும் ஒருவர், ”இந்நாளுக்குரிய செய்தியை நான் பெற்றுள்ளேன்'' என்று கூறுவாரானால், முதலாவதாக அவர் சரியான விதத்தில் காணப்பட்டு, அவர் வருவார் என்று முன்னுரைக்கப்பட்டிருத்தல் அவசியம். யோவான்ஸ்நானன் அங்கு தோன்றின போது அவர்கள், “நீ கிறிஸ்துவா?'' என்று வினவினர். அவன், “இல்லை'' என்றான். அவர்கள், “நீ எலியாவா'' என்று கேட்டனர். அவன், “இல்லை'' என்று விடையளித்தான். அவர்கள், ''அப்படியானால் நீ யார்?'' என்றனர். அவனால் தன்னை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. அவனிடம் அந்த மணி நேரத்துக்குரிய செய்தி இருந்தது. அவன்,“ஏசாயா தீர்க்கதரிசி உரைத்தது போன்று, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன். என் பிறப்பும் வாழ்க்கையும் அதனுடன் இணையாவிட்டால் என்னை ஏற்றுக் கொள்ள வேண்டாம்'' என்றான். 85இயேசு தோன்றின போதும் அதுபோன்றே இருந்தது. செய்தியைக் கொண்டு வரும் செய்தியாளன் ஏற்கனவே தேவனால் முன்னுரைக்கப்பட்ட செய்தியாக இருக்க வேண்டும். தேவன் இச்செய்தியாளனின் மூலம் பேசி, அது உண்மையென்று உறுதிப்படுத்துகின்றார். நீங்கள் கேட்கின்றீர்களா? உங்களுக்கு இது புரிகிறதா? புரிந்து கொள்ளுங்கள்! முதலாவதாக, அது “கர்த்தர் உரைக்கிறதாவது'' என்பதாக முன்னுரைக்கப்பட்டிருக்க வேண்டும். பின்பு, செய்தியாளனும், அவன் கொண்டு வரும் செய்தியும், அக்காலத்தில் என்ன நிகழுமென்று தேவன் முன்னுரைத்த வண்ணமாகவே அமைந்திருக்க வேண்டும். மோசேயும் அதே விதமாக தோன்றினான். அதனால் தான் அவன் தேவனுடைய சமுகத்தில் முகங்குப்புற விழுந்து, “தேவனே, நீரல்லவா என்னை அனுப்பினீர்'' என்றான். அவர், “அந்த கூட்டத்திலிருந்து பிரிந்து போ'' என்றார். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? அது எப்பொழுதுமே மனிதருடைய சிந்தையை மாற்றி, அவர்களை தேவனுடைய சித்தத்துக்கு அப்பால் கொண்டு சென்றுள்ளது. இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், அவருடைய வார்த்தையினால் முன்னுரைக்கப்பட்டு, அவருடைய வார்த்தையினால் சரியாக உறுதிப்படுத்தப்பட வேண்டும். இயேசு, ''நான் தேவனுடைய கிரியைகளை செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. பாருங்கள், நான் செய்யத் தவறினால்... என்னில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்? நான் அவிசுவாசி என்று உங்களில் யார் காண்பிக்கக் கூடும்?'' என்றார். 86நிக்கொதேமு, ''ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்தவர் என்று அறிந்திருக்கிறோம். ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால், இப்படிப்பட்ட காரியங்களைச் செய்யமாட்டான்'' என்றான். பாருங்கள்? அவன் விசுவாசி என்பதை அது காண்பித்தது. நம்மிடையே சபை சரித்திரம் அறிந்துள்ளவர்களே, உங்கள் சிந்தனை தொப்பியை அணிந்து கொள்ளுங்கள். நேரம் தாமதமாகிவிடவில்லை. எனவே கூர்ந்து கவனியுங்கள். நான் கூடுமானவரை வேகமாக முடிக்க முனைகிறேன். நான் விரும்புகிறேன்... ஒலி நாடாவை கூர்ந்து கேளுங்கள். சபையின் சரித்திரம் அறிந்துள்ள எவரும், கிறிஸ்தவ மார்க்கம் முதன்முறையாக ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டது ரோமன் கத்தோலிக்க சபையே என்பதை அறிவர். அதற்கு முன்பு ஸ்தாபனம் ஏதாகிலும் இருந்திருந்தால், யாராகிலும் என்னிடம் சரித்திரத்தைக் கொண்டு வந்து காண்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நான் பால் பாய்டுக்கு (Paul Boyd) ஆப்த நண்பன், இன்னும் அநேக சிறந்த சரித்திரக்காரருக்கும். என் படிக்கும் அறையில், “நிசாயா ஆலோசனை சங்கத்திற்கு பின்பிருந்த காலம்'' (Post Nicene Council), ”நிசாயா ஆலோசனை சங்கம்'', “நிசாயா பிதாக்கள்'', மற்றும் சபையைக் குறித்து எழுதப்பட்டுள்ள நான் அறிந்துள்ள எல்லா புனித நூல்களும் உள்ளன. முப்பத்து மூன்று ஆண்டு காலமாக அவைகளை நான் படித்து வருகிறேன். அதற்கு முன்பு ஸ்தாபனம் இருந்ததே கிடையாது. கத்தோலிக்க சபைதான் ஸ்தாபனங்களுக்குத் தாய். அது உண்மையென்று நமக்குத் தெரியும். கத்தோலிக்க சபை தோன்றும் வரை ஸ்தாபனம் இருந்ததேயில்லை. 'கத்தோலிக்கம்' என்னும் சொல் 'உலகம் முழுவதும்' (Universal) என்று பொருள்படும். அவர்கள் நாடு, சபை மார்க்கம் ஒன்றை ஏற்படுத்தி, ரோம சாம்ராஜ்யம் முழுவதிலும் அதை பரப்பினர். அக்காலத்தில் ரோம சாம்ராஜ்யம், உலகின் பெரும்பாலான பாகத்தின் மேல் வெற்றி கொண்டு, தன் ஆதிக்கத்தில் கொண்டிருந்தது. அது தேசத்தின் சபையாக இருந்தது. அதற்கு கீழ்ப்படியாதவர்கள் கொல்லப்பட்டனர். நிசாயா ஆலோசனை சங்கத்தின் போது பதினைந்து நாட்கள் இரத்தம் சிந்தப்பட்ட யுத்தம், அப்பொழுது தேவனுடைய உண்மையான தீர்க்கதரிசிகள் அங்கு நின்று... 87கத்தோலிக்க சபை முதலில் ஏன் தொடங்கினது என்று நம்மெல்லாருக்கும் தெரியும். அதை நான் இங்கு கற்பித்திருக்கிறேன். உண்மையாக ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் போதகர், ஆக்கில்லா ரோமாபுரியிலிருந்த சபைக்கு மேய்ப்பனாயிருந்தான். பெந்தெகொஸ்தே நாளன்று பரிசுத்த ஆவி விழுந்த போது, வானத்தின் கீழிருந்த ஒவ்வொரு தேசத்திலுள்ள யூதர்களின் மேலும் அது விழுந்தது. சில நாட்கள் கழித்து, பேதுருவுக்கு மேல் வீட்டில் தரிசனம் தோன்றி, கொர்நேலியு என்னும் ரோமனிடம், நீதிமானிடம், அவன் போக வேண்டுமென்று கட்டளை கொடுக்கப்பட்டது. பேதுரு ஜெபம் செய்தபோது, பரிசுத்த ஆவி கொர்நேலியுவின் மேல் விழுந்தது. சிறிது காலம் கழித்து, கௌரவம் வாய்ந்தவர்களும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளத் தொடங்கினர். ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் ரோமாபுரிக்குச் சென்று சபையை ஸ்தாபித்தனர், அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கவில்லை, முதலாம் ரோமன் சபையை ஒழுங்குக்குள் கொண்டு வந்தனர். அவர்கள் அப்படி செய்த போது, சபையில் அவர்களுக்கு சகோதரரும் சகோதரிகளும் இருந்தனர். 88கிளாடியஸ் (Claudius) அரசாண்டபோது, ரோமாபுரியிலிருந்த எல்லா யூதர்களையும் வெளியே துரத்தினான். அச்சமயத்தில் தான் பேதுரு ரோமாபுரியில் இருந்ததாக ரோமன் கத்தோலிக்க சபை கூறுகிறது. பேதுரு ரோமாபுரியில் இருந்ததாக ஒரு வேத வசனத்தையாவது அல்லது சரித்திரத்தையாவது எனக்குக் காண்பியுங்கள். தேவனுடைய வார்த்தையின்படி அவன் அங்கு இல்லவே இல்லை. அதைத்தான் நான் நம்புவேன். யூதனாகிய பேதுரு அவர்களிடையே இருந்த விக்கிரகாராதனை போன்றவைகளை எவ்வாறு பொறுத்திருப்பான்? எங்கு... பாருங்கள்?அவன் எவ்வாறு தன் போதகத்துக்கு விரோதமாக அங்கு செயல்பட்டிருக்க முடியும்?அர்த்தமற்றது. பிராடெஸ்டெண்டுகளும் எந்தவிதத்திலும் மேலானவர்கள் அல்ல. சற்று பொறுங்கள், கர்த்தருக்கு சித்தமானால், சற்று கழித்து சிறிது சிறிதாக அதற்கு வருவோம். கவனியுங்கள், இப்பொழுது கவனியுங்கள், பேதுரு ரோமாபுரியில் இருந்ததாக ரோமன் கத்தோலிக்க சபை உரிமை பாராட்டும் அதே நேரத்தில், கிளாடியஸ் எல்லா யூதர்களையும் வெளியே போகும்படி கட்டளை பிறப்பிப்பித்ததாக சரித்திரம் கூறுகின்றது. (வேதாகமும் அவ்வாறே கூறுகின்றது). 89பவுல் மேடான தேசங்களின் வழியாக எபேசுவுக்கு வந்தபோது இந்த சீஷர்களை காண்கிறான், அங்கு அவன் ஆக்கில்லா பிரிஸ்கில்லாளை அடிக்கடி சந்திக்கிறான். இவர்கள் சென்ற பின்பு அந்த சபையிலுள்ள ரோம சகோதரர் தங்கள் சொந்த கருத்துக்களை உண்டாக்கிக் கொண்டு, விக்கிரகாராதனையை நுழைத்தனர். பின்பு கான்ஸ்டன்டைன் அரசனின் காலத்தில் அவன் தாய் உண்மையான கிறிஸ்தவள். மகனும் அவ்வாறே இருப்பான் என்று அவள் நம்பினாள். ஆனால் அவனோ அரசியல்வாதியாக மாறினான். ரோமாபுரியின் பெரும்பாலான பகுதியிலிருந்தவர்கள் எளிய வர்க்கத்தார், கிறிஸ்துவின் மூலம் இரட்சிப்பை அடைந்திருந்தனர் என்பதை அவன் கண்டான். அவர்கள் பிரபலமாகத் தொடங்கினர். ஏனெனில் அவர்கள் வீனஸ் தேவதையை இறக்கிவிட்டு, அதற்கு பதிலாக மரியாளை ஏற்றினர். அவர்கள் ஜுபிடரை இறக்கிவிட்டு, அதன் ஸ்தானத்தில் பேதுருவை ஏற்றினர். இப்படியாக அந்த சீஷர்கள், அது பிரபலமான மார்க்கமாக ஆனது. அவர்கள் தீரமுள்ளவர்களாய் இருந்தனர். அந்த கிறிஸ்தவர்கள் மரிக்கவும் ஆயத்தமாயிருந்தனர். 90கத்தோலிக்க சபை, ''நாங்கள் தான் தொடக்கம்'' என்றனர். அது மிகவும் உண்மை. ஏனெனில் கத்தோலிக்க சபை பெந்தெகொஸ்தே நாளன்று தொடங்கினது. ஆனால் இதுதான் அதை புறம்பாக்கினது, அது ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு, வார்த்தையை விட்டகன்று, கோட்பாடுகளைப் புகுத்தினது. கடைசியாக தோன்றியுள்ள கோட்பாடு என்னவென்று பத்து ஆண்டு காலமாக உள்ளவர் அறிவர். அதாவது மரியாள் பரமேறினாள் என்று, பத்து ஆண்டுகளுக்கு முன்பு புகுத்தப்பட்ட கோட்பாடு. சபையில் மற்றொரு கோட்பாடு சேர்க்கப்பட்டுவிட்டது. தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக அது கோட்பாடாகிவிட்டது. இப்பொழுது அவர்கள், ''வேதம் என்ன கூறினாலும் கவலையில்லை, சபை என்ன கூறுகிறதோ அதுதான் முக்கியம்'' என்று உங்களிடம் கூற முற்படுகின்றனர். அந்த சபையின் குருவானவர், ''தேவன் தமது சபையிலிருக்கிறார்'' என்றார். நான், ''தேவன் தமது வார்த்தையில் இருக்கிறார்'' என்றேன். அவர், ''வேதாகமம் ஆதி கத்தோலிக்க சபையின் சரித்திரமே'' என்றார். ''அப்படியானால் நான் ஆதி கத்தோலிக்கன். குருவானவராகிய உங்களை விட அது என்னை அதிகமாக கத்தோலிக்கனாக்கிவிடுகிறது'' என்றேன். பாருங்கள்? “அது அதுவானால், அதுதான் நான், பாருங்கள், அப்போஸ்தலர்கள் கற்பித்ததை நான் அப்படியே விசுவாசிக்கிறேன். நீங்களோ மனிதர் அதில் நுழைத்ததை விசுவாசிக்கிறீர்கள்'' என்றேன். அது அப்படித்தான் நடந்தது. நிச்சயமாக, அப்படித்தான். அதே விதமாகத்தான் அது நடந்தது. 91இப்பொழுது சரித்திரத்தைக் கவனியுங்கள். அவர்கள் கோட்பாடுகளை ஒன்றன்பின் ஒன்றாக கூட்டினார்கள். பவுல் வந்த போது, சரித்திரத்தின்படி, அவன் முதலாம் சபையை சந்திக்கவேயில்லை என்று நாமறிவோம். ஏனெனில் விக்கிரகாராதனையை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் நிர்மாணித்த ரோமாபுரியின் இரண்டாம் சபைக்கு அவன் விஜயம் செய்தான். நிசாயா ஆலோசனை சங்கத்தின் போது, கான்ஸ்டன்டைன் தன் ராஜ்யத்தை ஒன்றாக இணைக்கும் கருத்தைக் கொண்டு வந்தான். ஆகாப் யேசபேலை விவாகம் செய்ததே இங்கும் நடந்தது. பாருங்கள்? தன் ஜனங்களை ஒன்றுபடுத்தி, பலமுள்ள தேசம் ஒன்றை அமைக்க வாய்ப்புண்டு என்பதை அவன் கண்டபோது, அவர்கள் அவர்களுடைய மார்க்கத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்று அவன் கருதி, சபை - தேசம் மார்க்கத்தை ஏற்படுத்தினான். நிசாயா ஆலோசனை சங்கம் நடந்தபோது, தேவன் ஒருவரா அல்லது மூன்று ஆட்களா; இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டுமா, அல்லது பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலா போன்ற கேள்விகள் எழுந்து அங்கு பலப் பரீட்சை உண்டானது. அப்பொழுது ஆட்டுத்தோலை மாத்திரம் போர்த்தி, காய்கறி புசித்த வயோதிப தீர்க்கதரிசிகள் அந்த ஆலோசனை சங்கத்துக்கு வந்திருந்தனர். உண்மை! அதே சமயத்தில் ஏற்கனவே சபையில் நுழைந்திருந்த பிரபலமான மனிதர்கள் அங்கு வந்து, உலக ஞானத்தினால் இந்த தீர்க்கதரிசிகளின் வாயை அடைத்தனர். ஆனால் இந்த தீர்க்கதரிசிகளிடம் “கர்த்தர் உரைக்கிறதாவது'' என்பது இருந்தது. சபையோ ஏறக்குறைய ஆயிரம் ஆண்டு காலம் அஞ்ஞான இருளுக்குள் பிரவேசித்தது. ஆனால் அது மறுபடியும் மலரத் தொடங்கினது. அது உண்மை. அதை உங்களால் கொல்ல முடியாது. இவைகள் பட்சித்த வருஷங்களை நான் திரும்பவும் அளிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.'' 92இந்த ஸ்தாபனங்கள் கோட்பாடுகளை சேர்த்துக் கொண்டன. எந்த ஸ்தாபனமும் தேவனுடைய வார்த்தையிலிருந்து அகன்று போகக் கூடிய ஒரே வழி, பரிசுத்த தேவனுடைய வசனங்களுக்குப் பதிலாக கோட்பாடுகளைச் சேர்த்துக் கொண்டு, உங்கள் பாரம்பரியங்கள் தேவனுடைய வார்த்தைக்கு முரணாயிருந்த போதிலும், அவைகளை உங்கள் சபையின் போதகமாக செய்ய முயல்வதேயாம். அப்படியிருக்க, நீங்கள் எப்படி கத்தோலிக்க சபையைக் குற்றப்படுத்தலாம்? அவர்கள் செய்த அதையே நீங்களும் செய்கிறீர்களே! உங்களுக்குப் புரிகிறதா? சரி, சற்று யோசித்துப் பாருங்கள். வேதவாக்கியங்கள் ஒருபோதும் தவறாகாது முதலாவதாக, கோட்பாடுகள் பொய். நீங்கள் ஒரு ஸ்தாபனத்தை ஏற்றுக் கொள்ளும் போது, ஏற்கனவே ஒரு கோட்பாட்டைப் பெற்றுக் கொண்டுவிட்டீர்கள். ஏனெனில் அது சேர்க்கப்பட்ட ஒன்று. அது வேதாகமத்தில் இல்லாதது, அது வேதாகமத்தில் இல்லாத ஒன்று. 93ஸ்தாபனம் என்று ஒன்று கிடையாது. நீங்கள் உலகமெங்கும் போய் ஸ்தாபனங்களை ஏற்படுத்தும்படி உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்'' என்று இயேசு ஒருபோதும் கூறவில்லை. “இல்லை, ஐயா. அப்படி ஒன்று கிடையவே கிடையாது! அவ்வாறு செய்வது பரிசுத்த வேதாகமத்தைப் புறக்கணிப்பதாகும். அப்படி செய்யப்பட்டபோது, பிறப்பின் மூலம் உண்டான சபை என்பதிலிருந்து கோட்பாடுகள், சபை பிரமாணங்கள் போன்றவைகளின் மூலம் உண்டான சபை'' என்பதாக அது மாறினது. சபை அல்ல, நான் மன்னிப்பு கோருகிறேன்; விடுதி (lodge)! நீங்கள் சபைக்குள் பிறக்கின்றீர்கள். ஆனால் ஒரு விடுதியை சேர்ந்து கொள்கிறீர்கள். அது பாப்டிஸ்டு சபை, மெதோடிஸ்டு சபை, பெந்தெகொஸ்தே சபை என்றல்ல. அது பாப்டிஸ்டு விடுதி, பெந்தெகொஸ்தே விடுதி, மெதோடிஸ்டு விடுதி. அவைகளை நீங்கள் சேர்ந்து கொள்கிறீர்கள். நீங்கள் சபையை சேர முடியாது. அப்படி ஒன்று கிடையாது. நீங்கள் அதற்குள் பிறக்கின்றீர்கள். நிக்கொதேமுவிடம் அவ்வாறு கூறப்பட்டது. நாம் எங்கிருக்கிறோம் என்று பார்த்தீர்களா? ஓ, என்னே! ஆகையால் தான் நான் அதற்கு விரோதமாயுள்ளேன், அதிலுள்ள மக்களுக்கு விரோதமாயல்ல. அந்த முறைமைகளுக்கு தான் நான் விரோதமானவன். ஏனெனில் அவர்களால்... அந்த ஸ்தாபனங்களிலுள்ள ஒரு மூப்பரோ அல்லது வேறு யாரோ வேதாகமத்திலுள்ள ஒன்றைப் பிரசங்கித்தால், அது அவர்களுடைய போதகத்திற்கும் பிரகடனத்துக்கும் (charter) முரணாயுள்ளதால், அவர் உடனே சபை நீக்கம் செய்யப்படுகின்றார். ஆம், ஐயா. அவர்களில் சிலர் மிகவும் கீழ்த்தரமாய் இருந்து, அவர்களுடைய மனிதர் மூலமேயன்றி, வேறெந்த சபையிலும் எழுப்புதல் உண்டாக அனுமதிக்கமாட்டனர். அவர்கள் அவ்வளவு... 94ஒரு சமயம் ஒருவர் ஒரு பிரசங்கியிடம் கொடுக்கப் போனார்... இந்த நாட்டிலேயே நடந்த சம்பவம். வயோதிப பிரசங்கியார் ஒருவர் தெருவில் நின்று கொண்டு அழுது ஜனங்கள் மனந்திரும்பும்படி கெஞ்சி, ''வாருங்கள், கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளுங்கள், பரிசுத்த ஆவியினால் நிறையுங்கள்'' என்று கூறினாராம். அப்பொழுது பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தைச் சேர்ந்த ஒருவர், அந்த மனிதனுக்கு ஒரு டாலர் கொடுத்தாராம். அதன் விளைவாக, அவருடைய சபைக்கு விரோதமாக அவர் ஆவிக்குரிய விபச்சாரம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு, அவர் மனந்திரும்ப வேண்டுமென்று கட்டளை கொடுக்கப்பட்டதாம். நீங்கள் கத்தோலிக்கரைக் குறித்து பேசுகிறீர்களே! நான் கூறினது உண்மை. நான் என்ன கூறுகிறேன், அல்லது இந்த சபை என்ன கூறுகிறதென்று உங்களுக்குத் தெரியும், சரி. 95நீங்கள் கோட்பாடுகளை சேர்த்துக் கொள்ளும்போது, வேதத்தைப் புறக்கணிக்கிறீர்கள். அப்படி நீங்கள் சேர்த்துக் கொண்டு, ஸ்தாபனத்தை சேர்ந்து கொள்ளும் போது, நீங்கள் உங்கள் முதல் கோட்பாட்டை ஏற்றுக் கொள்கிறீர்கள். ஏனெனில் அது வேத பூர்வமானதல்ல. சேர்க்கப்பட்ட ஒரு கோட்பாடு பிறப்பின் ஸ்தானத்தை எடுத்துக் கொள்கிறது. நீங்கள் ஒரு ஸ்தாபனத்தை ஏற்றுக் கொள்ளும் போது, ஒரு கோட்பாட்டை சேர்த்துக் கொள்கிறீர்கள். சரி, அப்படி செய்யும் போது. அது ''பிறப்பின் மூலம் சபை என்பதிலிருந்து கோட்பாடு அல்லது ஸ்தாபன பிரமாணத்தின் மூலம் விடுதி'' என்பதாக மாறிவிடுகிறது. ஏனெனில், பாருங்கள், கோட்பாடு என்பது தன்னில் தானே வேதப்பூர்வமற்றதாய் உள்ளது. “நீங்கள் உலகமெங்கும் போய், ஸ்தாபனங்களை ஏற்படுத்தி, ஜனங்களை ஸ்தாபனங்களில் ஒன்று சேருங்கள்'' என்று இயேசு ஒருக்காலும் கூறவில்லை. அவர் ”போய் சீஷர்களாக்குங்கள்'' என்று தான் கூறினார். நீங்கள் அதை நம்புகிறீர்களா? (சபையோர் 'ஆமென்' என்கின்றனர் - ஆசி). ஆமென். எனவே நீங்கள் முற்றிலும் புறம்பாகிவிடுகின்றீர்கள். 96கேளுங்கள், இங்கு கவனியுங்கள். வேறொன்றை ஆணித்தரமாக பதிய வைத்து முடிக்க விரும்புகிறேன். எத்தனை பேரிடம் 'எம்பாடிக் டயலாட்' (கிரேக்க மொழியிலிருந்து சரியாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த புதிய ஏற்பாடு - தமிழாக்கியோன்) உள்ளது? சரி, அதை படித்துப் பாருங்கள். எந்த கிரேக்க பண்டிதனுடைய உதவியையும் வேண்டுமானால் பெற்றுக் கொள்ளுங்கள். நூலகத்திற்கு சென்று கிரேக்க அகராதியை எடுத்து வெளிப்படுத்தல் 17ம் அதிகாரத்தைப் படியுங்கள். ஜேம்ஸ் அரசனின் ஆங்கில வேதாகமம், “ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குள் கொண்டு போனான். அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, தூஷணம் என்னும் அநேக நாமங்களால் நிறைந்தவளாயிருந்தாள்'' என்று எழுதப்பட்டுள்ளது. அப்படித்தான் ஜேம்ஸ் அரசனின் வேதம் உரைக்கிறது. ஆனால் மூல மொழிபெயர்ப்பு, ”ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குள் கொண்டு போனான்... தூஷணமாண நாமங்களால் நிறைந்த ஸ்திரீயைக் கண்டேன்'' என்று கூறுகின்றது. (தமிழ் மொழி பெயர்ப்பு சரியாயுள்ளது - தமிழாக்கியோன்). 97''தூஷணம் என்னும் நாமங்கள்'' (Names of blasphemy) என்பதற்கும், “தூஷணமான நாமங்கள்'' (Blasphemous names) என்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. இப்பொழுது கவனியுங்கள். அது ரோமன் கத்தோலிக்க சபையைக் குறிக்கின்றது என்று நம்மெல்லாருக்கும் தெரியும் அது ஏழு மலைகளின் மேல் உட்கார்ந்து கொண்டு, உலக சாம்ராஜ்யங்கள் அனைத்தையும், தன் ஆதிக்கத்தில் கொண்டுள்ளது. அது 'வேசி' என்றும் 'வேசிகளுக்குத் தாய்' என்றும் அழைக்கப்படுகின்றது. கவனியுங்கள்! 'வேசி' என்பது யார்? அது ஒரு ஆணாக இருக்க முடியுமா? அது ஒரு ஸ்திரீயாகத்தான் இருக்க முடியும். எனவே அது ஒரு ஸ்திரீ. அது ஒரு சபையாக இருக்க வேண்டும். அவள் வேசிகளுக்கெல்லாம் தாய், அவளைப் போன்றே அவர்களும் வேசிகள். பாருங்கள், கவனியுங்கள், ”அவளுக்குள்'' அது ''உங்கள் இருதயங்களில் பதியட்டும்.'' ''அவளுக்குள் தூஷணமான நாமங்கள் இருந்தன''. அது என்ன? இங்குள்ள ஊழியக்காரர்களும், இதை ஒலிநாடாவில் கேட்பவர்களும்; நாம் அமைதியாக இருப்போமாக. அந்த துஷணமான நாமங்கள் என்ன? மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், லூத்தரன், பெந்தெகொஸ்தே ஸ்தாபனம் போன்றவை. தூஷணமான நாமங்கள். ஏனெனில் அவை ஸ்தாபனங்கள். தேவனுடைய பார்வையில் அது வேசித்தனம் - அவள் வேசியாயுள்ளது போன்றே. 98அந்த ஸ்தாபனங்களிலுள்ளவர்கள், “அவர் மெதோடிஸ்டு, அவர் இதை செய்கிறார். அவர் பெந்தெகொஸ்தேயினர், அவர் இதை செய்கிறார். அவர் பிரஸ்பிடேரியன், அவர் இதை செய்கிறார்'' என்கின்றனர். அவர்கள் நாள் காட்டியின்படி (Calendar), எல்லாவற்றையும் கிரமமாக செய்கின்றனர், அது உங்களுக்குத் தெரியும். அது என்ன? கிறிஸ்துவைப் போல் இருக்க வேண்டிய நாமங்களைக் கொண்டு கிறிஸ்தவர்கள் என்றும் நாமத்தினால் அழைக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் அவை தூஷணமான நாமங்கள். அவை சபைகளல்ல. அவை 'சபை'யென்று தவறாக அழைக்கப்படுகின்றன. அவை விடுதிகள்! நான் ஏன் ஸ்தாபனங்களுக்கு விரோதமாயுள்ளேன், ஆனால் அதிலுள்ள மக்களுக்கு விரோதமாயில்லை என்னும் காரணத்தை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? ஸ்தாபன முறைமைகள். பாருங்கள், கவனியுங்கள், விடுதிகளின் தூஷணமான நாமங்கள், அவை சபைகள் என்று தவறாக அழைக்கப்படுகின்றன, மெதோடிஸ்டு சபை, பாப்டிஸ்டு சபை, பிரஸ்பிடேரியன் சபை, பெந்தெகொஸ்தே சபை. லூத்தரன் சபை, ஐக்கிய சகோதர சபை, என்று அப்படி ஒன்று கிடையாது. அது வேதத்துக்கு மாறானது. ஒரே ஒரு சபை மாத்திரமேயுள்ளது. அதில் நீங்கள் சேர முடியாது. அதற்குள் நீங்கள் பிறக்கின்றீர்கள். அதற்காக நீங்கள் முன்குறிக்கப்பட்டிருக்கிறீர்கள். இயேசு கிறிஸ்துவின் புராண (mythical) சரீரம்... அல்ல, இவ்வுலகில் இயேசு கிறிஸ்துவின் காணக் கூடாத (mystical) சரீரம்; வார்த்தை வெளிப்படுத்தப்படுகின்றது. தேவனுடைய குமாரரும் குமாரத்திகளும் எந்த ஸ்தாபனத்திலும் சேர்ந்தவர்கள் அல்ல. “அவைகளை விட்டு வெளியே வாருங்கள்'' என்றார் அவர். ஆம். கவனியுங்கள், துரிதமாக பார்ப்போம். உங்களை களைப்புறச் செய்ய நான் விரும்பவில்லை. ஆனால் இன்னும் சில நிமிடங்கள் எனக்குத் தருவீர்களானால், கூடுமானவரை இதை துரிதமாக முடிக்கப் பார்க்கிறேன். நீங்கள் கண்டிப்பாக இதை புரிந்து கொள்ள வேண்டுமென்றும் இதை நீங்கள் காணத் தவறக் கூடாதென்றும் விரும்புகிறேன். பாருங்கள்? 99கவனியுங்கள், தாயாகிய ரோமன் ஸ்தாபனத்துக்குள் தூஷணமான நாமங்கள் நிறைந்திருந்தன, வேசிகளுக்குத் தாய். அவர்கள் வேசிகள் என்றால்; வேசி என்றால் என்ன? தன் விவாக பொருத்தனைக்கு உண்மையாக வாழாதவளே வேசியெனக் கருதப்படுகிறாள். கிறிஸ்துவின் சபை என்று உரிமை பாராட்டிக் கொண்டு, அதே சமயத்தில் தேவனுடைய வார்த்தையை மறுதலிக்கும் எந்த சபையும் தன் விவாகப் பொருத்தனைக்கு உண்மையாக வாழாதவளே. அப்படியானால் அவள் விபச்சாரம் செய்கிறவள். அவள் கோட்பாடுகளை சேர்த்துக் கொண்டு, கிறிஸ்துவையும், அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், பரிசுத்த ஆவியையும் ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, உலகத்தோடும் அதன் ஞானத்தோடும் பாகுபாடு கொண்டு, அதனுடன் வேசித்தனம் செய்கிறாள். வேசிகளின் தாயும் அதையே செய்தாள். பானை 'கெட்டில்'லை (Kettle) எண்ணெய் பசை கொண்டது என்று அழைக்காது. ஒன்றின் ஆறு மற்றொன்றின் அரை டஜன். இவர்களில் சிலர் கத்தோலிக்கரை கேலி செய்கின்றனர். ஆனால் அவர்களும் இப்படிப்பட்ட ஒன்றைச் சார்ந்தவர்களே. அவள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதன் தவறான அத்தாட்சிக்கு தாயாக விளங்கினாள். நீங்களும் அவளைப் பின்பற்றுகிறீர்கள். இப்பொழுது பார்க்கலாம். “சகோ. பிரான்ஹாமே, அது உண்மையா?'' சற்று அமைதியாயிருங்கள். 100அவள் விடுதிகளின் தூஷணமான நாமங்களுக்கு தாயாக விளங்கினாள். ஜனங்கள் அந்த விடுதிகளில் சேர்ந்து கொண்டு, நிந்தையை வருவித்து, தங்கள் விருப்பப்படி வாழ்ந்து, குட்டை கால் சட்டைகளை அணிந்து, ஸ்திரீகள் கூந்தலைக் கத்தரித்துக் கொண்டு, வர்ணம் தீட்டிக்கொண்டு, பாடல் குழுக்களில் பாடி, புகை பிடித்து, இராப்போஜனத்தில் பங்கு கொண்டு, உலகின் எல்லாவித அசுத்தங்களிலும் ஈடுபடுகின்றனர். அது அவிசுவாசிக்கு இடறலாக அமைகின்றது. தீமோத்தேயு இதைக் குறித்து கூறவில்லையா?, பரிசுத்த ஆவி தீமோத்தேயுவின் மூலமாய், கவனியுங்கள், பாருங்கள், ரோமாபுரி அவர்களெல்லாருக்கும் தாய். பாருங்கள்? அவள் தன் ஸ்தாபனத்தில் செய்ததையே நீங்களும் செய்தீர்கள். நீங்கள் வார்த்தைக்குப் பதிலாக கோட்பாடுகளைப் புகுத்தினீர்கள். ஏனெனில் மனிதரைக் கொண்ட ஒரு குழு போதகர்கள், பேராயர்கள் போன்றவர் ஒன்றாக அமர்ந்து, அது அவ்விதமாகத்தான் இருக்க வேண்டுமென்று அதை அமைத்தனர், ரோமாபுரியிலும் அவ்வாறே நிகழ்ந்தது. என் போதகர் சகோதரனே, தேவனுடைய வார்த்தை முழுவதையும் ஏற்றுக் கொள்ள முயன்று பார்! உனக்கு என்ன நேரிடும் தெரியுமா? நீ வெளியே துரத்தப்படுவாய்! இன்னும் சில நிமிடங்களில், நீ அவ்வாறு செய்ய வேண்டுமென்று தேவன் கூறினாரா இல்லையாவென்று பார்ப்போம். பாருங்கள்? சரி. 101பாருங்கள், அவள் எல்லோருக்கும் தாய். ஏனெனில் அவள் தான் முதலாவதாக வேதத்தில் எழுதப்பட்டவைகளை எடுத்துப்போட்டு, கோட்பாடுகளைப் புகுத்தியவள். அவள் உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தையின் ஜீவனைக் கொண்டிருந்த தீர்க்கதரிசிகளைப் புறக்கணித்தாள். புத்தி கூர்மையுள்ள, சாமர்த்தியமுள்ள ரோம சக்கரவர்த்திகள் கிறிஸ்தவ மார்க்கத்தை ஏற்றுக் கொண்டனர்... ஆனால் அதை தங்கள் சொந்த வழியில் ஏற்றுக் கொண்டனர். பாருங்கள்? அது உண்மை. தங்கள் சொந்த வழியில் அது இருக்க வேண்டுமென்று அவர்கள் விரும்புகின்றனர். நாகமான் தன் குஷ்டரோகத்தை தன் தேசத்திலுள்ள ஆறுகளிலே போக்கி கொள்ள விரும்பினான். அவன் யோர்தானின் கலங்கலான தண்ணீரை விரும்பவில்லை. ஆனால் அவனுடைய குஷ்டரோகம் நீங்க வேண்டுமானால், தீர்க்கதரிசி அவனிடம் கூறின விதமாகவே, அவன் அந்த சேற்றினுள் நடக்க வேண்டும். பாருங்கள், தேவன் பட்சபாதமுள்ளவர் அல்ல. 102கவனியுங்கள், ரோமன் கத்தோலிக்க சபை தான் முதலாம் ஸ்தாபனம். அவளுடைய குமாரத்திகளைப் பாருங்கள்! அவர்களும் அதையே செய்தனர், வார்த்தைக்குப் பதிலாக கோட்பாடுகளையும் ஸ்தாபனப் பிரமானங்களையும் சேர்த்துக் கொண்டனர். அப்படி இல்லையென்று என்னிடம் கூற வேண்டாம். வார்த்தையை விட்டு அகன்று சென்றிடாத ஒரு ஸ்தாபனத்தையாவது எனக்குக் காண்பியுங்கள். சத்தியத்தை ஏற்றுக் கொண்டு வெளியே துரத்தப்படாத ஒரு போதகரையாவது எனக்குக் காண்பியுங்கள். அவர் செல்வாக்கு உள்ளவராக இருப்பாரானால், அதற்காக ஒருக்கால் அவரை இன்னமும் வைத்திருக்கக் கூடும். அது உண்மை. 103இப்பொழுது வெளிப்படுத்தல் 18ம் அதிகாரத்தை சில நிமிடங்கள் பார்ப்போம். அது வெளிப்படுத்தல் 17ம் அதிகாரத்துக்கு அடுத்த அதிகாரம். வெளிப்படுத்தல் 17, குமாரி. பாபிலோன் யாரென்னும் இரகசியத்தை வெளிப்படுத்தித் தந்தது. அது ஒரு சபையென்றும், அது ஏழு மலைகளின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கும் வாடிகன் நகரமென்றும், அது பூமியிலுள்ள ராஜாக்களின் மேல் ஆளுகை செய்கிறது என்றும் (அது முற்றிலும் உண்மை), அது ஜனாதிபதிகளை ஆளுகிறதென்றும் நமக்கு வெளிப்படுத்தித் தந்தது. அவள் அங்கு உட்கார்ந்து கொண்டு, உலகின் செல்வத்தை தன் கையில் பிடித்திருக்கிறாள். அது முற்றிலும் உண்மை. “அவளுடன் யார் யுத்தம் பண்ண முடியும்?'' அது உண்மை. அது நம்மெல்லாருக்கும் தெரியும் அப்படியானால் அவளுடன் தொடர்பு கொண்டுள்ள ஒன்றுடன் நீங்கள் ஏன் சார்ந்திருக்க வேண்டும்? கவனியுங்கள், அவளுடைய இரகசியத்தை விளக்கின அதிகாரத்துக்கு அடுத்த அதிகாரமாகிய 18ம் அதிகாரத்தில், அவள் ”தேவனுடைய ஆலயத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்.“ 104இப்பொழுது, இங்கு... செல்லா பிரேயிட்மன் (Zella Braitman), இன்றிரவு இங்கு இருக்கிறாயா? அவள் 'சண்டே விசிடர்' (Sunday Visitor) என்னும் கத்தோலிக்க செய்தித்தாளைக் கொண்டு தந்தாள். அது இப்பொழுது என்னுடைய அறையில் உள்ளது. அச்செய்திதாள் ஒரு போதகருக்கு இவ்விதம் பதிலளிக்கிறது; “போதகரே வாடிகனிலுள்ள போப்பாண்டவருடைய சிம்மாசனத்தின் மேல் எழுதப்பட்டுள்ள ''விகாரியஸ் ஃபிலி டெய்'' (Vicarius Filii Dei) என்பதிலுள்ள ரோம எழுந்துக்களின் இலக்கங்களை கணக்குப் பார்க்கும் போது, அது வெளிப்படுத்தின விசேஷத்தில் கூறப்பட்டுள்ள மிருகத்தின் இலக்கமாகிவிடுகிறது (வெளி 13:18) என்று கூறுகிறீர் அல்லவா?'' “அது மிகவும் உண்மை. அது சரியாக அறுநூற்றறுபத்தாறு என்னும் கணக்குக்கு வருகிறது என்பது என்னவோ உண்மை தான்''. ரோம சபை அதை ஒப்புக் கொள்கிறது. ஆனால் சாமர்த்தியமுள்ள, ஞானம் நிறைந்த அவர்கள் பதிலைப் பாருங்கள். ''ஒருக்கால் உங்கள் பெயரை வேறொரு மொழியில் கணக்கிட்டால், அதுவும் அதே எண்ணிக்கையாக இருக்கக் கூடும்.'' அதை எழுதின மனிதன் தொடர்ந்து, “வேறொரு மொழியில் என் பெயரும் கூட அதே எண்ணிக்கையாக கணக்கில் வருகிறது. பாருங்கள், நானும் கூட ஏறக்குறைய அறுநூற்றறுபத்தாறு தான். அப்படி நூற்றுக்கணக்கானோர் உள்ளனர். ஒவ்வொரு முறையும் யாராகிலும் ஒருவர் எழும்பினால் வேறொருவர் அவர் அறுநூற்றறுபத்தாறு என்று கூறிவிடுகிறார்'' என்று சொல்லிவிட்டு, ”போதகரே, வேறெதாவது மொழியில் உங்கள் பெயரும் கூட அந்திக் கிறிஸ்துவின் எண்ணாக கணக்கிடப்படலாம். அப்படிப்பட்ட காரியங்களை ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?'' என்றார். ஞானத்தைப் பாருங்கள்! 105ஆனால் பரிசுத்த ஆவிக்கு அதைக் காட்டிலும் அதிகமாகத் தெரியும். கவனியுங்கள், ஒருக்கால் என் பெயரிலுள்ள எழுத்துக்களைக் கூட்டினால், அது அறுநூற்றறுபத்தாறாக இருக்கலாம். ஆனால் நான் மற்ற தகுதிகளை நிறைவேற்றவில்லையே! நான் மலையின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கவில்லை, இவைகளை நான் கூறவில்லை. நான் ஆளுநர் அல்ல, பார்த்தீர்களா? அது உண்மை. அவர் அப்படிப்பட்ட ஒன்றைக் குறித்து தான் இங்கு குறிப்பிட்டுள்ளார். எனவே, ஐயா, பரிசுத்த ஆவியின் முன்னிலையில் உங்கள் உலக ஞானம் ஒன்றுமற்றதாகிவிடுகின்றது. அது உண்மை. நான் மற்ற தகுதிகளை பூர்த்தி செய்யவில்லை. ஆனால் அவன் அதை பூர்த்தி செய்கிறான். அவன் “தேவனுடைய ஆலயத்தில் உட்கார்ந்து, தேவன் போல் தன்னைக் காண்பித்து, ஏழு மலைகளின் மேல் அமர்ந்திருக்கிறான்”. என் பெயர் அறுநூற்றறுபத்தாறாக கூட்டப்பட்டாலும், நான் ஏழு மலைகளின் மேல் உட்கார்ந்திருக்கவில்லை, நான் மற்ற தகுதிகளை பூர்த்தி செய்யவில்லை. ஆனால் அவனோ அவ்வாறு செய்கிறான். பார்த்தீர்களா? எனவே பரிசுத்த ஆவியின் பேரில் சார்ந்திருங்கள். ''நீங்கள் என்னத்தைப் பேசுவோமென்று கவலைப் பட வேண்டாம். பேசுகிறவர்கள் நீங்களல்ல, உங்கள் பிதா''. 106அப்படியிருக்கும் போது, உங்கள் ஞானமும், பரத்திலிருந்து வந்துள்ள உங்கள் மறுபிறப்பும் இவ்வுலகிலுள்ள காரியங்களுடன் இங்குள்ள மந்திரவாதிகளின் ஞானத்துடன் எப்படி ஒப்பிடப்பட முடியும்? அவர்கள் (மந்திரவாதிகள்) ஒவ்வொரு நுணுக்கத்தையும் அறிந்திருந்தனர். மோசே தேவனுடைய கட்டளைகளைக் கைக் கொண்டு அவனுடைய கோலைத் தரையில் போட்ட போது, அது சர்ப்பமாக மாறினது. மந்திரவாதிகளும் அங்கு வந்து அதே செயலை எவ்வாறு புரிய முடிந்தது?. ஆனால் மோசேயோ, அவன் தேவனுடைய வார்த்தையைக் கைக்கொண்டான் என்று அறிந்தவனாய், அமரிக்கையாயிருந்தான். அப்பொழுது அவனுடைய சர்ப்பம் மற்ற சர்ப்பங்களை விழுங்கினது. பாருங்கள்? நீங்கள் அவருக்குக் கீழ்ப்படியும் போது... இஸ்ரவேல் ஜனங்களை வாக்குத்தத்தம் பண்ணின தேசத்துக்கு அவன் வழி நடத்தி சென்றபோது. சிவந்த சமுத்திரம் அவர்களுக்குத் தடையாக இருந்ததே, அவன் என்ன செய்வான்? ஆனால் தேவனுடைய பாதையோ அந்த சமுத்திரத்தின் வழியாகச் சென்றது. ஆமென். அவர், “நீங்கள் நின்று கொண்டு கர்த்தருடைய மகிமையைப் பாருங்கள்'' என்றார். நீங்கள் தேவனுடைய வார்த்தையை பின்பற்றும் கடமையின் பாதையில் செல்லும் போது, அங்கு நின்று தடங்கல்கள் பிரிந்து போவதைக் காணுங்கள். ஆமென். எனக்கு ஐம்பத்து மூன்று வயதாகின்றது. நான் முப்பத்தைந்து ஆண்டுகளாக அவருக்கு ஊழியம் செய்து வருகிறேன். அவருடைய வார்த்தையை கைக்கொள்ளும் போது, அவர் தவறியதை நான் இதுவரை கண்டதில்லை. அது உண்மை. 107கவனியுங்கள், அவளுடைய பாவத்திற்குப் பிறகு, அவளுடைய இரகசியங்கள் வெளியரங்கமாகின்றன. நாம் அதிக நேரம் அதைக் குறித்து பார்த்தோம். அது நமக்குத் தெரியும். இப்பொழுது அடுத்த அதிகாரம், வெளிப்படுத்தல் 18ஐப் பாருங்கள். ஒரு நிமிடம் அதற்கு நாம் திருப்பலாமா? அது நலமாயிருக்கும். அது சில நிமிடங்கள் தான் அதிகம் எடுக்கும். ஆனால் அது உங்களுக்கு நன்மை பயக்கும். அது நன்மை பயக்கும் என்று நம்புகிறேன். நாம் 17ம் அதிகாரம், 3ம் வசனத்தில் பார்க்கிறோம்: மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது. அந்த ஸ்திரீ (சபை) பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும் இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறி கொண்டிருக்கிறதைக் கண்டேன்; அவைகளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். பாருங்கள், அவள் பார்வைக்கு மிகவும் அழகாக இருந்தாள். அவள் வேசிகளுக்குத் தாய், வேசி மார்க்கத்திற்கு, ஸ்தாபனங்களுக்கு. அவள் செய்ததையே இவர்களும் செய்தனர். அவர்களும் அவளைப் போலவே கோட்பாடுகளைப் புகுத்தினர். இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷத்தைப் பாருங்கள். 17ம் அதிகாரம் 18ம் வசனத்தில் முடிவடைகின்றது. இப்பொழுது கவனியுங்கள் (வெளிப்படுத்தல் 18ம் அதிகாரம் - தமிழாக்கியோன்). 108இப்பொழுது கவனியுங்கள். ...இவைகளுக்குப் பின்பு (அவளுடைய இரகசியங்கள் வெளியரங்கமான பின்பு), வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்து இறங்கி வரக் கண்டேன்... இங்கு வேறொரு தூதன் இறங்கி வருகிறான், அடுத்த அதிகாரம், அவளுடைய இரகசியம் வெளியரங்கமாயின. அவளுடைய இரகசியமும், அவளுடைய குமாரத்திகளின் இரகசியமும் வெனியரங்கமாயின. அவளை எது வேசியாக்கியது என்பதை நாம் சரிவர அறிந்து கொண்டோம். ஏனெனில் அவள் தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாய் விபச்சாரம் செய்தாள். அது தான் அவளை ஒரு ஸ்தாபனமாக்கினது. அவள் வேதப் பூர்வமான ஒரு சபையாக இருந்து கொண்டு அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எழுதப்பட்டுள்ள விதமாகவே தேவனுடைய வார்த்தை ஒவ்வொன்றையும் ஏற்றுக் கொள்ளாத எந்த ஒரு ஸ்தாபனமும் வேதப்பூர்வமான சபையாக இருக்க முடியாது. எனக்குத் தெரிந்த வரையில், எந்த ஒரு ஸ்தாபனமும் அப்படி இருக்கவில்லை, ஒன்று கூட இல்லை. அவளுடைய செயல்களை அவள் ஸ்தாபனமாக ஆக்கிக் கொள்ளும் போது, அவள் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு அங்கேயே மரித்துவிடுகிறாள் என்பது வேதப் பிரகாரமாகவும், சான்றுகளின் மூலமாகவும் ருசுவாகிறது. 109அந்த இரகசியம் வெளியரங்கமான பின்பு, இந்த 18ம் அதிகாரத்தில் தேவன் ஒரு வல்லமையுள்ள தூதனை, ஒரு செய்தியாளனை அனுப்புகிறார். இங்கு கவனியுங்கள், இவைகளுக்குப் பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்து இறங்கி வரக் கண்டேன்; அவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று. அவன் பலத்தசத்தமிட்டு: மகா பாபிலோன் (குழப்பம்) விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், சகலவித அசுத்த ஆவிகளுடைய காவல் வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று. அவளுடைய வேசித்தனத்தின் உக்கிரமான மதுவை எல்லா ஜாதிகளும் குடித்தார்கள்; பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம் பண்ணினார்கள்; பூமியின் வர்த்தகர் அவளுடைய செல்வச் செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களானார்கள் என்று விளம்பினான். 110பாருங்கள், அவள் யாரென்றும் அவளுடைய குமாரத்திகள் யாரென்பதையும் குறித்த இரகசியம் வெளிப்படையாகி அறிவிக்கப்பட்டவுடனே, தேவன் ஒரு தூதனை, ஒரு செய்தியாளனை, அனுப்புகிறார். எதற்காக? “வெளியே வாருங்கள்'' என்று அழைப்பதற்காக. இம்மணிநேரத்துக்குரிய செய்தி! ...அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும் படிக்கு அவளை விட்டு வெளியே வாருங்கள்... அவர் அவளைச் சபிக்கப் போகிறார். கவனியுங்கள்! அவளை விட்டு வெளியே வாருங்கள்! தேவன் ஒரு பலமுள்ள தூதனை, செய்தியாளனை, அனுப்பினார். அவனுடைய வெளிச்சம் எங்கோ ஒரு மூலையில் இல்லை, அது பூமி முழுவதிலும் பரம்பிற்று. அவளைவிட்டு வெளியே வாருங்கள்! அவளையும் அவளுடைய சகோதரிகளையும் விட்டு. பூமியை பிரகாசமாக்கி, அவருடைய ஜனங்களை அவளை விட்டு வெளியே அழைக்க. அது உண்மையென்று உங்களுக்குத் தெரியும். பாபிலோனிலிருந்து தேவனுடைய பிள்ளைகளை வெளியே அழைக்க வானத்திலிருந்து ஒரு தூதன் அனுப்பப்பட்டான். அவனுடைய வெளிச்சம் பூமியை பிரகாசமாக்கிற்று, மகத்தான பரிசுத்த ஆவி. 111கவனியுங்கள், வேதம், ''அவள் ஒரு கூடு. அவள் அசுத்தமும் அருவருப்புமுள்ள பறவைகளை அதில் அடைத்து வைத்திருக்கிறாள்'' என்று கூறுகின்றது (வெளி. 18:2). கழுகுகளை அல்ல, இல்லை, இல்லை, இல்லை, இல்லை, பருந்துகளை, “அசுத்தமும் அருவருப்புமுள்ள பறவைகளை”'. அவைகளை தான் அவள் தன்னை சுற்றிலும் அடைத்து வைத்திருக்கிறாள். அவள், அவை நிறைந்த ஒரு கூடு, ஒரு கூடு நிறைய. எதனால் நிறைந்துள்ளது? “தூஷணமான நாமங்களால்'' - வேதத்துக்கு முரணானவைகளால். 2 தீமோத்தேயு 2ல் பரிசுத்தஆவி, “கடைசி நாட்களில் அவர்கள் விசுவாசத்தை விட்டு விலகி வஞ்சிக்கிற ஆவிகளுக்கு செவி கொடுப்பார்கள்'' என்று உரைத்துள்ளார் (அது 1 தீமோ.4:1ல் கூறப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்). அது மாத்திரமல்ல, “கடைசி நாட்களில் அவர்கள் துணிகரமுள்ளவர்களாகவும், இறுமாப்புள்ளவர்களாகவும், வெறுக்கிறவர்களாகவும் இருப்பார்கள்'' என்று பரிசுத்தஆவி கூறியுள்ளார் (2 தீமோ. 3:4). (''கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் எங்களைச் சேர வேண்டும். இல்லையேல் உங்கள் பெயர் எங்கள் புத்தகத்தில் இருக்காது. நீங்கள் இழக்கப்படுவீர்கள்.'') “அருவருப்பு! அசுத்தமானது!'' நான் யாரையும் புண்படுத்தவில்லையென்று நினைக்கிறேன். நான் நன்மை செய்கிறேன் என்று நம்புகிறேன். அவள் அருவருப்பும் அசுத்தமுமான பறவைகளை கூட்டில் அடைத்து வைத்திருக்கிறாள். 112தேவன் ஒரு கழுகு என்பதை நினைவு கூருங்கள். அவர் தம்மை கழுகு என்று அழைத்துக் கொண்டார். அவர் யாக்கோபை கழுகு என்றழைத்தார். நாம் அவருடைய கழுகுக் குஞ்சுகள். ஆமென். அவர் தமது தீர்க்கதரிசிகளை “கழுகுகள்'' என்றழைத்தார். இந்த தூதன் அம்பலப்படுத்தி, வெளியே அழைக்க இறங்கி வருகிறான். “கழுகு தன் கூட்டைக் கலைக்கின்றது'' என்னும் என் சிறு செய்தி போல். அந்த கழுகுக் குஞ்சு தானியக் களஞ்சிய முற்றத்தில் கோழியைச் சுற்றிக் கொண்டே வந்தது. ஆயினும் அதனால் கோழியின் தீனியைத் தின்ன முடியவில்லை, சமூக விருந்து, முகத்தில் வர்ணம் தீட்டின பெண்கள், கூந்தலைக் கத்தரித்துள்ள பெண்கள், குட்டை கால் சட்டை போன்றவைகளை. அதனால் முடியவேயில்லை. அதற்கு தாய் கோழி 'க்ளக், க்ளக்' என்று இடும் சத்தத்தைத் தவிர வேறொன்றும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் ஒரு நாள் தாய் கழுகு அதை கண்டு பிடித்துவிட்டது. அது, ''மகனே, நீ அவர்களில் ஒருவன் அல்ல, அவளை விட்டு வெளியே வா'' என்று கூச்சலிட்டு, வெளியே வரும்படி அழைத்தது. கழுகுக் குஞ்சு, “அம்மா, நான் என்ன செய்ய வேண்டும்?'' என்றது. தாய் கழுகு, “உன் செட்டைகளை அடித்து பறக்கத் தொடங்கு'' என்றது. முதலில் அது தாவிய போது, கம்பத்தில் முட்டிக் கொண்டது, ஒரு ஸ்தாபனத்தின் நடுவில். அப்பொழுது தாய் கழுகு, ”மகனே, நீ இன்னும் உயரப் பறக்க வேண்டும். இல்லையென்றால், உன்னை நான் எட்டிப் பிடிக்க முடியாது'' தரையிலிருந்து உன் பாதங்களை ''தூக்கி பறந்து வா'' என்றது. தாய் கழுகு, கழுகுக் குஞ்சை சுமந்து பறக்கப் போகின்றது. தன்னால் பறக்க முடியும் என்று கழுகுக் குஞ்சு அறிந்து கொண்டது. அதனை வெளியே அழைக்க அது வந்தது. அது உண்மை. 113ஆனால் தாய் பாபிலோன் ஒரு கூட்டம் அழகான கோழிக் குஞ்சுகளை, வர்ணம் தீட்டி, கூந்தலைக் கத்தரித்து, அதே சமயத்தில் தங்களை “கிறிஸ்தவர்கள்” என்று அழைத்துக் கொள்பவர்களை, தன் கூட்டில் அடைத்து வைத்துள்ளது. அவர்கள் கூடு நிறைய உள்ளனர். பிரசங்க பீடத்தில் நின்று கொண்டு, இவர்களுடைய செயல்களை கண்டிக்காமல் விட்டு விடும் போதகர்களாகிய உங்களுக்கு அவமானம்! உங்கள் ஸ்தாபனங்களிலுள்ளோர் எண்ணிக்கை அதிகமாயிருக்க வேண்டுமென்று அப்படி செய்கின்றீர்கள். தேவன் உங்களிடம் அதற்காக கணக்கு கேட்பார். அதை விட்டு வெளியே வாருங்கள்! “என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவி கொடுக்கின்றது.'' அருவருப்பான, துணிகரமான, இறுமாப்புள்ள, தேவப் பிரியராயிராமல் சுகபோகப்பிரியர்கள் நிறைந்துள்ள கூடு. கிறிஸ்துவைப் போல் இருப்பதற்கு பதிலாக உலகத்தைப் போல் இருக்க பிரியப்படுகின்றவர்கள். அழகுபடுத்தும் சாதனங்கள் அதிகமாக உபயோகித்துள்ள ஒரு பெண்ணை நீங்கள் காணும் போது, அவள் உட்புறம் வெறுமையாயுள்ளது என்பதை அது காண்பிக்கிறது. அது மிகவும் உண்மை. அந்த பெண்... ஒரு நாள் பச்சை தலை மயிருடைய ஒரு பெண்ணைக் கண்டேன். அவளுடைய கண்களிலும் அவள் பச்சை வர்ணம் தீட்டியிருந்தாள். 114உங்களுக்கு தலைமயிர் இல்லாமலிருந்து, நீங்கள் டோப்பா அணிய விரும்பினால், அது சரிதான். ஆனால் மானிடரைப்போல் தோற்றமளிக்கும் ஒன்றை அணிந்து கொள்ளுங்கள். உங்கள் விரல்களில் நகங்கள் இல்லாமலிருந்து, நகங்கள் அணிந்து கொள்ள விரும்பினால், 'பீன்ஸ்' (Beans), காயின் தோலைப் போன்ற நீளமான ஒன்றை அணிந்து கொள்ள வேண்டாம், உண்மையான விரல் நகங்களையே அணிந்து கொள்ளுங்கள். இவைகள் உங்களுக்கு இல்லாமல் இருந்தால், அப்படி செய்வது சரிதான். உங்களுக்கு பற்கள் இல்லாமலிருந்தால், அவர்கள் செயற்கை பற்களை உண்டாக்குகின்றனர். அவைகளை வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் உங்கள் பற்கள் சற்று கோணலாக உள்ளன என்பதற்காக, தேவனால் அளிக்கப்பட்ட அந்த நல்ல பற்களை பிடுங்கிவிட்டு, செயற்கை பற்களை வாங்கி அணிந்து கொள்ளாதீர்கள். உங்கள் தலை மயிருக்கு சாயம் பூசிக்கொண்டு, சேற்றிலிருந்து எழுந்து வந்தது போல் தோற்றமளிக்காதீர்கள். அப்படி செய்ய வேண்டாம். உங்கள் தலைமயிருக்கு நிறம் இல்லாமலிருந்து, அதற்கு நிறம் பூசினால் அதனால் பரவாயில்லை. ஆனால் யேசபேலைப் போன்று, வர்ணம் தீட்டப்பட்ட எங்கோயுள்ள தானியக் களஞ்சியத்தைப் போன்று தோற்றமளிக்க வேண்டாம். 115தலைமயிர் பெண்களின் மகிமையென்று வேதம் கூறியிருக்க, பெந்தெகொஸ்தே சகோதரராகிய நீங்கள் உங்கள் பெண்கள் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்ள அனுமதிக்கின்றீர்கள். அவள் தலைமயிர் கத்தரிக்கப்பட்ட நிலையில் ஜெபம் செய்வது கூட கண்டிக்கத் தக்கது. அப்படியிருக்க, அப்படிப்பட்ட பெண் பிரசங்க பீடத்தில் ஏறி பிரசங்கம் செய்யவும், பாடல் குழுவில் பாடவும், ஞாயிறு பள்ளியில் போதிக்கவும் நீங்கள் அனுமதிக்கின்றீர்கள். உங்களுக்கு அவமானம்! உங்களைக் குறித்து நீங்கள் வெட்கப்பட வேண்டும். நான் ஏன் ஸ்தாபனத்திற்கு விரோதமாயுள்ளேன்? அத்தகைய ஏதாவதொன்றை நான் ஆதரிப்பேன் என்று நினைக்கின்றீர்களா? சகோதரனே, நீ ஏன் அப்படி செய்கின்றாய் என்று எனக்குத் தெரியும். உனக்கு நன்றாகத் தெரியும். நீ அதற்கு விரோதமாய் போதித்தால், நீ தலைமை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு, அவர்கள் உன்னை சபை நீக்கம் செய்துவிடுவார்கள். நீ தைரியமாய் அப்படி செய்வாயானால், தேவன் உன்னை ஆசிர்வதிப்பார். அது உண்மை, தேவன் உன்னை கௌரவிப்பார். 116இந்த தூதன் என்ன கூறினான்? ''அவளை விட்டு வெளியே வாருங்கள்!'' ஆம், ஐயா. இந்த தூதன் அந்த வெளிச்சத்தைக் கொண்டு வருவதற்காக பூமிக்கு வருகிறான். அவன் அந்த ஒளி பூமி முழுவதும் பிரகாசிக்கச் செய்தான். அவன் பலமுள்ள தூதன். ''பாபிலோனை விட்டு வெளியே வாருங்கள்! அசுத்தமானதைத் தொடாதிருங்கள்'' என்னும் செய்தியை பறை சாற்ற அவன் வருகிறான். ஒரு கூடு நிறைய அவர்கள் இருக்கின்றனர். ''அவள் அருவருக்கப்படத் தக்க ஒவ்வொரு பறவையையும் கொண்டுள்ள கூடு. ஆம். இப்பொழுது கூடு நிறைய அவள் அவர்களைப் பெற்றிருக்கிறாள். உலக சபைகளின் மாநாடு அல்லது விடுதிகள். அவர்கள் அனைவரும் அந்த கூட்டில் அடைப்பட்டுள்ளனர். அவர்கள் எல்லோரும் இப்பொழுது ஒன்று சேருகின்றனர். அவள் அருவருக்கப்படத் தக்க பறவைகள் நிறைந்த கூடாகிவிட்டாள். அது உண்மை. அவர்கள் யாரிடமாவது பேச முயன்று பாருங்கள்! சற்று முயன்று பாருங்கள்! அவர்கள் உலக ஞானம் கொண்ட சாமர்த்தியசாலிகள். ஆனால் முயலுக்கு பனிக்கட்டி காலணிகளை (Snow Shoes) பற்றி எப்படி தெரியாதோ. அப்படியே இவர்களுக்கு தேவனைக் குறித்து ஒன்றும் தெரியாது. அது உண்மை. அவர்களுக்கு தெரிந்தது எல்லாமே, இதை அங்கு வைத்து, அதை அங்கு செய்யும் ஞானம் மாத்திரமே. ஆனால் அவரை அறிந்து கொள்ளும் விஷயத்தில்! ஆம், அவளுடைய கோட்பாடுகளுடன் அவளுடைய கூட்டில் சிக்கிக் கொண்டுள்ளனர். பிராடெஸ்டெண்டு சபைகளும் அவ்வாறே தொடங்கி, அவளுடைய குமாரத்திகளாகி, தேவனுடைய வார்த்தையை மறுதலித்ததனால், இப்படி ஆகக் காரணமாயிருந்தனர். அவள் அப்படித்தான் செய்கிறாள். அவள் வார்த்தையை மறுதலிக்கிறாள். நீங்கள் வார்த்தைக்குப் பதிலாக ஏதாவதொன்றை ஏற்றுக் கொள்ளும்போது, நீங்களும் அதை மறுதலிக்கிறீர்கள். நீங்கள் அந்த ஸ்தாபனங்கள் ஒன்றில் சேர்ந்து கொள்வீர்களானால், நீங்களும் வார்த்தையை மறுதலிக்கின்றீர்கள். நீங்கள் அப்படி செய்வது தேவனுக்குப் பிரியமில்லை. அங்கு வேதத்திற்கு இடமேயில்லை. 117கவனியுங்கள், இது ஒளியின் தூதன். இது கடைசி தூதன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சபை காலங்களில், இவன் லவோதிக்கேயா சபையின் தூதன். இவன் லவோதிக்கேயா சபையின் செய்தியாளன். இதுதான் கடைசி. ஏனெனில் அடுத்தது 19ம் அதிகாரம், அது மணவாட்டி வருதல். இது வேதத்திலுள்ளது. கிறிஸ்துவை சந்திக்க மணவாட்டி வரும் முன்பு, கடைசி தூதன் ஒளியைக் கொண்டு வரத் தோன்றினான். அப்படியானால் அது லவோதிக்கேயா சபையின் காலம். லவோதிக்கேயா சபையின் தூதன் என்ன செய்கிறான்? அவர்களை பாபிலோனிலிருந்து வெளியே அழைக்கிறான். பாருங்கள்! சபைகள் அவளுடைய கோட்பாடுகளைக் கொண்டவைகளாய் அவளுடைய கூட்டில் அடைபட்டு, வார்த்தையை மறுதலித்து கோட்பாடுகளை ஏற்றுக் கொள்கின்றன. இது இயேசு கிறிஸ்துவையும், அவருடைய வார்த்தையையும் புறம்பே தள்ளி கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டுள்ள லவோதிக்கேயா, சபைக்கு வந்துள்ள ஒளியின் தூதன். கிறிஸ்து வாசற்படியில் நின்று தட்டி, உள்ளே நுழைய முயன்று கொண்டிருக்கிறார். அதை கவனித்தீர்களா? இந்த சபை காலம் கிறிஸ்துவைப் புறக்கணித்துவிட்டது. வார்த்தையே கிறிஸ்து. சபை அதை புறக்கணித்துவிட்டது. அவர் வெளியில் நின்று கொண்டிருக்கிறார். கிறிஸ்து வெளியில் நின்று கொண்டு, கதவை தட்டி, உள்ளே நுழைய முயன்று கொண்டிருக்கும் ஒரே சபைகாலம் இதுவே. இந்த தூதன் தேவனிடத்திலிருந்து வந்து, ''பாபிலோனை விட்டு வெளியே வாருங்கள்'' என்னும் அவருடைய செய்தியை எதிரொலித்துக் கொண்டிருக்கிறான். இன்றுள்ள பரிசுத்த ஆவி, பரிசுத்த ஆவியின் வெளிப்படுத்தலான அந்த தூதன், ஜனங்களை வார்த்தைக்குத் திருப்ப முயன்று கொண்டிருக்கிறான். ஏனெனில் பரிசுத்த ஆவி வார்த்தையை மாத்திரமே உறுதிப்படுத்தும், கோட்பாடுகளை உறுதிப்படுத்தாது. அவைகளில் ஜீவன் இல்லை. அவர் ஜீவனாயிருக்கிறார். கவனியுங்கள்; லவோதிக்கேயா சபை காலம் அவரை மறுதலித்துவிட்டது, அவரைப் புறக்கணித்துவிட்டது. அவரை அவர்கள் வெளியே தள்ளிவிட்டனர். 118கவனியுங்கள், வெளிப்படுத்தல் 19ம் அதிகாரத்தில் கிறிஸ்து வருவதற்கு முன்பு, இந்த தூதன் தான் கடைசி செய்தியாளன். செய்தியாளனின் சத்தம்! நீங்கள் கவனிப்பீர்களானால், அவன் பூமியில் சத்தமிட்டபோது, பரலோகத்தில் ஒரு சத்தம் எதிரொலித்தது. நீங்கள் படிக்க விரும்பினால் 19ம் அதிகாரம் 4ம் வசனம் (சகோ. பிரான்ஹாம் 18ம் அதிகாரத்தைக் குறிப்பிடுகிறார் - தமிழாக்கியோன்). பூமியிலுள்ள இத்தூதன் தேவனுடன் அவ்வளவாக ஒன்றுபட்டுள்ளதால், அவன் பூமியில் பேசின போது, தேவன் அதையே பரலோகத்தில் எதிரொலித்தார். 4ம் வசனத்தின் அர்த்தமென்ன? தேவனுடைய சத்தம் முன்குறிக்கப்பட்ட தமது ஜனங்களுடன் பேசி, “அவளை விட்டு வெளியே வாருங்கள்'' என்கிறது. அந்த சத்தம் எதுவோ அதுவே! அவருடைய ஜனங்கள் பாபிலோன் முழுவதிலும் உள்ளனர். அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமல், அவளை விட்டு வெளியே வாருங்கள். அவளுடைய கோட்பாடுகளையும் பிரமாணங்களையும் விட்டு, ஆவியாயும் ஜீவனாயும் உள்ள வார்த்தைக்கு வாருங்கள். ஆமென். 119கவனியுங்கள், 19ம் அதிகாரம் அடுத்த அதிகாரம். அது, “இவைகளுக்குப் பின்பு'' என்று தொடங்குகிறது. 19ம் அதிகாரம், ”இவைகளுக்குப் பின்பு'' என்று தொடங்குவதை கவனித்தீர்களா? எவைகளுக்குப் பின்பு? ''அவளை விட்டு வெளியே வாருங்கள்,'' என்னும் செய்திக்குப் பின்பு. “இவைகளுக்குப் பின்பு''. கவனியுங்கள், மணவாட்டி - பரிசுத்தவான்கள் ஆரவாரம் செய்து, மணவாளனுடன் கலியாண விருந்துக்கு செல்கின்றனர். அப்படியானால், சகோதரனே, நாம் எவ்வளவு அருகாமையில் இருக்கிறோம்? கடைசி அழைப்பு எது? ''அவளை விட்டு வெளியே வாருங்கள்!'' என் சகோதரரே, ஆகையால் தான் நான் அதற்கு விரோதமாயுள்ளேன். அது வேத பூர்வமானதல்ல! அது வைதீகமற்றது. அது தவறென்று நிருபிக்கப்பட்டுள்ளது. தேவன் அதில் இல்லை. அவர் முன்பு இருந்ததுமில்லை, அவர் எப்பொழுதும் இருக்கப் போவதுமில்லை. இந்த ஸ்தாபனங்களில் தேவனுடைய ஜனங்கள் இல்லையென்று நான் கூற வரவில்லை. சபை அதிலிருந்து தான் உண்டாகிறது. ஆனால் நீங்கள் அந்த ஸ்தாபன முறைமைக்குள் தங்கியிருக்கும் வரைக்கும், அதன் ஒரு பாகமாக இருக்கின்றீர்கள். 120நான் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தங்கியிருந்தால், நான் ஒரு அமெரிக்கன். நான் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் குடிமகனாக அல்லது உறுப்பினனாக உள்ள வரைக்கும், அதன் ஒரு பாகமாயிருப்பேன். நான் ஜெர்மனிக்கு சென்று அங்கு குடி மகனாகி, அமெரிக்காவிலிருந்த என் குடிமகன் நிலையை ரத்து செய்துவிட்டால், நான் ஜெர்மன் தேசத்தானாகிவிடுகிறேன். நான் ஜப்பானுக்கு அல்லது ருஷியாவுக்கு அல்லது வேறெந்த நாட்டிற்கோ சென்றால், அங்கு நான் குடிமகனாகிவிடுகிறேன். அது போன்று, நீங்கள் ஒரு ஸ்தாபன முறைமையை சேர்ந்து கொண்டு அதன் குடிமகனாகிவிட்டால், நீங்கள் யாரென்பதை வெளிப்படையாகக் காண்பித்துவிடுகிறீகள். இக்கடைசி நாட்களில் தேவன் ஜனங்களை அதிலிருந்து வெளியே அழைத்துக் கொண்டிருக்கிறார். வேதம் அவ்வாறு கூறுகின்றது. ''அவளுடன் உடன்படாமல், அவளை விட்டு வெளியே வாருங்கள். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொள்வேன். அவளுடைய அசுத்தமான காரியங்களைத் தொடாதிருங்கள். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொள்வேன். அப்பொழுது நீங்கள் என் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்கள். நான் உங்கள் தேவனாயிருப்பேன்''. பாருங்கள்? 121அதன் காரணமாகத்தான் நான் சபைக்கு - விடுதிக்கு, விரோதமாக பேசி வருகிறேன். அதை நான் சபை என்று அழைக்க முடியாது. ஒரே ஒரு சபை மாத்திரமேயுள்ளது. அதுதான் கிறிஸ்துவின் சரீரமாகிய சபை. ஆனால் 'சபை' என்றழைக்கப்படும் இவ்விடுதிகள் தூஷணமான நாமங்கள் என்பதாக என் வேதம் கூறுகின்றது, அவை எல்லாமே; எல்லா ஸ்தாபனங்களும். அவை எதை தூஷிக்கின்றன? 'தூஷணம்' என்னும் சொல், 'ஒன்றுக்கு முரணாக அல்லது விரோதமாக பேசுதல்' என்று பொருள்படும். தேவன், “நீங்கள் மறுபடியும் பிறவுங்கள்'' என்று கூறியிருக்க அவர்கள் ''நீங்கள் சேர்ந்து கொள்ளுங்கள்'' என்கின்றனர், பாருங்கள்? பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பது கத்தோலிக்க சபையில் ஒரு ரொட்டித் துண்டை உட்கொள்ளுதலுக்கும், பிராடெஸ்டெண்டு சபையில் கைகுலுக்குதலுக்கும், பெந்தெகொஸ்தே சபையில் உணர்ச்சி வசப்படுதலுக்கும் சமானமாக தவறாகக் கைக் கொள்ளப்பட்டு வருகின்றது. அன்று நாம் பார்த்தது போல், கிறிஸ்து என்னும் நபர் கூர் நுனிக் கோபுர வடிவில் வருவதற்குப் பதிலாக! உங்கள் விசுவாசத்துடன் நற்குணத்தை (Virtue) கூட்டுங்கள். இன்னும் மற்றவைகளை. இது பேதுரு முதலாம் நிருபத்தில்... இரண்டாம் நிருபம் முதலாம் அதிகாரம் என்று நினைக்கிறேன். விசுவாசத்தோடே இவைகளெல்லாம் கூட்டப்படுகின்றன. தேவ பக்தி, பரிசுத்தம் இவையெல்லாமே. அதன் பின்பு நீங்கள் பரிசுத்த ஆவியினால் முத்தரிக்கப்படுகின்றீர்கள். 122ஆனால் சிலர்... இதை பெற்றுக் கொண்டதாகக் கூறுகின்றனர். ஏனெனில் அவர்கள் தவறாகப் போதிக்கப்பட்டுள்ளனர். மெதோடிஸ்டுகள் ஒரு வகை வினோத உணர்ச்சி கொண்டு, சற்று அசைந்து, ஆவியில் நடனமாடுவது வழக்கம். பெந்தெகொஸ்தேயினர் அன்னிய பாஷை பேசுகின்றனர். அல்லது உணர்ச்சி வசப்பட்டு ஏதோ ஒன்றைச் செய்கின்றனர். இவைகளை நான் நம்புகிறேன். நிச்சயமாக. ஆனால் மற்றவைகளைப் பெறாமல் இவைகளினால் யாதொரு பயனுமில்லை. அன்று நான் கூறினது போல், அது மயிலைப் போன்றது... அல்லது ஒரு காகம் மயிலின் இறகுகளை அணிந்து கொள்ளுதல், அல்லது ஒரு பருந்து புறாவின் சிறகுகளை அணிந்து கொள்ளுதல் பேன்றது. அவை அங்கு வளரவில்லை, இவை அவைகளை அணிந்து கொள்கின்றன. அவை அங்கே நடப்படுகின்றன. அவை ஸ்தாபனங்கள். ஆனால் தேவன் ஒன்றை அங்கு முளைக்கச் செய்யும் போது, அது இயற்கையாகவே அங்குள்ளது. நீங்கள், “நேற்றிரவு நான் ஒரு சபையை சேர்ந்து கொண்டேன். எனவே இனிமேல் நான் அங்கு செல்ல முடியாது, இனி மது அருந்த முடியாது, இதை நான் செய்ய முடியாது, நான் சபையில் சேர்ந்துவிட்டேன்'' என்று கூறுகின்றீர்கள். பாருங்கள், அப்படியானால் ஒரு பருந்தின் பிணத்திற்கு நீங்கள் மயிலின் இறகுகளை அணிவிக்க முயல்கிறீர்கள். அது உண்மை. பாருங்கள்? பாருங்கள்? நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்! நீங்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் வார்த்தையை ஏற்றுக் கொள்ளாமல் இயேசுவை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் அவர் வார்த்தையாயிருக்கிறார். நீங்கள் தேவபக்தியின் வேஷத்தை தரித்துக் கொண்டு அதை மறுதலித்தால், எனக்கு வியப்பு தோன்றுகிறது. பாருங்கள்? நீங்கள் வேண்டுமானால், உங்களுக்கு விருப்பமான எந்த ஸ்தாபனத்திலும் சேர்ந்து கொண்டு, தேவபக்தியின் வேஷத்தைத் தரித்துக் கொண்டு, இதை பெற்றுக் கொள்ளாமலே இருக்கலாம். 123நண்பர்களே, அது தான், முழு காரியமும் அதுவே. கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வாராக. நான் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக இவைகளைக் கூறவில்லை. நான் என்னை விளங்கச் செய்கிறேன். இன்று இராணுவ ஒப்பந்த நாள் (armistice day). நான் போதகர்களுடன் சமாதான உடன்படிக்கையில் கையொப்பமிடப் போவதில்லை. இல்லவே இல்லை. நீங்கள் தான் என்னிடம் வந்து கையொப்பமிட வேண்டுமென்று நினைக்கிறேன். என்னுடன் இல்லை, வார்த்தையாகிய தேவனுடன். அது உண்மை. அது உண்மை. வேதம் என்ன கூறுகிறதோ, அதையே கூறுங்கள். அது கூறும் விதமாகவே கூறுங்கள். ஏனெனில், ''ஒருவன் அதிலிருந்து எதையாகிலும் எடுத்துப் போட்டால் அல்லது எதையாகிலும் கூட்டினால்'' என்று வேதம் கூறுகின்றது. பாருங்கள், ஸ்தாபனம் வேத ஆதாரமில்லாதது. நீங்கள் முதல் கோட்பாட்டை ஏற்றுக் கொள்வீர்களானால், அதை காட்டிலும் நீங்கள் முழுவதுமாக பின் சென்றுவிடலாம். ஏனெனில், அப்பொழுதே நீங்கள் கோட்டை தாண்டிவிடுகிறீர்கள். நீங்கள் மறுபிறப்பை அடைவீர்களானால், வேதத்தின்படி நடப்பீர்கள். 124நீங்கள் ஸ்தாபனத்திற்குள் பிரவேசித்தால், அவர்கள் “நாங்கள் இதை விசுவாசிப்பதில்லையென்று உங்களுக்குத் தெரியும். எங்கள் சபை பேராயர்கள்; எங்கள் சபை மிகவும் பழைமையான சபைகளில் ஒன்று என்று கூறப்படுகின்றது. இவைகளை நாங்கள் போதிப்பதில்லை'' என்கின்றனர். அவர்கள் எதைப் போதிப்பதில்லை என்பதைக் குறித்து எனக்குக் கவலையில்லை. வேதம் அதை போதிக்குமானால், உங்களிலிருக்கும் பரிசுத்த ஆவி உங்களை வார்த்தையினால் போஷிப்பார். ஒரு மனிதன் எவ்வளவேனும் சாமர்த்தியமுள்ளவனாயிருந்து, அது அவ்வாறில்லை... என்று விளக்க முயன்றாலும் பரவாயில்லை. அவர்கள் அவ்வாறு விளக்கக் கூடும். ஒரு நாத்திகன் வேதாகமத்தை எடுத்துக் கொண்டு, தேவன் இல்லை என்று உங்களிடம் விளக்க முடியும். எனவே, மோசே அந்த புனித மண்ணில் தேவனுடன் தனித்திருந்த அனுபவத்தைப் பெற்றது போல், ஒரு மனிதன் மறுபடியும் பிறந்து, தேவனுடன் முகமுகமாய் நின்று அறிந்து கொள்ளும் அனுபவத்தைப் பெற்றிருந்தாலொழிய, எந்த மனிதனுக்கும் கவிசேஷத்தைப் பிரசங்கிக்க உரிமையில்லை. அப்பொழுது எந்த நாத்திகனோ. மனோதத்துவமோ, உலகிலுள்ள எந்த வேத பாண்டிதனோ அதை உங்களிடமிருந்து எடுத்துப் போட முடியாது. அது நிகழ்ந்த போது, நீங்கள் அங்கிருந்தீர்கள்! ஆம், ஐயா. என்ன நிகழ்ந்ததென்று உங்களுக்குத் தெரியும். நீங்கள், ''எனக்கு ஒரு வகையான அனுபவம் உண்டானது. ஒரு ஆவி என் மேல் தங்கியுள்ளது'' எனலாம். ஆனால் அது வார்த்தையை எந்த விதத்திலாவது மறுதலிக்குமானால், நீ தவறான ஆவியைப் பெற்றுள்ளாய். ''இப்படிப்பட்ட காரியங்களில் நான் ஈடுபட முடியாது. எனக்குத் தெரியும். ஆனால் என் சபையோ...'' எனலாம். உ, ஊ. அது தவறான ஆவி. அதுதான் நீ யாரென்பதைக் காண்பிக்கும் அடையாளம். காயீனே, நீ அடையாளம் போடப்பட்டுவிட்டாய். ஆம், ஐயா. ஏவாள் ஒரு சிறு வார்த்தையை மாத்திரம் சந்தேகித்தாள்; தேவன் கூறிய எல்லாவற்றையும் அல்ல. ஒரு சிறு வார்த்தையை மாத்திரம். அது எல்லா மன வேதனைகளையும், மரணத்தையும், பாவத்தையம், யுத்தங்களையும், மற்றெல்லாவற்றையும், எல்லா கல்லறைகளையும், ஊளையிட்டுக் கொண்டு செல்லும் நோயாளி பேரூந்துகளையும், நோயாளிகளுக்காக கட்டப்பட்டுள்ள எல்லா மருத்துவமனைகளையும் பிறப்பித்தது, அவள் தேவனுடைய ஒரே சிறு வார்த்தையை சந்தேகித்தது இவையனைத்தும் தோன்றக் காரணமாயிருந்தது. இவையாவும் நேரிட்டிருக்க வேண்டிய அவசியமேயில்லை. அவள் வெளியே தள்ளப்பட்டாள். அப்படியிருக்க, நீங்கள் ஒரு வார்த்தையை சந்தேகிப்பீர்களானால், எவ்வாறு உள்ளே நுழைய முடியும்? “அது அப்படி உரைக்கிறது என்று எனக்குத் தெரியும். ஆனால்...'' என்று நீங்கள் கூறலாம். அது என்ன உரைக்கிறதோ, அது தான் அதன் அர்த்தம். 125இப்பொழுது கவனியுங்கள். தேவன் ஏதாவதொன்றைக் கொண்டு உலகத்தை நியாயந்தீர்க்க வேண்டும். சட்டம் ஒன்றில்லாமல் நீங்கள் நியாயத்தீர்ப்பு செய்ய முடியாது. நீங்கள் நியாயந்தீர்க்கப்பட வேண்டுமானால், ஏதாவதொன்றை மீற வேண்டும். பாருங்கள்? அப்பொழுது தண்டனை இல்லாமல், சரியான நியாயத்தீர்ப்பு இருக்க முடியாது. ''சிகப்பு விளக்கைக் கடந்து சென்றால் ஐந்து டாலர் அபராதம்'' என்னும் சட்டம், நாட்டில் இருந்து, அதே சமயத்தில், '' ''அப்படி செய்தால் அவன் விடுதலையாகலாம்'' என்று இருக்க முடியாது. பாருங்கள், நீங்கள் அப்படி செய்ய முடியாது. எனவே ஒரே நேரத்தில் இரு முரண்பாடான சட்டங்கள் இருக்க முடியாது. ஒரே பிரமாணம், ஒரே தேவன், ஒரே புத்தகம், ஒரே கிறிஸ்து. அவ்வளவு தான். ஒரே விசுவாசம், ஒரே நம்பிக்கை. அவ்வளவு தான். அது தான் வேதம், கிறிஸ்து. இப்பொழுது கவனியுங்கள். இதில் ஏதாகிலும் கூட்டப்பட வேண்டுமானால், அது மனிதனால் மாத்திரமே கூட்டப்பட முடியும். அது மனிதனேயன்றி... 126கத்தோலிக்கர் கூறுவது போல் தேவன் உலகத்தை ஒரு சபையைக் கொண்டு நியாயந்தீர்ப்பாரானால், எந்த கத்தோலிக்க சபையைக் கொண்டு அவர் நியாயந்தீர்க்கப் போகிறார்? அநேக கத்தோலிக்க சபைகள் உள்ளனவே! ஒன்று ரோமன், மற்றொன்று கிரேக்கு. ஓ, பல்வேறு சபைகள். அப்படியானால், எந்த கத்தோலிக்க சபையைக் கொண்டு அவர் நியாயந்தீர்க்கப் போகிறார்? அல்லது, ஒருக்கால் லூத்தரன் சபையைக் கொண்டு அவர் நியாயந்தீர்ப்பாரா? அல்லது, பிரஸ்பிடேரியன் சபையைக் கொண்டு அவர் நியாயந்தீர்ப்பாரா? பாருங்கள்? அவர் என்ன செய்ய போகிறார்? அவர் சபையைக் கொண்டு நியாயந்தீர்க்கப் போவதில்லை. அவர் தமது வார்த்தையைக் கொண்டு நியாயந்தீர்க்கப் போகிறார். சரி, அப்படியானால், அவர் ஒரு போதும்... பாருங்கள், அவர் ஒரு கூட்டம் ஜனங்களை வைத்துக் கொள்ள முடியாது, அன்றிரவு ... அந்த சகோதரியின் தரிசனத்தைப் போன்று, பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டது, அது பெட்டியின் வழியாக ஒழுகிவிட்டது. நிச்சயமாக. அதை எதுவும் பிடித்து வைக்க முடியாது. அது தனிப்பட்ட நபர். சபையை சுத்திகரிப்பதற்கென அது அருளப்பட்டது. ஆனால் அது அதை பிடித்து வைக்க முடியாது. எந்த ஒரு ஸ்தாபனமும் அதை பிடித்து வைக்க முடியாது. அவ்வளவு தான். அதனால் முடியாது. அங்கு நீங்கள் எல்லாவற்றையும் பெற்றிருக்கின்றீர்கள், ஆனால் உங்களால் செய்ய முடியாது. ஸ்தாபனம் அப்படி செய்ய முடியாது. ஆனால் தனிப்பட்ட நபர் மாத்திரமே பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்கிறார். இப்பொழுது கவனியுங்கள். 127தேவன் உலகத்தை தமது வார்த்தையினால் நியாயந்தீர்ப்பாரானால், அவர் அதை சரியானபடி கவனித்து, அதை நல்ல நிலையில் நிச்சயமாக வைத்திருக்க வேண்டும். அது தாறுமாறான நிலையில் இருக்குமானால், அவர் எப்படி நியாயந்தீர்ப்பைக் கொண்டு வர முடியும்? அது சரியான நிலையில் அமைந்திருக்க வேண்டும். அவர், “இந்த சபையின் மூலம் யாராகிலும்'' என்று கூறவில்லை. அவர், ”ஒருவன் இதிலிருந்து ஒரு வார்த்தையை எடுத்துப் போட்டால், அல்லது இதனுடன் ஒரு வார்த்தையை கூட்டினால், தேவன் அவனுடைய பங்கை ஜீவ புஸ்தகத்திலிருந்து எடுத்துப் போடுவார்'' என்று கூறியுள்ளார். எனவே, என்னைப் பொறுத்த வரையில் அது தேவன், அவருடைய வார்த்தை, நியாயத்தீர்ப்பு. நான் நிதானித்து தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொண்டு, கிறிஸ்து எனக்காக மரித்தார் என்பதை அறிந்து கொண்டால், அவருடைய ஜீவன் எனக்குள் வந்து என்னை வழி நடத்த வேண்டுமென்று நான் வேண்டிக் கொள்வேன். அவருடைய ஜீவன் வார்த்தையாயிருந்து, அவர் வார்த்தையை எழுதி வைத்திருப்பாரானால், அவருடைய ஜீவன் எனக்குள் இருந்து, நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளதாக உரிமை பாராட்டி, அதே சமயத்தில் எப்படி வார்த்தைக்குப் பதிலாக ஒரு கோட்பாட்டை சேர்த்துக் கொள்ள முடியும்? அது ஒருக்காலும் முடியாது. அவர் ஸ்தாபனத்துக்கு விரோதமாயுள்ளார் என்பதை சரித்திரத்தின் வாயிலாக அவர் நிருபித்து, ஒவ்வொரு முறையும் அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்ட போது, அவர்கள் ஆவிக்குரிய பிரகாரம் மரித்துவிடுகின்றனர் என்பதை காண்பித்த பிறகும், நான் எப்படி ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொள்ள முடியும்? ஓ, ஸ்தாபனத்தில் அங்கத்தினர் அதிகமாகிக் கொண்டே வருகின்றனர். நிச்சயமாக. அது உண்மை. அங்கத்தினர் அதிகமாகிக் கொண்டே வருகின்றனர் என்பது உண்மையே. ஆனால் அவர்கள் ஆவிக்குரிய விதமாக எந்த நிலையையும் அடையவில்லையே! சரித்திரத்திலிருந்து எனக்குக் காண்பியுங்கள்! ஏதாவது ஒரு சபை இப்படியாக... அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்ட பின்பு, அது அங்கேயே மரித்துவிட்டது. பரிசுத்த ஆவி அதை விட்டு போய்விட்டார். அதன் பின்பு அதில் அற்புதங்களும் அடையாளங்களும் காணப்படவில்லை. அது குழப்பத்தில் ஆழ்ந்தது. 128நமது பெந்தெகொஸ்தே சபைகளுக்கும் அது தான் நேர்ந்தது. அவர்களுடைய தாய் என்ன செய்தாளோ. அதையே தான் அவர்களும் செய்தனர். தொடக்கத்தில் அவர்கள் வெளியே வந்தனர், ஸ்தாபனங்களைப் புறக்கணித்த ஜனங்களாக. ஆனால் இப்பொழுதோ; இந்த ஒலிநாடாவைக் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களில் சிலர், வயதுசென்ற சிலர், நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு யாராகிலும் உங்களிடம் ஒரு ஸ்தாபனத்தைக் குறித்து பேசினால், அது தேவ தூஷணமாகக் கருதப்பட்டது என்பதை அறிவீர்கள். தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டும், முகத்தில் வர்ணம் தீட்டிக் கொண்டிருக்கும் பெண்களே, உங்கள் தாய், அந்த பழைய பெந்தெகொஸ்தே பரிசுத்தவாட்டி, அப்படிப்பட்ட செயல்களுக்கு விரோதமாயிருந்தார்கள். ஆனால் உங்களுக்கு என்ன நேர்ந்தது? “நீங்கள் நன்றாய் ஓடினீர்களே, உங்களைத் தடை, செய்தது யார்?'' என்று பவுல் கேட்டான். பாருங்கள்? முன்பு நீங்கள் இத்தகைய செயல்களைப் புரிவதில்லை. இப்பொழுதோ நீங்கள் உலகத்தாரான மற்றவரைப் போல் இருக்க விரும்புகிறீர்கள். 129சாமுவேல் கூறின விதமாக. இஸ்ரவேலருக்கு ஒரு ராஜா இருந்தார் . அவர் தான் கர்த்தர். அவர்கள் “சாமுவேலே, உமக்கு வயதாகின்றது. எங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தும். நாங்கள் உலகத்தாரான மற்றவரைப் போல் இருக்க விரும்புகிறோம். மற்ற தேசங்களைப் போல் நாங்களும் இருக்க விரும்புகிறோம். எங்களை யுத்தத்தில் நடத்திச் செல்ல ஒரு ராஜா எங்களுக்குத் தேவை. எங்கள் யுத்தங்களில் போர் புரிய எங்களுக்கு ஒரு ராஜா தேவை'' என்றனர். அது சாமுவேலுக்கு அதிருப்தியை விளைவித்தது. அவன், “நான் உங்களிடமிருந்து ஏதாவது வாங்கினதுண்டா? உங்கள் பணத்தை நான் அபகரித்ததுண்டா? ஒரு காளையையோ அல்லது வேறெதாவதையோ உங்களிடம் நான் கேட்டதுண்டா?'' என்று கேட்டான். அவர்கள், “இல்லை, நீர் எங்களிடம் எதையும் கேட்டதில்லை'' என்றனர். அவன் தொடர்ந்து, ''இதுவரை நான் கர்த்தரின் நாமத்தினால் உரைத்த ஏதாகிலும் நிறைவேறாமல் போனதுண்டா?'' என்று கேட்டான். அது சரியா? அவன், “ அப்படியானால், நீங்கள் ராஜா வேண்டுமென்று கேட்க வேண்டாம். ஏனெனில் அது உங்களுக்கு குழப்பம் விளைவிக்கும்'' என்றான். 130பிரான்ஹாம் கூடாரமே, உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். நீங்கள் ஒரு பெரிய கூடாரமாக வளர ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறீர்கள். நான் சிறிது காலம் வெளியே செல்லலாம். நான் எங்காகிலும் செல்லலாம், தேவன் என்னை எங்கு அழைக்கின்றார் என்று என்னால் கூறுவது கடினம். ஒருக்கால் காட்சியை விட்டே என்னைக் கொண்டு சென்றுவிடலாம், அல்லது சுவிசேஷ பணிக்காக என்னைக் கொண்டு சென்றுவிடலாம். அல்லது வனாந்தரத்துக்கு என்னை அழைக்கலாம். இயேசு வரும் வரைக்கும், அவர் என்னை எங்கு அழைப்பாரென்று எனக்குத் தெரியாது. உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். உங்களை நான் ஏதாகிலும் கேட்டதுண்டா! (சபையோர் “இல்லை'' என்கின்றனர் - ஆசி). உங்களிடம் நான் பணத்திற்காக யாசித்ததுண்டா? (சபையோர் 'இல்லை' என்கின்றனர் - ஆசி.) உங்களிடம் நான் கர்த்தரின் நாமத்தினால் உரைத்த ஆயிரக்கணக்கானவைகளில் எல்லாம் நிறைவேறினதல்லவா? (சபையோர் 'ஆமென்' என்கின்றனர் - ஆசி) அப்படியானால், எந்த ஸ்தாபனத்திலும் சேராதீர்கள். அது தேவனுடைய வார்த்தைக்கு விரோதமானது. நீங்கள் அதில் இருக்க நேரிட்டால், அதை விட்டு பிரிந்து வெளியே வந்து, கர்த்தருடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ளுங்கள். இப்பொழுது நாம் தலைவணங்குவோம். 131தீர்க்கதரிசிகளின் மகத்தான தேவனே, ஆபிரகாமின், ஈசாக்கின், இஸ்ரவேலின் தேவனே, என் இருதயத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த இந்த சிறிய துண்டிக்கப்பட்ட செய்தியுடன் உமது நற்பண்பைக் கூட்டி, அது என் சகோதரருக்குச் செல்ல அருள் புரிவீராக. ஆண்டவரே, வெளியிலுள்ள அநேகர் என் மீது தவறான அபிப்பிராயம் கொண்டுள்ளனர். நான் வித்தியாசமாக இருக்க விரும்புகிறேன் என்று அவர்கள் எண்ணுகின்றனர். எனக்கு எல்லாம் தெரியும் என்று காண்பிக்க முயல்கின்றேன் என்று அவர்கள் நினைக்கின்றனர். நான் ஜனங்களை ஏமாற்றுகிறேன் என்று முக்கியமாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கொடுக்கப்படும் தண்ணீர் ஞானஸ்நானம், சர்ப்பத்தின் வித்து, மகா வேசி போன்ற விஷயங்களில் ஏமாற்றுகிறேன் என்று அவர்கள் ஜனங்களிடம் கூறியுள்ளனர். இவையாவும் கலப்படமற்ற சத்தியமாக வெளியே சென்றுள்ளன. நான் அவர்கள் சிலரிடம், ''உங்களில் சிலர் என்னிடம் வந்து, நான் எங்கு பாவம் செய்கிறேன் என்றோ அல்லது எங்கு அவிசுவாசம் கொள்கிறேன் அல்லது வார்த்தையை தவறாக வியாக்கியானம் செய்கிறேன் என்றோ காண்பியுங்கள்'' என்று கேட்டிருக்கிறேன். ஆனால் யாருமே முன் வரவில்லை. பிதாவே, இவர்கள் நேரத்தை இழந்துவிடுகின்றனர் என்பதை அறிந்து கொள்வார்களாக! அவர்கள் விழித்திராவிடில், காலதாமதாகி, காத்திருக்கப் போகின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும்... 132ஆண்டவரே, இதை குறித்து நான் மிகவும் உறுதியுள்ளவனாயிருக்கிறேன். வேதம் எனக்குத் தத்ரூபமாக இல்லாமலிருந்தால், என் இருதயம் உடைந்துவிடும். நீர், ''என் பிதா எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும். என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவி கொடுக்கின்றது'' என்று கூறியுள்ளீர். அப்படியானால் ஆண்டவரே, நீர் கூறினது போன்று, ராஜ்யமானது ஒரு மனிதன் தன் வலையை ஏரியில் வீசி, அதில் எல்லா ரகங்களையும் இழுப்பதற்கு ஒப்பாயுள்ளது. அதில் தோட்டி மீனும், ஆமைகளும், நீர் சிலந்திகளும், பாம்புகளும் இருந்தன. இவையனைத்தையும் சுவிசேஷ வலை பிடித்தது. ஆனால் முடிவில் இறால் மீன் தண்ணீருக்குள் மறுபடியும் சென்றுவிட்டது. ஆமை பின் வாங்கினது. பாம்பு 'ஹிஸ்' என்று சீறி புற்றுக்குள் சென்றுவிட்டது. நாய் தான் கக்கினதை தின்னவும், பன்றி சேற்றில் புரளவும் சென்றுவிட்டது போல். ஆனால் ஆண்டவரே, உண்மையான மீனும் அதில் அகப்பட்டிருந்தது. அந்த வலை அவைகள் மேல் விரிக்கப்படுவதற்கு முன்பாகவே அவை மீன்களாயிருந்தன என்று அறிந்திருப்பதில் எனக்கு மிகுந்த ஆறுதல். அவை முன்குறிக்கப்பட்ட மீன்களாக பிறந்திருந்தன. எழுப்புதல் கூட்டங்களில் சுவிசேஷ வலையில் அகப்படுபவைகளும் அவ்வாறேயுள்ளன. உமக்கு சொந்தமானவர்களை நீர் அறிந்திருக்கிறீர். பிதாவே, எனக்குத் தெரிந்த வரையில். இந்த வார்த்தைக்கு உண்மையாயிருப்பவர்களுக்கு மாத்திரமே நான் உத்திரவாதமுள்ளவனாயிருக்கிறேன். எது, எது என்பதை தீர்மானம் செய்பவர் நீரே. ஒரு ஆமை ஆற்று மீனாக (trout) ஆக முடியாதது போல், சுவிசேஷத்தை கேளாதபடிக்கு செவிடாயுள்ளவன் சத்தியத்தைப் புரிந்து கொள்ள முடியாது. பிதா இதை முன்பே கண்டார். அவர் கொடுக்கிற யாவும் வரும் என்று நீர் வாக்கருளியுள்ளீர். 133பரலோகப்பிதாவே, இச்சிறு செய்தியைக் கேட்கும் ஒவ்வொருவரும், அது எந்த அர்த்தத்தில் பிரசங்கிக்கப்பட்டதோ, என் சகாக்களுக்காக என் இருதயத்தில் நான் கொண்டுள்ள அக்கறையை அவர்கள் அறிந்து கொள்ளும்படி செய்யும். அவர்களுக்காக நீர் மரித்தீர். ஆண்டவரே, அவர்களில் சிலர், கோராவின் கூட்டத்தில் இருந்த சிலரைப் போன்று மிக உத்தமமானவர்கள். ஆனால் கையில் பரிசுத்த தூபகலசம் கொண்டவர்களாய், அவர்கள் தவறாக வழி நடத்தப்பட்டு அழிந்து போனது போல் இவர்களும் இருக்கின்றனர். அவர்களுடன் பரிசுத்த அக்கினி கலசம் செல்ல அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆரோனின் குமாரனாகிய எலியேசர் அதை ஒன்று கூட்ட வேண்டியதாயிருந்தது. அவர்கள் அந்த பாத்திரங்களிலிருந்து பலிபீடத்துக்கு ஒரு கொடியை (banner) கேடயமாக உண்டு பண்ணி, அந்த பயங்கரமான சம்பவத்துக்கு ஞாபகாரத்தமாக - அதாவது கோரா தேவனுடைய செய்தியாளனுக்கு விரோதமாக ஒரு கூட்டம் ஜனங்களை ஸ்தாபிக்க முயன்றான் என்பதன் அறிகுறியாக, அதை வைத்தனர். ஆண்டவரே, அது எங்களுக்கு தூரமாயிருப்பதாக. பரிசுத்த ஆவி எங்களை எப்பொழுதும் காப்பாராக! 134ஆண்டவரே, இச் சிறுசபைக்காக, இந்த புனித ஆலயத்துக்காக (shrine) நாங்கள் நன்றி செலுத்துகிறோம். அநேக ஆண்டுகளுக்கு முன்ப, ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, தண்ணீரும் புல் பூண்டுகளும் நிறைந்திருந்த இந்த குளத்தில் நான் முழங்கால்படியிட்டு, இந்த இடத்தை இந்த சிறு கட்டிடத்தை, உமக்குப் பிரதிஷ்டை செய்தோம். அந்த கூடாரத்தின் மூலையில் அந்த தரிசனம் இருக்கிறது. அது அப்படியே நிறைவேறினது. அது இன்னமும் அங்கேயே உள்ளது. ஆண்டவரே, அவர்கள் இடித்துப் போடப் போவதில்லை. அவர்கள் அதை... அது பழையதாகி வருகிறது. அதன் மேல் வேறொன்றைக் கட்டி அதை பாதுகாக்கப் போகின்றனர். இத்தாள்களில் எழுதப்பட்டுள்ள இந்த பொன்னான சுவிசேஷம் கிறிஸ்து வரும் வரைக்கும் இச்சிறு சபையை விட்டு அகலாதிருப்பதாக. அவர்கள் தேசத்தின் பல்வேறு பாகங்களிலிருந்தும், உலகத்தின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வருகின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒளியை, சுவிசேஷத்தை, பெற்றுக் கொண்டு, அதில் நடந்து, கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வார்களாக! அது மிகவும் தத்ரூபமாக அமைந்து, “நான் செய்யும் கிரியைகளை அவர்களும் செய்வார்கள். என் வார்த்தைகளைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு'' என்னும் அவருடைய வார்த்தைகள் நிறைவேறுவதாக! நித்திய ஜீவன் உள்ளே வரும்போது அவர்கள் பரத்திலிருந்து பிறக்கின்றனர். அப்பொழுது தேவனுடைய கிரியைகள் அவர்களில் வெளிப்படுகின்றன. ஏனெனில் அது அவருக்குள் இருந்த அதே ஜீவன். அது வேறொன்றையும் செய்ய முடியாது. 135எனவே, பிதாவே, சபையானது தான் அடைய வேண்டிய நித்திய ஸ்தலத்தை ஒரு உணர்ச்சியின் பேரிலோ, ஒரு ஸ்தாபனத்தின் பேரிலோ ஆதாரப்படுத்திக் கொள்ள வேண்டாம். கிறிஸ்து தங்களுக்குள் வாழ்ந்து, அவர்கள் மூலம் தமது வார்த்தையையும் வாக்குத்தத்தத்தையும் உறுதிப்படுத்துவதை தவிர வேறொன்றும் அவர்களுக்கு ஆதாரமாயிருக்க வேண்டாம். இன்றிரவு இங்குள்ள சிறு குழந்தை முதல், மிகவும் வயதான வயோதிபர் வரைக்கும் இந்த அனுபவத்தைப் பெறட்டும். ஆண்டவரே, இந்த ஒலிநாடவைக் கேட்கும் ஒவ்வொரு மனிதனுக்கும், ஸ்திரீக்கும், பையனுக்கும் பெண்ணுக்கும் அப்படியே ஆகட்டும். அவர்களை நான் எச்சரித்து வெளியே அழைக்க முயல்கிறேன். ஏனெனில் நாம் நினைப்பதைக் காட்டிலும் காலதாமதமாகிவிட்டது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளச் செய்யும். தாய் வேசியாகிய பாபிலோனும், அவளுடைய வேசி குமாரத்திகளும் ஒன்று கூடுவதை நாங்கள் காண்கிறோம். தேவனே, கோதுமை வயலிலுள்ள களைகள் முதலாவதாக கட்டுகளாக கட்டப்பட வேண்டுமென்று வேதம் கூறுகிறது என்பதை உணருகிறோம். அவர்கள் தங்களை கட்டுகளாகக் கட்டிக் கொண்டு தூஷணமான நாமங்களால் தங்களை அழைத்துக் கொள்கின்றனர். அந்த நாமங்கள் அவர்களுக்குரிய தல்ல. அவை சபைக்கும் உரியதல்ல. அவையனைத்தும் விடுதிகளே, சபைகள் அல்ல. பிதாவே, சபை ஒன்று மாத்திரமேயுண்டு. அதற்காக நீர் மரித்தீர். 136பிதாவே, அவர்கள் எல்லோரும் வெகு விரைவில் அணு அக்கினிக்கு இரையாவதற்காக கட்டுகளாகக் கட்டப்படுவதை நாங்கள் காணும் போது, ஆண்டவரே, கோதுமை மணி முழுவதுமாக வளர்ந்து முதிர்வடையட்டும். பிதாவே, இதை அருள்வீராக. நாங்கள் வளர்ந்து ஒளியைப் பிரகாசிக்கச் செய்து, இயேசுவைப் போல் இருக்கச் செய்யும். “நான் செய்ய வேண்டுமென்று தேவன் நியமித்திருக்கிற காரியங்களை நான் செய்யாமலிருந்தால், எனக்குள் ஜீவன் இல்லை. ஆனால் தேவன் பேசி, தமது ஜீவனை வெளிப்படுத்துவாரானால், அது தன்னில் தானே சாட்சி பகருகின்றதாயுள்ளது'' ஆண்டவரே, அதை அருள்வீராக. செய்தியை உம்மிடம் சமர்ப்பிக்கிறேன் அதை நீர் கவனமாகப் பாதுகாத்து, பல்லாயிரக்கணக்கான மக்களை அல்லது முன், குறிக்கப்பட்ட உமது பிள்ளைகளை சுவிசேஷத்திற்கு கொண்டு வருவீராக. வார்த்தையாகிய இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறேன். ஆமென். 137நேசிக்கிறேன், நேசிக்கிறேன் முன்பு அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில். இந்தக் கேள்வியை கேட்கப் போகின்றேன். இந்தக் கூட்டத்திலுள்ளவர்கள், பெரிய சபை அல்லது தேவனுடைய வீட்டில் ஆராதிக்கும் ஸ்தலத்திலுள்ளவர்கள், எத்தனை பேர், உங்கள் வாழ்க்கை தேவனும் வேதமும் பின்பற்றக் கூறுபவைகளுக்கு ஒத்ததாக அமைந்துள்ளது என்றும், உங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்து, உங்களில் ஆவியானவர் அசைவாடும் விதத்தைக் காணும்போது, எழுதப்பட்ட விதமாகவே ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் விசுவாசித்து அதை பின்பற்றுகிறீர்கள் என்று உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கின்றீர்கள்? கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக! அவர் எப்பொழுதும் தமது ஆவியை உங்கள் மேல் வைத்திருப்பாராக! இந்த ஒலிநாடாவைக் கேட்கவிருக்கும் என் நண்பனே, இக்கூட்டத்தில் கையுயர்த்தினவர்களை நீங்கள் நேரடியாக கண்டிருந்தால் நலமாயிருக்கும்! குறைந்த பட்சம் இங்குள்ளவர்களில் தொண்ணூறு சதவிகிதம், தாங்கள் வேதத்தை விசுவாசித்து (சபை கூறுவதை அல்ல), அதை கவனமாகப் பாதுகாத்து, வேதம் கூறுவதை விசுவாசித்து (விடுதி கூறுவதை அல்ல), கிறிஸ்துவின் ஜீவன் அதில் பிரதிபலிக்கிறதை அவர்கள் காண்கின்றனர் என்பதன் அறிகுறியாக தங்கள் கைகளையுயர்த்தினர். 138உங்களுக்குத் தெரியும், உருக்கு கருவி (smelters) வருவதற்கு முன்பு, முன்காலத்தில், தட்டான் பொன்னை சுத்தியலால் அடிப்பது வழக்கம். அதைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதை உருக்கும் முன்பு, அவர்கள் அதை அடிப்பார்கள். பொன் மிகவும் கனமுள்ள உலோகம். அது ஈயத்தைக் காட்டிலும் கனமானது. நான் பொன் கண்டு பிடிக்கச் சென்றிருக்கிறேன். அந்த மணலை காடுகளில் எடுத்து, இரு கைகளிலும் தேய்த்து, இப்படி ஊதினால் (ஊஷ்), பாறை தூசு அனைத்தும் பறந்து பொன் கனமானதால், அது கையில் தங்கிவிடும். அந்த பொன்னை நீங்கள் எடுக்கும் போது அது உருண்டு அங்கு அடைந்துள்ளதால், அதனுடன் அதிகமான களிம்பு (dross) கலந்திருக்கும். அது எரிமலை காலங்களின் வழியாக வந்து ஒன்று சேர்ந்திருப்பதால், அதனுடன் 'களிம்பு, 'இரும்பு பைரைட்' (Iron pyrite) அது காண்பதற்கு பொன்னைப் போலவே இருக்கும். (அதற்கு 'முட்டாளின் பொன்' என்று ஆங்கிலத்தில் வேறொரு பெயரும் உண்டு - தமிழாக்கியோன்) போன்ற அழுக்கு (sludge) கலந்திருக்கும். அடிப்பவன் இந்த பொன்னை எடுத்து அடித்து திருப்பிப் போட்டு அடித்து, இவ்விதம் களிம்பு எல்லாம் போகும் வரைக்கும் அடிப்பான். களிம்பு அனைத்தும் போய்விட்டதென்று அவனுக்கு எப்படித் தெரியும்? அவனுடைய உருவம் அதில் பிரதிபலிப்பதை அவன் காண்பான். 139அதைதான் தேவனும் சபைக்குச் செய்கின்றார். அவர் ஒவ்வொரு ஸ்தாபன பிரமாணத்தையும், ஒவ்வொரு ஸ்தாபனத்தையும், மனிதனால் உண்டாக்கப்பட்ட ஒவ்வொரு கோட்பாட்டையும் அடித்து பிரித்து, அவருடைய சொந்த ஜீவன் உன்னில் பிரதிபலிக்கும் வரைக்கும் அவ்வாறு அடிக்கின்றார். ''என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை'' (யோவான். 10:37). பாருங்கள்? சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளதில், கிறிஸ்துவின் ஜீவன் உன்னில் பிரதிபலிக்காவிடில் உனக்கு பொறுமை, நற்பண்பு இவைகளெல்லாம், இச்சையடக்கம் (temperance), தேவபக்தி, சகோதர சிநேகம் போன்ற உன்னிலிருந்து எதிர்பார்க்கப்படும் காரியங்கள் உனக்கு இராவிட்டால், நீ அமைதியாக இருக்க வேண்டாம். நீ என்ன செய்திருந்த போதிலும், நீ எவ்வளவு கூச்சலிட்டிருந்தாலும், நீ எத்தனை சபைகளைச் சேர்ந்திருந்தாலும், எவ்வளவு மகத்தான காரியங்களைச் செய்து புகழ் பெற்றிருந்தாலும் கவலையில்லை. உன் இருதயத்தில் நீ மற்றவர்களை உத்தமமாக மன்னித்து, உனக்கு சகோதர சிநேகம் உள்ள வரைக்கும் காத்திரு. அவர்கள் உன் தாடியை ஒரு பக்கம் பிய்த்து பிடுங்கியிருந்தாலும் பரவாயில்லை. நீ மற்ற கன்னத்தையும் இனிமையாக அவர்களுக்குத் திருப்பிக் காட்டு. இந்த நற்பண்புகள் அனைத்தும் உன்னில் காணப்படும் வரைக்கும், அவர்கள் என்ன கூறினாலும் பரவாயில்லை. 140இயேசுவின் முகத்தை அவர்கள் கந்தை துணியிட்டு மறைத்து, அவரை தலையில் அடித்து, “நீ தீர்க்கதரிசியாயிற்றே, உன்னை அடித்தது யார் என்று சொல்” என்றனர். முகத்தை மூடியிருந்த அந்த கந்தை துணியை அவர்கள் நீக்கிவிட்டனர். அவர்களில் ஒருவன் கோலைக் கையில் பிடித்திருந்தான், ''எங்களில் யார் உன்னை அடித்தது? தீர்க்கதரிசனம் உரைத்து எங்களிடம் சொல். அப்பொழுது நாங்கள் உன்னை விசுவாசிப்போம்'' என்றனர். அவர் வாயைத் திறக்கவேயில்லை. ஒரு தீர்க்கதரிசி எழும்பியுள்ளார் என்று நீங்கள் கேள்விப்படும் போது, பிரபலமாக வேண்டுமென்று நீங்கள் புரியும் எல்லா செயல்களுக்கும் (gimmicks) அது பதிலாக அமைகின்றது. அவர் ஒரு தீர்க்கதரிசி என்பதை நினைவு கூருங்கள். இன்றைக்கு அவர்கள் எல்லாம் அறிய வேண்டும். அவர்களுக்கு எப்பொழுது பல் வலி வருமென்றும், எப்பொழுது வயிற்று வலி வருமென்றும் அவர்களிடம் முன்னுரைக்க வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அது நம் தேவனுடைய இயல்பல்ல. தீர்க்கதரிசிகளைக் கவனியுங்கள், இயேசுவைக் கவனியுங்கள். 141பவுலைப் பாருங்கள். ஒரு மனிதனைக் குருடாக்க அவனால் முடிந்தது. ஒரு சாதாரண தட்டான் அவனை நாட்டை விட்டுத் துரத்துகிறான். “குருடாக்கும் வல்லமை அவனை விட்டுப் போய்விட்டது'' என்று அவர்கள் எண்ணியிருப்பார்கள். மரித்தோரை உயிரோடெழுப்பும் வல்லமை இயேசுவுக்கு இருந்தது. ஆயினும் குடிகார போர் சேவகன் ஒருவன் அவர் முகத்தில் துப்பி, அவருடைய தாடியைப் பிடித்து இழுத்து, அவருடைய முகத்தை கந்தை துணியால் மறைத்து, அவருடைய தலையில் அடித்து, ''உன்னை அடித்தது யார் என்று தீர்க்கதரிசனம் சொல்'' என்றான். அவரோ வாயைத் திறக்கவேயில்லை. பிரபலமாக வேண்டுமென்று இத்தகைய செயல் புரிவோர் மீது கவனம் செலுத்த வேண்டாம். ஒரு கள்ள டாலர் நோட்டு, உண்மையான டாலர் நோட்டு ஒன்றுள்ளது என்பதைக் காண்பிக்கிறது என்று நினைவில் கொள்ளுங்கள். இந்த ஸ்தாபனங்கள் வளர்ந்து செழிப்படைவதை நீங்கள் காணும் போது; “அவன் தன் உபாயத்தினால் வஞ்சகத்தை கை கூடி வரப் பண்ணி'' (ஆங்கிலத்தில், ''அவன் தன் உபாயத்தினால் வஞ்சகத்தை செழித்தோங்கப் பண்ணுவான்'' என்னும் அர்த்தத்தில் எழுதப்பட்டுள்ளது - தானி. 8:25 - தமிழாக்கியோன்) என்று கூறப்பட்டுள்ள விதமாக; எங்கோ ஓரிடத்தில் பரிசுத்த ஆவியினால் நிறைந்த, உத்தமமான தேவனுடைய சிறு சபையானது, ஏணிப் படிகளின் மேலேறி முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளவும். பெரிய ஸ்தாபனங்களைக் பார்க்க வேண்டாம். 142எபேசு சபையைக் காட்டிலும் பெரிய சபை வேதத்தில் எங்கு கூறப்பட்டுள்ளது? பவுல் மேடான தேசங்களின் வழியாக கடந்து இந்த சபைக்கு வந்த போது, அதில் பன்னிரண்டு பேர் மாத்திரமேயிருந்தனர். அது உண்மை. அவர்கள் எல்லோரும் நல்லவர்கள். அவர்கள் சத்தமிட்டு, நல்ல தருணத்தைப் பெற்றிருந்தனர். ஆயினும் அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கவில்லை. பவுல். ''நீங்கள் விசுவாசிகளான பிறகு பரிசுத்த ஆவியைப் பெறவில்லையா?'' என்று கேட்டான். அவர்கள், ''பரிசுத்த ஆவி உண்டென்று நாங்கள் கேள்விப்படவேயில்லையே'' என்றனர். அவன், “அப்படியானால் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?'' என்றான். அது வித்தியாசத்தை உண்டு பண்ணாமலிருந்தால், அந்த சபையை ஏன் அவ்விதம் கேட்டான்? அவர்கள், “இவ்வுலகில் தோன்றிய மிகப் பெரிய மனிதர்களுள் ஒருவரான யோவான் ஸ்நானனால் நாங்கள் ஏற்கனவே ஞானஸ்நானம் பெற்றுவிட்டோம். அந்த ஞானஸ்நானம் போதாதா என்ன?'' என்றனர். அவன், ''போதாது, ஐயா, நீங்கள் மறுபடியும் ஞானஸ்நானம் பெற வேண்டும். ஏனெனில் ராஜ்யமானது மற்ற அனைத்திற்கும் முத்திரையிடப்பட்டுள்ளது'' என்றான். அவர்கள் இதைக் கேட்ட போது... பவுல் அவர்களிடம், “யோவான் உங்களுக்கு மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்து, வரப் போகிற இயேசுவை நீங்கள் விசுவாசிக்க வேண்டுமென்று கூறினான். அவன் பாவ மன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் கொடுக்கவில்லை'' என்றான். அவர்கள் இதைக் கேட்ட போது. மறுபடியும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றனர். உண்மை, அப்படித்தான். அவர்கள் வேத வாக்கியங்களைப் பின்பற்றினர். 143இன்று காலை நடந்த பிரதிஷ்டை ஆராதனையில் நான் கூறின விதமாக, மோசே பரலோகத்தில் கண்ட மாதிரியை அனுசரித்து, அதற்கு அடையாளமாக இவ்வுலகில் ஒரு கூடாரத்தை நாட்டினான். சாலொமோன் தேவாலயத்தைக் கட்டினபோது, அவன் என்ன செய்தான்? அவன் மோசே நாட்டின கூடாரத்தின் மாதிரியைப் பின்பற்றி, வேத வாக்கியங்களை அனுசரித்தான். இக்கடைசி நாட்களுக்காக தேவன் தம்முடைய ஆலயத்திற்கு இந்த ஆலயத்திற்கு; பரிசுத்த ஆவி, ''ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம் பண்ணினீர்'' (எபி.10:5). பரிசுத்த ஆவி பெந்தெகொஸ்தே நாளன்று விழுந்தபோது, ''நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது'' என்னும் செய்தி அளிக்கப்பட்டது. (அப். 2:38-39). உங்கள் போதகரை நீங்கள் டாக்டர் என்று அழைக்க விரும்பினால், டாக்டர் சீமோன் பேதுரு மருந்து சீட்டு ஒன்றை எழுதினார், நித்தியத்திற்கான மருந்து சீட்டு. அது தான் பிணியாளிகளை குணமாக்குகிறது. 144இந்த போலி மருத்துவர்கள் ஸ்தாபனங்களின் மூலம் வேறெந்த மருந்தையாவது சீட்டில் எழுதித் தரட்டும். அதன் காரணமாகத்தான் அவர்கள்... நீங்கள் சரியான மருந்தை சேர்க்காவிட்டால்... நீங்கள் மருந்துச் சீட்டில் அதிகமான மருந்தை சேர்த்துவிட்டால்... அதிகமான விஷத்தை சேர்த்துவிட்டால் நீங்கள் நோயாளியை கொன்றுவிடுவீர்கள். அதே சமயத்தில் நீங்கள் வேண்டிய அளவு மருந்து சேர்க்காவிட்டாலும், விஷத்திற்குப் பரிகாரமாக அல்ல... அது நோயாளிக்கு எந்த நன்மையையும் செய்யாது. உங்கள் மருத்துவருக்கு எப்படி மருந்துச் சீட்டை எழுத வேண்டுமென்று தெரியும். பரிசுத்த ஆவியாகிய கிறிஸ்து, மருந்து சீட்டு எழுதுபவர், அதை எழுதிக் கொடுத்திருக்கிறார். அதனுடன் எதையும் கூட்டாதீர்கள், அல்லது அதிலிருந்து எதையும் எடுத்துப் போடாதீர்கள். அது எப்படி எழுதப்பட்டுள்ளதோ, அதே விதமாக மருந்தை உட்கொள்ளுங்கள். அது எல்லா நோய்களுக்கும் பரிகாரமாக அமைந்துள்ளது. கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக! அவரை நீங்கள் நேசிக்கின்றீர்களா? ஆமென். நேசிக்கிறேன் நேசிக்.... (ஒலி நாடாவில் காலி இடம் - ஆசி) முன்பு அவர் நேசித்ததால்; சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில். 145இதை நாம் மௌனமாக இசைக்கும் போது, நீங்கள் திரும்பி, உங்கள் பக்கத்திலுள்ளவர்களுடன் கை குலுக்குங்கள். அவரும் சஞ்சாரியாயிருந்து, கடந்து செல்லுகிறவராயிருக்கிறார். நேசிக்கிறேன், நேசிக்கிறேன் முன்பு அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில். நேசிக்கிறேன், நேசிக்கிறேன் முன்பு அவர் நேசித்ததால்; சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில். நேசிக்கிறேன் (இப்பொழுது நாம் பாடுவோம்) நேசிக்கிறேன் முன்பு அவர் நேசித்ததால்; சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில். 146உங்களை நான் போதகரிடம் ஒப்படைக்கும் இந்நேரத்தில், நாம் தலைவணங்கி, நமது கண்களை மூடி, நமது கரங்களையும் சத்தத்தையும் தேவனிடத்தில் உயர்த்துவோமாக. நீங்கள் வந்திருந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி. நாங்கள் ஒரு ஸ்தாபனமல்ல. எங்களுக்கு அன்பைத் தவிர வேறு பிரமாணம் இல்லை, கிறிஸ்துவைத் தவிர வேறு கோட்பாடு இல்லை, வேதாகமத்தைத் தவிர வேறு புத்தகம் இல்லை. நாங்கள் அங்கத்தினர்களை சேர்ப்பதில்லை. நம்மை எல்லா அவிசுவாசத்தினின்றும் சுத்திகரிக்கும் இயேசுவின் இரத்தத்தின் மூலம் நாங்கள் ஐக்கியம் கொள்ளுகிறோம். அவ்வளவு தான். சரி, நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து இப்பொழுது பாடுவோம்: “நேசிக்கிறேன், நேசிக்கிறேன்.'' (கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக! நீங்கள் மறுபடியும் வந்து எங்களை சந்தியுங்கள்.) “முன்பு அவர் நேசித்ததால்.'' சரி, போதகர் நெவில், கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக! “சம்பாதித்தார் என் .......”